Skip to main content

ஒரே இரவில் 9 வீடுகளில் திருட முயற்சி; கொள்ளைக்குப் போன இடத்தில் சாப்பிட்டு, மது குடித்த திருடர்கள்!

Published on 02/06/2023 | Edited on 02/06/2023

 

 Namakkal, they ate the food at home and then drank alcohol and stole

 

பள்ளிபாளையம் அருகே, ஒரே இரவில் 9 வீடுகளில் பூட்டை உடைத்து திருட முயன்ற மர்ம நபர்களுக்கு நகை, பணம் கிடைக்காத விரக்தியில்  ஒரு வீட்டுக்குள் புகுந்து வயிறார சாப்பாடு சாப்பிட்டுவிட்டு, மது குடித்துவிட்டுச் சென்ற சம்பவம் நடந்துள்ளது.     

 

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே உள்ளது கணபதிபாளையம். இந்த கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. மே 30ம்  தேதி இரவு, பூட்டப்பட்டு இருந்த 9 வீடுகளின் பூட்டை உடைத்து, உள்ளே புகுந்த மர்ம நபர்கள் பீரோ, மேஜை டிராயர் ஆகியவற்றில் நகை,  பணம் ஆகியவற்றை தேடிப் பார்த்துள்ளனர்.  ஆனால் எந்த வீட்டிலும் மர்ம நபர்களுக்கு தேவையான நகையோ, பணமோ கிடைக்கவில்லை. இதனால் அந்த கும்பல், அதே பகுதியில் உள்ள சவுபாக்கியவதி கட்டடத்திற்குள் நுழைந்துள்ளது. அந்த கட்டடத்தின் கீழ் தளத்தில் இருந்த 15 வீடுகளை வெளிப்புறமாக தாழிட்டுவிட்டு, ஜான்ஸா என்ற தொழிலாளியின் வீட்டுக்குள் நுழைந்துள்ளனர்.  அந்த வீட்டிலும் பீரோ, அரிசி பாத்திரங்கள் என சல்லடை போட்டுத் தேடிய கும்பலுக்கு ஆறுதலாக ஆயிரம் ரூபாய் மட்டுமே கிடைத்துள்ளது.     


இதையடுத்து பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்த நல்லம்மாள் என்ற மூதாட்டியின் வீட்டு பூட்டை உடைத்தும், உள்ளே சென்றுள்ளனர்.  அங்கேயும் அவர்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை எனத்தெரிகிறது.  தொடர்ந்து 9 வீடுகளின் பூட்டை உடைத்து ரிஸ்க் எடுத்து உள்ளே நுழைந்துசென்று தேடிப்பார்த்தும் மர்ம நபர்களுக்கு பணம், நகைகள் கிடைக்காமல் போனதால் ஏமாற்றமும் விரக்தியும் அடைந்துள்ளனர்.    இதையடுத்து செல்லம்மாள் என்பவரின் வீட்டு பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள், அவருடைய வீட்டு சமையல் அறைக்குள்  நுழைந்து மிச்சம் இருந்த சாப்பாட்டை சாம்பார் ஊற்றி தின்றுள்ளனர். பிறகு அவர்கள் கொண்டு சென்று மதுபானத்தையும் அந்த வீட்டிலேயே  ஆற அமர குடித்துவிட்டு, சாவகாசமாக அந்த வீட்டில் இருந்து வெளியேறி உள்ளனர்.     


இந்த சம்பவம் குறித்து, பாதிக்கப்பட்ட மக்கள் அளித்த புகாரின்பேரில் பள்ளிபாளையம் காவல்நிலைய காவல்துறையினர், நிகழ்விடத்திற்குச்  சென்றனர். தடய அறிவியல் நிபுணர்கள் நிகழ்விடத்தில் பதிவான தடயங்களை பதிவு செய்தனர். மோப்ப நாய் மூலமும் துப்பு துலக்கப்பட்டது.     இந்த சம்பவத்தில் ஒருவர் அல்லது இரண்டு பேர் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. சம்பவம் நடந்த பகுதியில்  பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளையும் காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.    ஒரே இரவில் 9 வீடுகளில் திருட முயற்சி நடந்த சம்பவம் பள்ளிபாளையம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.      

 

 

சார்ந்த செய்திகள்