Skip to main content

“ஆந்திர மாநில மக்கள் மன்னிக்கவே மாட்டார்கள்” - செல்வப்பெருந்தகை ஆவேசம்!

Published on 30/06/2024 | Edited on 30/06/2024
People of Andhra State will never forgive

ஆந்திராவில் உள்ள பாபட்லா மாவட்டத்தில் அம்மாநிலத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டிக்கு சிலை ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. இந்த சிலைக்கு அடையாளம் தெரியாத மர்மநபர்கள் நேற்று (29.062024) தீ வைத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த சம்பவத்திற்குத் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான கு. செல்வப்பெருந்தகை தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமது இளமைப்பருவம் முதல் காங்கிரஸ் இயக்கத்தில் இணைந்து ஆந்திர மாநிலம் முழுவதும் யாத்திரை மேற்கொண்டு மக்களைச் சந்தித்து உரையாடி, நம்பிக்கை பெற்று சோனியா காந்தியின் ஆதரவோடு அம்மாநிலத்தின் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுச் சிறப்பாக பணியாற்றியவர் மறைந்த ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி. அம்மாநிலத்தில் பரவியிருந்த பிற்போக்கு சீர்குலைவு சக்திகளை முறியடித்து, ஆந்திர மாநிலத்தை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் சென்றவர். இவர் ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்தது ஆந்திர மாநிலத்திற்கு மட்டுமல்ல, இந்தியாவிற்கே பேரிழப்பு. அத்தகைய வலிமையான தலைமையை இழந்ததனால்தான் இன்றைக்கு மொழியின் அடிப்படையில் அமைக்கப்பட்ட ஆந்திர மாநிலம் இரு கூறுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. 

People of Andhra State will never forgive

ஒன்றுபட்ட ஆந்திராவின் வளர்ச்சிக்கு தம்மை அர்ப்பணித்துக்கொண்ட மறைந்த ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டியின் சிலையைத் தீ வைத்துச் சேதப்படுத்தியிருப்பதைத் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன். ஒட்டுமொத்த ஆந்திர மாநில வளர்ச்சிக்கு அடித்தளமிட்ட மறைந்த தலைவரை இழிவுபடுத்துகிற வகையில் அவரது சிலையைச் சேதப்படுத்தியதை விட நன்றி கெட்ட செயல் வேறு எதுவும் இருக்க முடியாது. அப்படிப்பட்ட செயலை செய்தவர்கள் எவராக இருந்தாலும் ஆந்திர மாநில மக்கள் அவர்களை மன்னிக்கவே மாட்டார்கள்” எனத் தெரிவித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்

 

Next Story

“சம்பளம் வேண்டாம்” - ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் 

Published on 02/07/2024 | Edited on 02/07/2024
Andhra Pradesh Deputy Chief Minister Pawan Kalyan refused salary

சமீபத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலோடு ஒடிசா, ஆந்திரப் பிரதேசம், சிக்கிம், அருணாச்சலப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தலும் நடைபெற்றது. இதில் ஆந்திரப் பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தலில் ஆட்சியில் இருந்த ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்த்து தெலுங்கு தேசம் கூட்டணி அபார வெற்றி பெற்றிருந்தது. 175 தொகுதிகள் கொண்ட ஆந்திராவில், தெலுங்கு தேசம் கட்சி 135 இடங்களிலும், அதன் கூட்டணி கட்சிகளான ஜன சேனா கட்சி 21 இடங்களிலும், பா.ஜ.க 8 இடங்களிலும்  வெற்றி பெற்றது.  

அந்த வகையில் சட்டமன்றத் தேர்தலில் சந்திரபாபு நாயுடு ஆந்திர முதல்வராக கடந்த மாதம் 12ஆம் தேதி பதவியேற்றுக் கொண்டார். இதனையடுத்து, ஆந்திர அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கப்பட்டன. அதன்படி முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்குச் சட்டம் மற்றும் ஒழுங்கு, பொது நிறுவனங்கள் மற்றும் அமைச்சர்களுக்கு ஒதுக்கப்படாத அனைத்து துறைகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டன. ஜன சேனா கட்சியின் தலைவரும், நடிகருமான பவன் கல்யாண் துணை முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். 

