கார் விபத்தில் இறந்த விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் உடலுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணைமுதல்வர் ஓபிஎஸ் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

நேற்று விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்த தைலாபுரம் தோட்டத்திற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி துணை முதல்வர் ஓபிஎஸ் விருந்திற்காக வந்தனர். அவர்களை வரவேற்பதற்காக வந்த விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜேந்திரன். அதனையடுத்து ஜக்காம்பட்டி அருகே உள்ள சர்க்யூட் டவரில் உள்ள விருந்தினர் மாளிகையில் நேற்று இரவு தங்கினார்.
அதனையடுத்து இன்று அதிகாலை திண்டிவனத்திற்கு திரும்பிக் கொண்டிருக்கும் பொழுது திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை நடுவே அமைக்கப்பட்டுள்ள தடுப்புச்சுவரில் அவரது கார் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதையடுத்து சட்டத்துறை அமைச்சர் சிவி.சண்முகம் இறந்த எம்.பி ராஜேந்திரன் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். மேலும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு ஆறுதல் கூறினார். எம்.பிராஜேந்திரன் இதற்கு முன் மாவட்ட பஞ்சாயத்து சேர்மேனாக இருந்துள்ளார். சிவி.சண்முகத்தின் ஆதரவாளர் என்ற அடிப்படையில் இவருக்கு எம்.பி சீட் கிடைத்தது.


இந்நிலையில் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் உள்ள ராஜேந்திரன் உடலுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணைமுதல்வர் ஓபிஎஸ் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தனர். எம்.பி ராஜேந்திரனின் இறுதி சடங்கானது அவரது சொந்த ஊரான அதானாம்பட்டு கிராமத்தில் நடக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளன.