Skip to main content

கீழ்வெண்மணி: 51வது ஆண்டு நினைவு தின அஞ்சலி!

Published on 26/12/2019 | Edited on 26/12/2019

 

கீழ்வெண்மணியில் 44 தியாகிகளின் 51வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பல்வேறு கட்சியினர் நேற்று அஞ்சலி செலுத்தினர்.  மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்,  மார்க்சிஸ்ட் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மத்திய குழு உறுப்பினர் சவுந்தரராஜன் மற்றும்  திமுக, வி.சி.க., சிபிஐ கட்சியினர், பொதுமக்கள் திரண்டு வந்து மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். 

 

v


கடந்த 1968ல் நெல் உற்பத்தியாளர் சங்கத்துக்கும் விவசாய கூலி தொழிலாளர்களுக்கும் இடையே கூலி பிரச்சனை ஏற்பட்டது.  அரைப்படி நெல் கூலி உயர்வு கேட்டு போராடியதுதான் பிரச்சனையாக ஆனது.  இந்த பிரச்சனையில் வெண்மணி கிராமத்தைச் சேர்ந்த இரண்டு பேரை கோபாலகிருஷ்ண நாயுடு என்ற பண்ணையாரின் ஆட்கள் கட்டிவைத்து அடித்துக்கொன்றனர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே கலவரம் ஏற்பட்டது.  

 

25.12.1968ல் வெண்மணிக்குள் வந்து விவசாயிகள் மீது நெல் உற்பத்தியாளர்கள் தாக்குதல் நடத்தினார்கள். விவசாயிகளும் பதிலடி தாக்குதல் நடத்தினார்கள். திடீரென விசாயிகள் மீது துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தியதால் விவசாயிகள் நாலாபுறமும் சிதறி ஓடினர்.  அப்போது, வெண்மணியில் இருந்த பெண்களும், குழந்தைகளும்  தெருவின் கடைசியில் இருந்து ராமையா என்பவரின் குடிசைக்குள் சென்று ஒளிந்துகொண்டனர்.  இதை அறிந்கொண்டவர்கள், அக்குடிசையை வெளிப்புறமாக தாழ்போட்டுவிட்டு, குடிசைக்கு தீவைத்தனர்.  இந்த சம்பவத்தில்  20 பெண்கள், 19 குழந்தைகள் உட்பட 44  பேர் தீயில் கருகி உயிரிழந்தனர்.  இந்தசம்பவத்தில் 106 பேர் கைதானார்கள். ஆனால், ’இது சாதிய மோதல்’ என்று காவல்துறை முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டது. ’’அதிக நிலங்களைச் சொத்துக்களாக வைத்திருப்பவர்கள் இப்படியொரு செயலைச் செய்திருக்கமாட்டார்கள். அவர்கள் குற்றவாளிகள் அல்ல’’ என்று 1973 ஏப்ரல் 6 ஆம் தேதி உயர்நீதிமன்றத்தால் தீர்ப்பு சொல்லப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் விடுதலையானார்கள். 

 

வெண்மணியில் படுகொலைகள் நடந்ததை அடுத்து  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இந்த வீட்டை நினைவிடமாக மாற்றி ஆண்டு தோறும் வெண்மணி தியாகிகள் நினைவு தின நாளாக டிசம்பர் 25ம் தேதியை அனுசரித்து வருகின்றனர். அதன்படி 51ம் ஆண்டு வெண்மணி தியாகிகள் நினைவு தினம் மற்றும் பொதுக்கூட்டம் நேற்று  கீழ் வெண்மணி தியாகிகள் நினைவிடத்தில் நடைபெற்றது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கீழ்வெண்மணியில் சீமான் ஏன் வெளியேற்றப்பட்டார்?

