
கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் வாகனங்கள் நிறுத்துவதற்கு கட்டணம் வசூலிக்க வேறு எவருக்கும் உரிமையில்லை என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டம், திருப்பாம்புரத்தில் உள்ள சேஷபுரீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் வாகனங்கள் நிறுத்துவதற்கு, கிராம பஞ்சாயத்து தலைவர் கட்டணம் வசூலித்துவருவதாக கூறி ராமு என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, சேஷபுரீஸ்வரர் கோவில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளதால், கோவில் நிலத்தில் வாகனங்கள் நிறுத்த, பஞ்சாயத்து தலைவர் கட்டணம் வசூலிப்பதற்கு எந்த அனுமதியும் கிடையாது. கோவில் நிலத்தில் வாகனங்கள் நிறுத்த கட்டணம் வசூலிக்க எவருக்கும் உரிமையில்லை என உத்தரவிட்டது.
மேலும், இதுவரை கட்டணமாக வசூலிக்கப்பட்ட தொகை குறித்த கணக்குகளைத் தாக்கல் செய்ய பஞ்சாயத்து தலைவருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வசூலிக்கப்பட்ட தொகையை அறநிலையத்துறை வசம் ஒப்படைக்கவும் உத்தரவிட்டு விசாரணையைத் தள்ளிவைத்தனர்.