
திண்டுக்கல்லில் செவிலியர் ஒருவர் கரோனா தடுப்பூசியை வீட்டுக்கு எடுத்துச் சென்றதாக தகவல் வெளியான நிலையில் அங்கு அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள அய்யனார் நகரில் வசித்துவரும் தனலட்சுமி என்பவர் கரூர் தாய் சேய் நல மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கரூர் மருத்துவமனையிலிருந்து செவிலியர் தனலட்சுமி மருத்துவமனைக்கு தெரியாமல் கோவிஷீல்டு தடுப்பூசிகளை (100 பேருக்கு தடுப்பூசி செலுத்தப் படுவதற்கு போதுமான அளவு) தெரியாமல் வீட்டிற்கு எடுத்து வந்ததாகவும், எடுத்து வந்ததோடு மட்டுமல்லாமல் பொதுமக்களுக்கு அந்த தடுப்பூசிகளை போட்டதும் தெரியவந்துள்ளது.
இந்த தகவல் வேடசந்தூர் வட்டார மருத்துவர் பொன்மகேஸ்வரிக்கு புகாராக சென்றதையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் வட்டார மருத்துவர் பொன்மகேஸ்வரி ஆகியோர் சம்பந்தப்பட்ட செவிலியரின் வீட்டில் சோதனை நடத்தினர். சோதனையில் செவிலியரின் வீட்டில் இருந்த கரோனா தடுப்பூசிகளை பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து செவியரிடம் கேட்டபோது, உறவினர்களுக்கு செலுத்துவதற்காக தடுப்பூசிகளை எடுத்து வந்ததாக கூறியுள்ளார். ஆனால் 100 பேருக்கு செலுத்தும் அளவிற்கான கரோனா தடுப்பூசிகளை எடுத்து வந்ததற்கான காரணம் என்ன என்பது குறித்து செவிலியர் தனலட்சுமியிடம் தீவிரமாக விசாரணை நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் கரோனா தடுப்பூசி தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், இப்படி சேவலியர் ஒருவர் கரோனா தடுப்பூசியை வீட்டிற்கு எடுத்துச் சென்றது திண்டுக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.