![Occupancy of government lands in Theni district! Collector's Action!](http://image.nakkheeran.in/cdn/farfuture/WTruwKtLeWEgQGqjbZVjTgRotdSMXms-eLMeUFRMFXI/1633934312/sites/default/files/inline-images/th-1_1975.jpg)
கடந்த பத்து நாட்களுக்கு முன்பு, தேனி ஆட்சியர் அலுவலகத்திற்குப் பின்புறம் உள்ள ‘வடவீரநாயக்கன்பட்டி’ பகுதியில் இருந்த அரசு புறம்போக்கு நிலங்களை 100 ஏக்கருக்கு மேல் ஆக்கிரமித்து பட்டா போட்டுக் கொடுத்திருந்தது தெரியவந்தது. இதில் முன்னாள் துணை முதல்வர் ஓ.பி.எஸ்.சின் தீவிர ஆதரவாளரான பெரியகுளம் மேற்கு அதிமுக ஒன்றியச் செயலாளர் அன்னபிரகாஷ், தனது குடும்பத்தினர் பெயரில் பல ஏக்கர்கள் பட்டா போட்டிருப்பது தெரியவந்தது.
இவற்றையெல்லாம் ஆய்வுசெய்த பெரியகுளம் சப்-கலெக்டர் ரிஷப், அதனுடைய ஆவணங்களை எல்லாம் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினுக்கும், துறை அமைச்சருக்கும் அனுப்பிவைத்தார். அதைத் தொடர்ந்துதான் மாவட்ட ஆட்சியர் முரளிதரன் அதிரடி நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிக்கப்பட்ட அரசு புறம்போக்கு நிலங்கள் 90 ஏக்கரைக் கைப்பற்றி, அதனுடைய பட்டாவைக் கேன்சல் செய்தார்.
இதற்கு உடந்தையாக இருந்த 4 தாசில்தார்கள் மற்றும் மூன்று சர்வேயர்களையும் மாவட்ட கலெக்டர் முரளிதரன் அதிரடியாக சஸ்பெண்ட் செய்தார். அதைத் தொடர்ந்து மாவட்ட அளவிலும் அரசு புறம்போக்கு நிலங்களை ஆய்வுசெய்ய அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்தார். அதுபோல் அரசு புறம்போக்கு நிலங்களைப் பட்டா போட்டு வாங்கிய அதிமுக பிரமுகர் மீதும் மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க தயாராகிவந்தார்.
இந்த நிலையில், பெரியகுளம் மேற்கு ஒன்றியச் செயலாளர் அன்னபிரகாஷை கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கியிருக்கிறார்கள் அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளர்களான ஒ.பி.எஸ். மற்றும் எடப்பாடி பழனிசாமி. இது அதிமுகவினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
![Occupancy of government lands in Theni district! Collector's Action!](http://image.nakkheeran.in/cdn/farfuture/I803kV5A0I__xRiSPvQyCVi-22SJSrZ6gFKQVtcEimY/1633934341/sites/default/files/inline-images/theni-collector-muralitharan-in.jpg)
இந்தநிலையில்தான், கலெக்டர் உத்தரவின் பேரில் மாவட்ட அளவில் அதிகாரிகள் அரசு புறம்போக்கு நிலங்களை ஆய்வுசெய்தபோது, அதே பெரியகுளம் வட்டாரத்தில் உள்ள டி.வாடிப்பட்டியில் பட்டா நிலங்களோடு அரசு புறம்போக்கு இடங்களான 56 ஏக்கரை ஆக்கிரமித்து பட்டா போட்டு, அதை கேரளாவைச் சேர்ந்த ஐந்து பேருக்கு விற்பனை செய்திருப்பது தெரியவந்தது. இப்படி அரசு நிலங்களைப் பட்டா போட்டுக் கொடுத்த இடத்தில், கேரளாவைச் சேர்ந்த ஐந்து பேர் சோலார் பவர் பிளான்ட்டை (சூரிய மின் உற்பத்தி) போட்டிருப்பதும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து மாவட்டத்திலுள்ள நான்கு தொகுதிகளிலும் அதிரடியாக அதிகாரிகள் களமிறங்கி புறம்போக்கு நிலங்களைத் தொடர்ந்து ஆய்வு செய்துவருகிறார்கள்.