Published on 27/12/2021 | Edited on 27/12/2021

 

Why was Seaman expelled in the keelvenmani

 

நாகை மாவட்டம், கீழ்வேளூர் அடுத்துள்ள கீழ்வெண்மணியில் கூலி உயர்வு கேட்டதற்காக விவசாயக் கூலித்தொழிலாளர்கள் பெண்கள், குழந்தைகள் என 44 பேர் ஒரே குடிசையில் வைத்து ஒன்றாக எரித்துக் கொலை செய்யப்பட்டனர். அவர்களை நினைவுகூரும் வகையில் வெண்மணியில் பிரம்மாண்டமான மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 25 அன்று நாடு முழுவதில் இருந்தும் பொதுமக்களும், பாட்டாளிவர்க்கத்தினரும், தலைவர்களும், அரசியல் கட்சியினரும் வந்து மலர்தூவி வீரவணக்கம் செலுத்திவருகின்றனர்.

 

அந்த சோக சம்பவத்தின் 53வது ஆண்டு நினைவு தினம் கடந்த 25ஆம் தேதி அனுசரிக்கப்பட்டது. 44 பேர் இறந்துபோன இடம் குடிசையாக இருந்தது. அதனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் புதுப்பித்து நினைவிடமாக மாற்றினர். அந்த நினைவிடத்தை மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் திறந்து வைத்தார். அங்கிருந்த நினைவு தூணில் அக்கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், மத்தியகுழு உறுப்பினர் அ.செளந்தரராஜன், நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ், சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி உள்ளிட்டோர் கலந்து கொண்டு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

 

Why was Seaman expelled in the keelvenmani

 

இந்தநிலையில் அங்கு வீரவணக்கம் செலுத்த வந்த நாம் தமிழர் கட்சியின் சீமான், கொடி, கோஷங்களுடன் வந்தார். அதனால் அவர்களை நுழைவிலேயே நிறுத்தி கொடிகள் ஏதும் எடுத்துச்செல்லக்கூடாது எனவும் சிலர் மட்டும் அனுமதிக்கப்படுவர் என்றும் தெரிவித்து அஞ்சலி செலுத்த நாம் தமிழர் கட்சியினர் அனுமதிக்கப்பட்டனர். அதன்படியே சீமானோடு சிலர் வெண்மணி தியாகிகள் நினைவிடத்திற்குச் சென்றனர். மலர்தூவி மரியாதை செய்தவர் வழக்கம்போல அவரது கட்சி பாணியில் முழக்கங்களை எழுப்பினார். 

 

இதனை கண்ட கம்யூனிஸ்ட் கட்சியினரும், நினைவிட பொறுப்பாளர்களும், ‘யார் வேண்டுமானாலும் வரலாம், மரியாதை செய்யலாம் கொடிகளுடன் வந்து முழக்கமிட்டு சலசலப்பை உண்டாக்கிட நாங்கள் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம்’ என அவர்களை அங்கிருந்து விலகிச் செல்ல சொன்னார். ஆவேசமடைந்த சீமானோ, “இது பொதுமக்கள் பலியானது; உழைக்கும் மக்கள் பலியான நினைவிடம். இங்கு எல்லா தமிழர்களும் வணக்கம் செலுத்த கடமை, உரிமை இருக்கு” எனக் கூற, அந்த இடத்தில் வாய் தகராறு, தள்ளுமுள்ளு என சலசலப்பானது. 

 

Why was Seaman expelled in the keelvenmani

 

இறுதியில் கம்யூனிஸ்ட் கட்சியினரால் நாம்தமிழர் கட்சியினர் வெளியேற்றப்பட்டனர். இது குறித்து நாம் தமிழர் கட்சியினரிடமே கேட்டபோது, “நாகையில் ஆர்பாட்டம் இருந்தது. அங்க வந்த எங்கள் கட்சித் தலைவர் சீமான், அருகில் இருக்கும் வெண்மணி தியாகிகளுக்கும் வீரவணக்கம் செலுத்த திட்டமிட்டு வந்தார். வழக்கம்போல கட்சி கொடிகள், எங்கள் கட்சி முழக்கங்களுடன் வந்தோம். வழியிலேயே தடுத்துவிட்டனர். பிறகு சிலரை அங்கு அனுப்பினர். நினைவிடத்தில் வீரவணக்கம் செய்தோம். திடீரென அங்கு வந்தவர்கள் முழக்கமெல்லாம் போடக்கூடாது; சத்தம்போட அனுமதியில்லன்னு சொல்லி தகறாறு செய்யுறாங்க. இது என்ன நியாயம்” என்று தெரிவித்தனர். 