இந்த நிலையில், தனக்கு வழங்கப்பட்ட சம்பளத்தை வாங்க மறுத்துள்ளதாக பவன் கல்யாண் தெரிவித்துள்ளார். நலன்புரி ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தில் பங்கேற்ற பிறகு ஒரு கூட்டத்தில் பங்கேற்று பவன் கல்யாண் கூறியதாவது, “முகாம் அலுவலகத்தை புதுப்பிப்பதற்காகவும் பழுதுபார்ப்புக்காகவும் என்ன செய்ய வேண்டும் என்று அதிகாரிகள் என்னிடம் கேட்டனர். நான் அவர்களிடம், ஒன்னும் செய்ய வேண்டாம். அதை அப்படியே விடுங்கள் என்று சொன்னேன். புதிய மரச்சாமான்கள் எதுவும் வாங்க வேண்டாம், தேவைப்பட்டால் நானே கொண்டு வந்து தருகிறேன் என்று சொன்னேன்.

மூன்று நாட்கள் சபையில் கலந்துகொள்வதற்காக எனது சம்பளம் ரூ.35,000 தொடர்பான ஆவணங்களில் என்னிடம் கையொப்பம் பெற செயலகத்தில் இருந்து அதிகாரிகள் வந்தனர். ஆனால், நான் சம்பளம் வாங்க முடியாது என்று கூறிவிட்டேன். நான் அமைச்சராக இருக்கும் பஞ்சாயத்து ராஜ் துறையில் போதிய நிதி இல்லை என்பதால், அந்தச் சலுகைகளை மறுத்துவிட்டேன்” என்று கூறினார். 

Next Story

' 40 பேரும் அமைதியாக இருந்தது வருத்தமளிக்கிறது' - தமிழிசை வேதனை

Published on 02/07/2024 | Edited on 02/07/2024
'It is sad that all 40 people were silent'- Tamilisai Angam

நேற்று நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி மற்றும் பாஜக உறுப்பினர்கள் இடையே காரசார விவாதம் நடைபெற்றது. நீட் தேர்வு, அக்னி வீரர் திட்டம், பணமதிப்பிழப்பு உள்ளிட்ட பல்வேறு முடிவுகள் குறித்து ராகுல்காந்தி பாஜகவுக்கு கேள்வி எழுப்பி இருந்தார். அதேபோல் பாஜகவினர் உண்மையான இந்துக்கள் அல்ல. உண்மையான இந்துக்கள் வெறுப்பு, வன்மம் ஆகியவற்றை தூண்ட மாட்டார்கள். ஆனால் பாஜகவினர் வெறுப்பை விதைக்கிறார்கள். 24 மணி நேரமும் பாஜகவினர் வெறுப்பை விதைத்து வருகின்றனர். பாஜகவும், பிரதமர் மோடியும் இந்துக்களின் ஒட்டுமொத்த பிரதிநிதி அல்ல' என பல்வேறு குற்றச்சாட்டுகளை சாரம்சமாக வைத்து ராகுல் காந்தி உரையாற்றியிருந்தார். அதேநேரம் இந்துக்கள் குறித்த பேச்சுக்கு ராகுல் மன்னிப்பு கேட்கவேண்டும் என வலியுறுத்திய பாஜக எம்பிக்கள், ராகுலின் கேள்விகளுக்கு பதிலளித்ததோடு கண்டங்களையும் தெரிவித்தனர். இதனால் நாடாளுமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இப்படி காரசாரமான விவாதங்கள், பதில்கள் நாடாளுமன்றத்தில் நிகழ்ந்ததால் என்றும் இல்லாத அளவுக்கு நள்ளிரவு வரை மக்களவையில் விவாதம் நடைபெற்றது.  இன்று நடைபெறும் நிகழ்வில் நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி இன்று பிற்பகலுக்குப் பிறகு உரையாற்றுவார் என அறிவிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசியதில் சில பகுதிகள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்துக்கள் குறித்தும் பிரதமர் மோடி குறித்தும் பேசிய சில பகுதிகள் அவைக்குறிப்பில் இடம் பெறவில்லை. அதேபோல் பாஜக, ஆர்.எஸ்.எஸ் ஆகியவை குறித்து ராகுல் முன்வைத்த விமர்சனங்களும் அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தூத்துக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், ''தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அங்கீகாரம் கொடுக்கப்பட்டிருந்தால் பாராளுமன்றத்தில் இன்னும் சற்று ஆரோக்கியமான ஒரு சூழ்நிலை நிலவி இருக்கும். கடுமையான கண்டனத்தை ராகுல் காந்தி அவர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். இந்துக்கள் என்றாலே வன்முறையாளர்கள் என்று சொல்லி ஒட்டுமொத்தமான இந்துக்களையும் அவர் மிகவும் மோசமாக விமர்சித்திருக்கிறார். இதற்கு எங்களுடைய கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். அது மட்டுமல்ல ஒரு பாராளுமன்றத்திற்கு என்று விதிமுறைகள் இருக்கிறது; நடைமுறைகள் இருக்கிறது. இதையெல்லாம் மீறி படம் காண்பித்து படம் காண்பித்துக் கொண்டிருந்தார். நேற்று மூன்று அமைச்சர்கள் ராகுல் காந்திக்கு எழுந்து பதில் சொன்னார்கள் என்பதை சிலர் எதிர்மறையாக சொல்கிறார்கள்.

