Skip to main content

வீட்டில் தனியாக இருந்த மூதாட்டிக்கு நேர்ந்த கொடூரம்; கோவையில் பரபரப்பு

Published on 01/09/2023 | Edited on 01/09/2023

 

  old woman passed away who was alone at home

 

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டிக்கு அருகே அமைந்துள்ளது கணியூர் கிராமம். இந்த பகுதியைச் சேர்ந்தவர் கணபதியப்பன். 76 வயதான இவர், தனக்கு சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். இவரது மனைவி பாப்பம்மாள். இந்த தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார். இந்நிலையில், கணபதியப்பன் - பாப்பம்மாள் தம்பதி தனது மகள் மற்றும் பேரன், பேத்தி என 5 பேரும் கணியூர் சுங்கச்சாவடி அருகே ஒரு தோட்டத்து வீட்டில் வசித்து வருகின்றனர்.

 

இத்தகைய சூழலில், இவர்கள் கணியூர் பகுதியில் புதிய வீடு ஒன்றை கட்டி வருகின்றனர். தற்போது, அந்த வீட்டை பார்ப்பதற்காக கணபதியப்பன் மற்றும் அவரது மகள் பேரன் பேத்தியுடன் கடந்த 31 ஆம் தேதியன்று கணியூருக்கு சென்றுள்ளனர். அப்போது, வீட்டில் மூதாட்டி பாப்பம்மாள் மட்டும் தனியாக இருந்தார். இதையடுத்து, புதிய வீட்டுக்கு சென்ற கணபதியப்பன் அவரது மகள் ஆகியோர் அதன் கட்டுமான பணிகளை பார்த்த பிறகு, அன்றிரவு 8 மணி அளவில் மீண்டும் வீட்டுக்கு வந்துள்ளனர்.

 

அந்த நேரத்தில், வீட்டில் தனியாக இருந்த பாப்பம்மாள் வாசலில் வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில்  உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். ஒருகணம், இதை பார்த்து அதிர்ச்சியடைந்த கணபதியப்பன் என்ன செய்வது என தெரியாமல் பதறி போயுள்ளார். மேலும், பாப்பம்மாளின் உடலை பிடித்துக்கொண்டு கண்ணீர்விட்டு கதறியுள்ளார். இதனிடையே, இவர்களுடைய சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் படுகாயமடைந்த பாப்பம்மாளை மீட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.

 

அப்போது, பாப்பம்மாளை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். ஒருகணம், இதை கேட்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அவரது உடலை பிடித்துக்கொண்டு கண்ணீர்விட்டு கதறி அழுதனர். இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த கருமத்தம்பட்டி போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

அதன்பிறகு, இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அப்போது வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை அடையாளம் தெரியாத நபர்கள் வீடு புகுந்து அடித்தே கொலை செய்தது தெரியவந்தது. ஆனால், கொலை செய்யப்பட்ட பாப்பம்மாளிடம் இருந்தும், வீட்டில் இருந்தும் எந்த பொருட்களும் கொள்ளை போகவில்லை.

 

இத்தகைய சூழலில், மூதாட்டி பாப்பம்மாள் எதற்காக கொல்லப்பட்டார்? ஏதேனும் முன்விரோதமா அல்லது சொத்து தகராறா என்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் 3 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். தற்போது, வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்