 

நினைவிடத்தை நிர்வகித்துவரும் மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியினரோ, “யார் வேண்டுமானாலும் வரலாம், மலர்தூவி மரியாதை செய்யலாம். ஆனால், நாம் தமிழர் கட்சியினரின் முழக்கம் அரசியல் மோதலை உண்டாக்கும் விதமாக இருந்தது. இந்த நினைவிடத்தை நாங்கள் புனிதமாக மதிக்கிறோம். இங்கு அவர் பார்வை எடுபடாது. அதனால் முழக்கமிடக்கூடாது என வெளியேற சொன்னோம்” என்றனர்.

 

 

Next Story

சாதி வெறி! வர்க்க பேதம்! கீழவெண்மணியில் கருகிய 44 உயிர்கள்! -டிசம்பர் 25-ஐ மறக்க முடியுமா?

Published on 25/12/2018 | Edited on 25/12/2018

ஐம்பது ஆண்டுகளுக்கு முன் இதே நாளில்…

 

“ஐயோ.. எரியுதே..” என்று அலறிய 44 பேர் பூட்டிய குடிசைக்குள் தீயில் கருகி உயிரை விட்டனர். 19 குழந்தைகள், 20 பெண்கள், 5 ஆண்கள் என உயிர் பறிக்கப்பட்டவர்களுக்கு நினைவுச் சின்னம் எழுப்பினர். வலியுடன் வரலாறு பதிவு செய்திருக்கும் தாழ்த்தப்பட்ட மக்களின் ரத்தச் சரித்திரம் இதோ -

  

history

 

அப்போது நிலச்சுவான்தார்கள், பண்ணையார்களின் ஆதிக்கம் கொடிகட்டிப் பறந்தது. தங்களின் நிலத்தில் பணிபுரியும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த வேளாண் தொழிலாளர்களை அடிமைகளாகவே அவர்கள் நடத்தினர். நிலமற்ற ஏழை மக்களை,  இந்திய-சீனப் போரால் ஏற்பட்ட பஞ்சம் வாட்டி வதைத்திட,  குறைந்த கூலி கொடுத்து அதிக வேலை வாங்கினார்கள். ஒன்றிணைந்த தஞ்சை மாவட்டம் – நாகப்பட்டினத்திலிருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ள கீழ்வெண்மணி கிராமத்திலும் இதே நிலைதான். கூலி உயர்வு கேட்பதற்காக கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த தோழர்களின் உதவியுடன் சங்கம் ஆரம்பித்தனர் விவசாயத் தொழிலாளர்கள். இவர்கள் கூலியை உயர்த்திக் கேட்டவுடன், போட்டி சங்கமாக நிலக்கிழார்கள் ஒன்றுசேர்ந்து நெல் உற்பத்தியாளர் சங்கத்தைத் தொடங்கினர். 

 

history

 

