Skip to main content

ஐஐடியில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மாற்றாக சமஸ்கிருத வாழ்த்து பாடியதற்கு ராமதாஸ் கண்டனம்!

Published on 26/02/2018 | Edited on 27/02/2018
Ramadhoss

 சென்னையில் உள்ள இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் (ஐ.ஐ.டி) இன்று நடைபெற்ற  நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்படுவதற்கு மாற்றாக சமஸ்கிருத வாழ்த்து பாடப்பட்டுள்ளது. தமிழகத்தில் தமிழை அழித்து, சமஸ்கிருதத்தை வளர்ப்பதற்கான இந்த முயற்சி கண்டிக்கத்தக்கதாகும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மத்திய அரசு சார்பில் தேசியத் துறைமுகம், நீர்வழிகள், கடலோரத் தொழில்நுட்ப மையம் ஆகியவற்றை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா சென்னை ஐ.ஐ.டியில் இன்று காலை நடைபெற்றது. மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதிக் கட்கரி, இணை அமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துக்குப் பதில் ‘மகாகணபதி’  என்று தொடங்கும் சமஸ்கிருத மொழி வாழ்த்துப் பாடலை மாணவர்கள் பாடினார்கள். தமிழ்நாட்டில் உள்ள கல்வி நிறுவனங்களில் நடைபெறும் நிகழ்ச்சியாக இருந்தாலும், அரசு விழாக்களாக இருந்தாலும் தமிழ்த்தாய் வாழ்த்து தான் முதலில் இசைக்கப்பட வேண்டும். அதற்கு மாறாக சமஸ்கிருத வாழ்த்துப் பாடலை திட்டமிட்டு இசைத்ததை ஏற்றுக் கொள்ள முடியாது. தமிழை புறக்கணிக்கும் வகையில் சமஸ்கிருதப் பாடலை இசைத்ததற்காக சென்னை ஐ.ஐ.டி நிர்வாகம் மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும்.

இந்த நிகழ்வை எதிர்பாராமல் நடந்த நிகழ்வாக பார்க்க முடியவில்லை. மாறாக, தமிழகத்தில் இந்தி மற்றும் சமஸ்கிருதத்தைத் திணிக்கும் நோக்குடன் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட ஏராளமான முயற்சிகளின் தொடர்ச்சியாகவே ‘மகாகணபதி’ சமஸ்கிருதப் பாடல் பாடப்பட்டதாகத் தோன்றுகிறது.

சமஸ்கிருத வாழ்த்துப் பாடல் பாடப்பட்டதை விட அதற்காக ஐ.ஐ.டி இயக்குநர் பாஸ்கர் ராமமூர்த்தி அளித்துள்ள விளக்கம் மிகவும் கொடுமையானது. ‘‘சமஸ்கிருத பாடலை பாட ஐ.ஐ.டி. நிர்வாகம் ஏற்பாடு செய்யவில்லை. மாணவர்களே தாமாக வந்து பாடினர்’’ என்று அவர் கூறியதை வைத்துப் பார்க்கும் போது இது திட்டமிட்டு தமிழுக்கு இழைக்கப்பட்ட அவமானம் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. 

ஐ.ஐ.டி வளாகத்தில் ஜனநாயகம் என்பதற்கு இடமில்லை என்பதும், மாணவர்கள் தன்னிச்சையாக எதையும் செய்து விட முடியாது என்பதும் அனைவரும் அறிந்ததே. ஐ.ஐ.டி நிர்வாகத்தின் விருப்பத்திற்கு மாறாக செயல்பட்ட மாணவர்கள் கொடூரமாகத் தாக்கப்பட்ட நிகழ்வுகள் அண்மையில் கூட நடந்துள்ளன. அவ்வாறு இருக்கும் போது மாணவர்கள் மீது பழிபோட்டு தப்பித்துக் கொள்ள நிர்வாகம் முயலக்கூடாது.

