Skip to main content

கஞ்சா போதைக்கு அடிமையான மாணவர்களை மீட்க நடவடிக்கை வேண்டும்;மாணவனின் தந்தை குமுறல்!!

Published on 17/08/2018 | Edited on 27/08/2018

கொத்தமங்கலத்தில் கஞ்சா போதைக்கு அடிமையாகி உள்ள பள்ளி மாணவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட மாணவனின் தந்தை கூறினார். 

 

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை 10, மற்றும் 12 ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் மாவட்ட அளவில் சாதித்து வந்தனர். ஒவ்வொரு ஆண்டும் மருத்துவர்களை உருவாக்கும் பள்ளியாக இருந்தது. 100 சதவீதம் தேர்ச்சி பெரும் பள்ளிகளில் ஒன்றாக இருந்தது. அதனால் கீரமங்கலம், செரியலூர், வடகாடு, சேந்தன்குடி, நகரம், குளமங்கலம், பனங்குளம், ஆலங்காடு போன்ற பல கிராமங்களில் இருந்தும் மாணவர்கள் இந்த பள்ளியில் சேர்ந்தனர். தனியார் பள்ளியில் படித்த  பல மாணவர்கள் கொத்தமங்கலம் அரசு பள்ளிக்கு வந்து சேர்ந்தனர். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக தேர்ச்சி விகிதம்  குறைந்துள்ளது. 

 

drug

 

 

 

இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக பள்ளிக்கு வரும் மாணவர்களில் சிலர் வகுப்புகளில் தள்ளாட்டத்துடனும், பலர் வகுப்புகளை புறக்கணிப்பதும் தொடர்ந்துள்ளது. இதனால் அந்த மாணவர்களின் பெற்றோருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் சாதாரணமாக கடைகளில் கடைக்கும் ஒரு திரவத்தை மாணவர்கள் அடிக்கடி வாங்கி குடிக்கிறார்கள் என்ற தகவல் அறிந்து  கொத்தமங்கலம் கடைவீதியில் அந்த திரவப் பொருளை விற்பனை செய்ய கூடாது என கிராம மக்கள் கட்டுப்பாடு விதித்தனர். 

 

இந்த நிலையில் சுமார் 10 க்கும் மேற்பட்ட மாணவர்கள் வகுப்புகளில் இருந்து இடையில் வெளியே செல்வதும் அதன் பிறகு அந்த மாணவர்கள் ஒரு மாதிரியாக வருவதுமாக இருந்துள்ளனர். அதே போல வீடுகளிலும் அவர்களின் நடவடிக்கை தவறாக இருந்துள்ளது. இதில் சில பெற்றோர்கள் தொடர்ந்து அந்த மாணவர்களை கண்காணித்த போது அந்த மாணவர்கள் கஞ்சா போதைக்கு அடிமையாகி இருந்தது தெரிய வந்தது. அதனால் சில மாணவர்களை பள்ளிக்கே அனுப்பவில்லை பெற்றோர்.

 

 

இந்த நிலையில் வெளிநாட்டில் இருக்கும் ஒருவரின் மகன் கஞ்சா போதைக்கு அடிமையான தகவல் அறிந்து வெளிநாட்டில் இருந்து வேலையைவிட்டுவிட்டு சொந்த ஊருக்கு திரும்பிய தந்தை மாணவனின் நடவடிக்கையை கண்காணித்த போது அந்த மாணவனின் மோட்டார் சைக்கிளில் கஞ்சா பொட்டலம் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்து இரு நாட்கள் அந்த மாணவனுக்கே தெரியாமல் கஞ்சா பொட்டலம் எடுக்கப்பட்ட நிலையில் 3 வது நாளில் அந்த மாணவன் தாய், தந்தையை மிரட்ட தொடங்கியுள்ளான். ஆதன் பிறகு அந்த மாணவனை பள்ளிக்கு அனுப்பாத பெற்றோர் திருநெல்வேலியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்து அழைத்து வந்துள்ளனர். தொடர்ந்து பல மாதங்கள் மருந்து மாத்திரைகள் கொடுக்கப்பட்டுள்ளது. 

 

இது குறித்து பாதிக்கப்பட்ட ஒரு மாணவனின் தந்தை கூறும் போது.. கொத்தமங்கலம் அதிகம் படித்தவர்கள் உள்ள கிராமம். மாவட்டத்திலேயே பெரிய கிராமம் இது. ஏராளமான அரசு, தனியார் நிறுவன ஊழியர்களையும் பொறியாளர்களையும், மருத்துவர்கள், ஆசிரியர்களையும் உருவாக்கியது இந்த கிராமம். அத்தனை பேரும்  அரசு பள்ளியில் தான் படித்தனர். பல நூறு பேர் வெளிநாடுகளில் உள்ளனர். 

என் மகனின் நடவடிக்கைகள் சரியாக இல்லை என்று தகவல் அறிந்து என் வேலையை விட்டு ஊருக்கு வந்தேன். அவனது நடவடிக்கைகளை கண்காணித்த போது அவன் கஞ்சாவுக்கு அடிமையாகி உள்ளது தெரிய வந்தது. அதே போல 15 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதும் தெரிந்ததால் உடனே சிகிச்சைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்து வருகிறேன். கஞ்சா பற்றிய ஞாபகம் வரும் பொது பெற்றோர்களான எங்களையே அடிக்க பாய்கிறான். 

 

என் மகனுக்கு நான் செலவு செய்து சிகிச்சை கொடுக்கிறேன். ஆனால் இன்னும் பல ஏழை பெற்றோர் மாணவர்களின் நிலை தெரியாமல் உள்ளனர். அதனால் அரசே பள்ளி மாணவர்களுக்கு சோதனை செய்து  தகுந்த சிகிச்சையும், ஆலோசனைகளையும் கொடுக்க வேண்டும். விரைந்து நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் பல மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். மேலும் கஞ்சா விற்பனை செய்யும் முன்னால் மாணவனையும் பிடிக்க வேண்டும் என்றார்.

 

இது குறித்து மக்கள் பாதை இயக்கத்தின் ராசேந்திரன் கூறும் போது.. கஞ்சாவுக்கு மட்டுமின்றி பல்வேறு போதைகளுக்கும் மாணவர்கள் அடிமையாகி உள்ளனர். அதாவது சில இளைஞர்கள் தங்களின் சுயநலத்திற்காக சில மாணவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு கஞ்சா போன்ற போதை பொருளை கொடுத்து அவர்களின் சிந்தனையை மழுங்கடித்து தவறான வழிக்கு இழுத்துச் செல்கிறார்கள். இப்படி பல ஆண்டுகளுக்கு முன்பு கஞ்சா போதைக்கு அடிமையான ஒரு மாணவன் தான் தற்போது கஞ்சாவை மாணவர்களிடம் கொடுப்பதாகவும் போன் செய்தால் மாணவர்கள் இருக்கும் இடம் தேடி சென்று கொடுப்பதாகவும் கூறுகிறார்கள். அதனால் சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தால் இளைய சமுதாயத்தை காப்பாற்றலாம் என்றார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

 மீண்டும் ஒரு வேங்கை வயல் சம்பவம்; அதிர்ச்சி புகார்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Shock complaint on Yet another Vengaivayal lincident at pudukkottai

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்தும் அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற 20ஆவது நாளில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டறிய உண்மை கண்டறியும் சோதனையும், வேங்கைவயல், இறையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 31 பேரிடமும் டி.என்.ஏ. பரிசோதனைகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்டனர். ஒரு காவலர் உட்பட 5 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், வேங்கைவயல் சம்பவத்தைப் போல், பொதுமக்கள் உபயோகிக்கும் குடிநீரில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே சங்கன்விடுதி ஊராட்சிக்கு உட்பட்ட தெருவில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.  

இந்தத் தெருவில், உள்ள 25 பட்டியலின குடும்பங்களும், மாற்று சமூகத்தைச் சேர்ந்த 10 குடும்பங்களும் உபயோகிப்பதற்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, 10,000லி அளவு கொண்ட குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது. இந்த நிலையில், இன்று (25-04-24) காலை இந்தக் குடிநீர் தொட்டியில் இருந்து அசுத்தமான தண்ணீர் வருவதை அங்குள்ள பொதுமக்கள் கவனித்துள்ளனர். அதன் அடிப்படையில், அந்தத் தொட்டியைச் சுத்தம் செய்வதற்காக தொட்டி மேல் ஏறியுள்ளனர். அங்கு சென்று பார்த்த போது, அந்தத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக, போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்தப் புகாரின் பேரில், அங்கு போலீசார், வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். குடிநீர் மாதிரி சோதனைக்கு அனுப்பப்பட்ட நிலையில் தற்போது தொட்டி சுத்தம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், விசாரணை முடியும் வரை டேங்கர் லாரி மூலம் கிராம மக்களுக்கு குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.