Skip to main content

இளம்பெண் கொலை வழக்கு; சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்

Published on 15/05/2023 | Edited on 15/05/2023

 

namakkal jedarpalayam nithya incident case transferred to cbcid enquiry

 

நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையம் அருகே உள்ள காரப்பாளையம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் விவேகானந்தன் (வயது 35). விவசாய கூலி வேலை செய்து வரும் இவருக்கு நித்யா (வயது 28) என்ற மனைவியும் இரு மகள்களும் உள்ளனர். கடந்த மார்ச் மாதம் 11 ஆம் தேதி வழக்கம் போல் நித்யா தனது வீட்டுக்கு அருகில் உள்ள ஓடைப் பகுதிக்கு ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்றுள்ளார். மாலை வேளையில் ஆடுகள் மட்டும் வீடு திரும்பிய நிலையில், ஆட்டை ஓட்டி சென்ற நித்யா வீடு திரும்பவில்லை.

 

இதனால் சந்தேகமடைந்த விவேகானந்தன், வழக்கமாக ஆடுகளை நித்யா மேய்த்து வரும் பகுதிக்குச் சென்று தேடியுள்ளார். அப்போது அங்கு உள்ள ஓடைப் பகுதியில் நித்யாவின் ஆடைகள் கிழிந்த நிலையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த விவேகானந்தன், இது குறித்த தகவலை ஜேடர்பாளையம் போலீசாருக்கு உடனடியாகத் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் நித்யாவின் உடலைக் கைப்பற்றி நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

 

நித்யாவின் கொலைக்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று நாமக்கல் - மோகனூர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்ட நித்யாவின் உறவினர்கள், காரப்பாளையம் பகுதியில் வேலை செய்யும் வடமாநிலத் தொழிலாளர்களிடம் விசாரணை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர். இது குறித்து விரைந்து நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்ததைத் தொடர்ந்து அங்கு இருந்தவர்கள் கலைந்து சென்றனர். மேலும், சந்தேக மரணம் என்று போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இவ்வழக்கில் 17 வயது சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டு வழக்கு தொடர்ந்து விசாரணையில் இருந்து வந்த நிலையில், நேற்று (14.05.2023) இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம் செய்து தமிழக போலீஸ் டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்