சென்னை ஐஐடி அமைந்துள்ள நிலம் தமிழக அரசால் வழங்கப்பட்டதாகும். ஆனால், அந்த வளாகம் தமிழுக்கும், தமிழகத்தின் உணர்வுகளுக்கு எதிராக செயல்படுவதை அனுமதிக்க முடியாது. எனவே, ஐ.ஐ.டி நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்படாததற்காக மன்னிப்பு கேட்பதுடன், இனிவரும் காலங்களில் ஐ.ஐ.டி வளாகத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்படுவது கட்டாயமாக்கப்பட வேண்டும். இதை உறுதி செய்ய தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

ஊழல் செய்வதற்காக பல்கலைக்கழக ஒப்பந்த பணியாளர்களை நீக்குவதா? ராமதாஸ் கண்டனம்

Published on 19/10/2018 | Edited on 19/10/2018
Ramadoss



மனோண்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்கள் 42 பேர் திடீரென பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஊழல் செய்வதற்காக பல்கலைக்கழக ஒப்பந்த பணியாளர்களை நீக்குவதா? என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
 

திருநெல்வேலி மனோண்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்த ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் 42 பேர் திடீரென பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோதமான, மனிதநேயமற்ற இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கதாகும். 
 

மனோண்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்கள் 42 பேர் கடந்த 2008ஆம் ஆண்டு முறையான தேர்வுகளின் மூலம் நியமிக்கப்பட்டனர். கடந்த 10 ஆண்டுகளாக அவர்கள் தொடர்ந்து பணியாற்றி வந்தனர். அவர்களது பணியில் எந்த குறையும் காணப்படவில்லை. 10 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி வரும் தங்களை பணிநிலைப்புச் செய்யவேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், திடீரென பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதற்காக பல்கலைக் கழக நிர்வாகம் கூறியுள்ள காரணம் அபத்தமானது மட்டுமின்றி, ஏற்க முடியாததும் ஆகும்.
 

தகுதியற்ற ஒப்பந்தப் பணியாளர்களை பணியமர்த்தக்கூடாது என்று கடந்த 2006ஆம் ஆண்டில் கர்நாடக உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பைக் காரணம் காட்டியும், 42 பணியாளர்களும் தகுதியில்லாமல் ஒப்பந்தப் பணியாளர்களாக பணியாற்றி வருகின்றனர் என்று கூறியும் அவர்களைப் பல்கலைக் கழக நிர்வாகம் பணிநீக்கம் செய்துள்ளது. கர்நாடக உயர்நீதிமன்றம் இத்தீர்ப்பை வழங்கி 2 ஆண்டுகளுக்குப் பிறகுதான் இவர்கள் பணியமர்த்தப்பட்டனர். முறையாக நேர்காணல் நடத்தப்பட்டு, கல்வித் தகுதி சரிபார்க்கப்பட்ட பிறகுதான் அனைவரும் பணியமர்த்தப்பட்டனர். அதுமட்டுமின்றி, கடந்த 10 ஆண்டுகளாக அவர்களுக்கு கொடுக்கப்பட்ட பணியை எந்த குறையும் இல்லாமல் செய்து வந்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் முறையான கல்வித் தகுதியும் உள்ளது. அதுமட்டுமின்றி, பல்கலைக் கழகத்தின் தற்போதைய துணைவேந்தர் பாஸ்கரன், கடந்த 2016ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பதவியேற்றது முதல் இப்போது வரையிலான இரண்டரை ஆண்டுகளில் இவர்களின் கல்வித் தகுதி மற்றும் பணி குறித்து எந்த விமர்சனமும் செய்யவில்லை. அவ்வாறு இருக்கும்போது, திடீரென அவர்களுக்கு தகுதி இல்லை என்று கூறி பணிநீக்கம் செய்வது அப்பட்டமான பழிவாங்கும் நடவடிக்கை ஆகும்.
 

ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் 42 பேரின் பணி நீக்கத்திற்காக நிர்வாகம் கூறியுள்ள காரணங்கள்  எதுவும் உண்மையல்ல. மாறாக அவர்களுக்கு பதில் புதிய பணியாளர்களை நியமித்தால் ஊழல் செய்து பணம் சேர்க்கலாம் என்ற துணைவேந்தரின் துடிப்பு தான் காரணம் என்று கூறப்படுகிறது. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் பாஸ்கரன் வரும் பிப்ரவரி மாதம் ஓய்வு பெறவுள்ளார். அதற்குள் காலியாக உள்ள பணியிடங்கள் அனைத்தையும் நிரப்பி, ஊழல் செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் 8 பேராசிரியர்கள், 16 இணைப் பேராசிரியர்கள், 22 உதவிப் பேராசிரியர்கள் என 46 பணியிடங்களை நிரப்ப கடந்த ஜூலை மாதம் அறிவிக்கை வெளியிட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக தெரிகிறது. அடுத்தக்கட்டமாக 63 இளநிலை உதவியாளர்களை நியமிக்கும் நோக்குடன் தான் ஒப்பந்தப் பணியாளர்களை பணி நீக்கம் செய்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
 