'It is sad that all 40 people were silent'- Tamilisai Angam

ராகுல் காந்தி எல்லாவற்றையும் தவறாக சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது அமைச்சர்கள் குறுக்கிட்டு பதிலளிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். அக்னீவீர் தியாகிகள் நிச்சயமாக நாட்டிற்காக உயிரை ஈந்தவர்கள். அவர்களுக்கு எந்த இழப்பீடும் கொடுக்கவில்லை என்று தவறான கருத்தை ராகுல் காந்தி சொன்னார். உடனே அத்துறையின் அமைச்சர் ராஜ்நாத் சிங் எழுந்து 'இல்லை ஒரு கோடி ரூபாய் அவர்களுக்கு இழப்பீடு கொடுக்கப்பட்டிருக்கிறது. அவர்களின் உயிருக்கு ஈடு இணை இல்லை. இருந்தாலும் கொடுக்கப்பட்டிருக்கிறது' என்று தெரிவித்தார். அதேபோல் விவசாய திருத்தச் சட்டம் தொடர்பான தவறான கருத்தையும் ராகுல் காந்தி சொன்னார். அதற்கும் அமைச்சர் பதிலளித்தார். அதேபோல் உள்துறை அமைச்சரும் அவர் சொன்ன கருத்துக்கு பதிலளிக்க வேண்டி வந்தது. ஆனால் நேற்று பாராளுமன்றத்தில் நீங்கள் பார்த்தது ஏதோ தனக்கு விளம்பரம் தேடிக்கொள்ள வேண்டும் என்பதற்காக, முதல் பேச்சை இப்படித்தான் பேச வேண்டும் என்று ஒரு பயிற்சியின்மையோடு, முதிர்ச்சியின்மையோடு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசினார் என்பதாகத்தான் பார்க்க முடிகிறது.

எல்லாவற்றையும் விட மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்தக்கூடியது தமிழகத்தில் இருந்து பாண்டிச்சேரி உட்பட 40 எம்.பிக்கள் அங்கிருந்தனர். இந்துக்களின் உணர்வுகள் புண்படும் அளவிற்கு ராகுல் காந்தி பேசினாலும் இந்துக்களின் வாக்குகளை எல்லாம் வாங்கியவர்கள் ஒரு எதிர்ப்பு குரல் கூட கொடுக்காமல் அமர்ந்திருந்ததுதான் நமக்கெல்லாம் வேதனை. இவர்கள் அப்படித்தான் செய்வார்கள். 40 பேர் அங்கே சென்றதால் தமிழகத்திற்கு எந்தப் பலனும் இருக்காது. சத்தம் போடுவார்கள் அவ்வளவுதான்'' என்றார்.