மனோண்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தராக கடந்த 2016-ஆம் ஆண்டு பாஸ்கரன் நியமிக்கப்பட்ட நாளில் இருந்தே அவர் மீது ஏராளமான குற்றச்சாட்டுகள் எழுப்பட்டு வருகின்றன. துணைவேந்தராக நியமிக்கப்பட்ட சில மாதங்களிலேயே, ஆசிரியர்கள் நியமனத்தை தீவிரப்படுத்தி, 2016 நவம்பர் மாதத்தில் 8 பேராசிரியர்கள், 17 இணைப் பேராசிரியர்கள், 29 உதவிப் பேராசிரியர்கள் என 54 பணியிடங்கள் நிரப்பப்பட்டன. இதற்காக மட்டும் ரூ.22 கோடி கையூட்டு வசூலிக்கப்பட்டதாகவும். இப்போதும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்கள் நியமனத்தில் பெருமளவில் ஊழல் செய்ய பேரம் பேசப்படுவதாக கூறப்படுகிறது. இந்த ஊழல் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.
 

பொதுவாக துணைவேந்தர்கள் ஓய்வு பெறுவதற்கு 6 மாதங்கள் முன்பாக பணி நியமனங்களை மேற்கொள்ளக்கூடாது என்பது மரபு ஆகும். ஆனால், இன்னும் 4 மாதங்களில் ஓய்வுபெறவுள்ள பாஸ்கரன் புதிய நியமனங்களை மேற்கொள்வதும் அதற்கு வசதியாக தற்காலிக பணியாளர்களை நீக்குவதும் சட்டவிரோதமானவை. பல்கலைக்கழகங்களில் ஊழலை ஒழிப்பது தான் தமது நோக்கம் என்று கூறி வரும் தமிழக ஆளுனர் பன்வாரிலால் புரோகித் இந்த விஷயத்தில் தலையிட்டு, தற்காலிக பணியாளர்கள் பணிநீக்கத்தை ரத்து செய்ய வேண்டும். அவர்களை பணி நிலைப்பு செய்து, அதன்பின்  மீதமுள்ள இடங்களை மட்டும் நேர்மையான முறையில் நிரப்ப ஆளுனர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார். 

 

 

 

 

Next Story

சென்னை புதிய விமான நிலையம் வருமா... வராதா? தமிழக அரசுக்கு ராமதாஸ் கேள்வி

Published on 03/10/2018 | Edited on 03/10/2018
New airport



சென்னை புதிய விமான நிலையம் வருமா? வராதா? என தமிழக அரசு விளக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
 

சென்னையில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் பேசிய முதல்வர், சென்னைக்கு அருகில் உலகத்தரம் வாய்ந்த புதிய விமான நிலையம் அமைக்கப்படும் என்று அறிவித்திருக்கிறார். புதிய விமான நிலையம் அமைப்பது சென்னையின் உடனடித் தேவை எனும் நிலையில் முதலமைச்சரும், விமான நிலைய அதிகாரிகளும் கூறியுள்ள தகவல்கள் முன்னுக்குப்பின் முரணாக இருப்பது குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளன.
 

சென்னை விமான நிலையம் பயணியர் போக்குவரத்து, சரக்குப் போக்குவரத்து ஆகியவற்றில் அதன்  முழுத் திறனையும் வரும் 2024-ஆம் ஆண்டுக்குள் எட்டிவிடும் என்பதால் அதற்குள்ளாக புதிய விமான நிலையம் அமைக்கப்படுவது அவசியமாவதாகவும், அதற்குள் சென்னைக்கு அருகில் உலகத்தரம் வாய்ந்த புதிய பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும் என்றும் முதலமைச்சர் பழனிச்சாமி கூறியிருந்தார். 
 

ஆனால், அதற்கு இரு நாட்கள் முன்பாக கடந்த 28-ஆம் தேதி சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சென்னை விமான நிலைய இயக்குனர் சந்திரமவுலி, சென்னையில் இரண்டாவது விமான நிலையம் அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டு விட்டதாக தெரிவித்தார். திருப்பெரும்புதூரில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டம் இருந்ததாகவும், அதற்குத் தேவையான நிலத்தை தமிழக அரசு கையகப்படுத்தித் தரவில்லை என்பதால் தான் அத்திட்டம் கைவிடப்பட்டதாகவும் அவர் கூறினார். புதிய விமான நிலையம் அமைக்கப்படாததால் அதிகரிக்கும் பயணியர் நெரிசலை சமாளிப்பதற்காகத் தான் மீனம்பாக்கம் விமான  நிலையத்தை விரிவுபடுத்தும் பணிகள் முழுவீச்சில் தொடங்கப்படவுள்ளதாகவும் சந்திரமவுலி தெரிவித்தார்.

 

ramadoss


 

புதிய விமான நிலையம் அமைப்பதற்கான நிலத்தை தமிழக அரசு கையகப்படுத்தித் தரவில்லை; அதனால் தான் புதிய விமான நிலையம் கைவிடப்பட்டு விட்டது என்று விமான நிலைய இயக்குனர் கூறுகிறார். ஆனால், 2024-ஆம் ஆண்டுக்குள் புதிய விமான நிலையம் கட்டி முடிக்கப்பட்டு விடும் என்று முதல்வர் பழனிச்சாமி கூறுகிறார். இந்த இருவரில் யாருடைய கூற்றை நம்புவது? என்பதில் தான் குழப்பம் நிலவுகிறது,


திருப்பெரும்புதூரில் புதிய விமானநிலையம் அமைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது உண்மை. ஆனால், பல ஆண்டுகளாகியும் விமான நிலையம் அமைப்பதற்குத் தேவையான நிலத்தை தமிழக அரசால் கையகப்படுத்தித் தர முடியவில்லை. ஒரு கட்டத்தில் கும்மிடிப்பூண்டி, உத்திரமேரூர், மதுராந்தகம், திருப்பெரும்புதூர் ஆகிய 4 பகுதிகளில் நிலம் தேர்வு செய்யப்பட்டு விட்டதாகவும், அவற்றில் ஒன்றில் விமான நிலையம் அமைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. ஆனால், இப்போது திடீரென புதிய விமான நிலையம் அமைக்கப்படாது என்று மத்திய அரசு கூறினால், அதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது.
 

இந்தியாவில் சாதாரண நகரங்களில் கூட இரண்டாவது விமான நிலையம் அமைக்கப்பட்டுவிட்டது.  ஆனால், இந்தியாவின் நான்காவது பெரிய நகரமான சென்னையில் இன்னும் புதிய விமான நிலையம் அமைக்கப் படவில்லை. சென்னைக்கு வந்து செல்லும் பயணியர் விமானங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால்  சென்னையில் புதிய விமான நிலையம் கண்டிப்பாகத் தேவை என்று கடந்த 2015-ஆம் ஆண்டு ஆகஸ்ட்  மாதம் முதல் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். திருப்பெரும்புதூரில் புதிய விமான நிலையத்திற்காக 7 கி.மீ. நீளத்திற்கும், 4 கி.மீ. அகலத்திற்கும் பறந்து விரிந்து கிடக்கும் 7,000 ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. சென்னையின் இரண்டாவது விமான நிலையத்தை அமைக்க திருப்பெரும்புதூரை விட சிறந்த இடம்  இல்லை என இந்திய விமான நிலையங்கள் ஆணையம் கூறி விட்ட பிறகும் அங்குள்ள இடத்தை கையகப்படுத்திக் கொடுக்காதது ஏன்? என்பதை மாநில ஆட்சியாளர்கள் விளக்க வேண்டும்.
 

ஒருவேளை திருப்பெரும்புதூரில் நிலம் கையகப்படுத்த முடியவில்லை என்றால் உத்திரமேரூர், மதுராந்தகம், கும்மிடிப்பூண்டி ஆகியவற்றில் எங்காவது விமான நிலையம் அமைக்கலாம் எனும் சூழலில், சென்னையில்  புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் கூறுவது வியப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்துகிறது. இது இப்படியென்றால், 2024&ஆம் ஆண்டுக்குள் புதிய விமான நிலையம் அமைக்கப்படும் என்று எந்த அடிப்படையில் முதலமைச்சர் கூறுகிறார் என விளக்கம் வேண்டும்.
 

சென்னைக்கு இரண்டாவது விமான நிலையம் என்பது அவசர, அவசியத் தேவை ஆகும். அதில் குழப்பங்கள் நிலவும் நிலையில், புதிய விமானம் வருமா.... வராதா? என்பது குறித்து முதலமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும். புதிய விமான நிலையம் வருகிறது என்றால் அது எங்கு அமையும்? அதற்கான நிலம் அடையாளம் காணப்பட்டு விட்டதா? அப்படியானால் புதிய விமான நிலையம் அமைக்கும் பணிகள் எப்போது தொடங்கி எப்போது நிறைவடையும்? என்பதையும் முதலமைச்சர் விளக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.