இரிஞ்சூர் கோபாலகிருஷ்ண நாயுடு தலைவராக இருந்த நெல் உற்பத்தியாளர் சங்கத்தினருக்கு, அறுவடைக்கூலி இரண்டு மரக்காலோடு மேலும் ஒரு படி சேர்த்துக் கேட்ட விவசாயத் தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டியதாயிற்று. “சங்கம் ஆரம்பிக்கிறியா? சரிசமமாக எங்களுக்கு எதிரே அமர்ந்து பேசுறியா? கைகட்டி, வாய்பொத்தி வேலை பார்த்துட்டு, உரிமை இருக்குன்னு கேள்வி கேட்கிறியா?” என்று ஆவேசமானார்கள் நெல் உற்பத்தியாளர் சங்க உறுப்பினர்களான நிலக்கிழார்கள். இதனைத்தொடர்ந்து, முத்துகுமார், கணபதி ஆகிய இருவரைக் கட்டிவைத்து அடித்தனர். அதனால், தொழிலாளர்கள் அவர்களுடன் மோதினர். கீழவெண்மணியில் கலவரம் மூண்டது. ஏற்கனவே  தாழ்த்தப்பட்டோர் மீது கடும் வஞ்சம் கொண்டிருந்த கோபாலகிருஷ்ண நாயுடு “ஊரையே கொளுத்தி ஒண்ணுமில்லாம பண்ணிருவேன்..” என்று ஆவேசமானார்.  அன்றைய திமுக முதல்வர் அண்ணாதுரைக்கு, கம்யூனிஸ்ட் கட்சியின் நாகை மாவட்ட செயலாளர்  வே.மீனாட்சிசுந்தரம், கீழவெண்மணி விவசாயிகளின் அவலநிலையை விளக்கிக் கடிதம் எழுதினார். பாதுகாப்பு கேட்டு எழுதப்பட்ட அந்தப் புகார் கடிதத்தை  தமிழக அரசோ, காவல்துறையோ கண்டுகொள்ளவில்லை. 

 

history

 

1968, டிசம்பர் 25 மாலை.. பண்ணையார் ஆட்கள், தொழிலாளர் தலைவர்  டீக்கடை முத்துச்சாமியைத் தூக்கிச்சென்று, சாலைத்தெருவில் உள்ள ராமானுஜ நாயுடு வீட்டில் அடைத்து வைத்தனர். இதையறிந்த கிராமத்தினர் அந்த வீட்டின் முன் திரண்டு, வெளியில் அனுப்பச் சொல்லி குரல் எழுப்பினர்.  வீட்டை எதுவும் செய்துவிடுவார்கள் என்ற பயத்தில்,  முத்துச்சாமியை பின்வாசல் வழியாக வெளியே அனுப்பினர். அந்த மோதலில் பண்ணை அடியாள் இருக்கை பக்கிரிசாமி கொல்லப்பட்டார். முத்துச்சாமியை, விவசாயிகள் மீட்டதைக் கேட்டு ஆவேசமானார் கோபாலகிருஷ்ண நாயுடு.  மிராசுதார்களையும், ஆட்களையும் திரட்டிக்கொண்டு, அவரே வீதியில் இறங்கினார். பெட்ரோல் டின், துப்பாக்கி சகிதமாக, சுமார் 200 பேர், இரவு 9 மணிக்கெல்லாம் கீழவெண்மணி கிராமத்திற்குள் நுழைந்தனர். மூன்று பக்கமும் சூழ்ந்து தாக்குதல் நடத்தினர். கிராமத்தினர் அவர்கள் மீது கல்லெறிய, பதிலுக்கு சுட ஆரம்பித்தனர். அதனால், பயத்தில் கிராமத்தினர் ஓட ஆரம்பித்தனர். அடியாட்களோ அரிவாளால் வெட்டியும், துப்பாக்கியால் சுட்டும் ஓடஓட விரட்டினார்கள்.  

 

history

 

ஆண்களில் பலர்,  துப்பாக்கி ரவை பாய்ந்து, வெட்டுப்பட்டு, தப்பித்து ஓடினார்கள். குழந்தைகள், பெண்கள், வயதானவர்கள் தப்பிக்க முடியாத நிலையில், மண்சுவராலான ராமையாவின் குடிசைக்குள் பதுங்கினார்கள். தென்னை மட்டையைக் கொளுத்தி, வழிநெடுகிலும் ஒவ்வொரு வீடாகத் தீவைத்த பண்ணை அடியாட்கள், ராமையாவின் குடிசையில் கிராமத்தினர் ஒளிந்திருப்பதைக் கண்டனர். அந்தக் குடிசைக்குத் தீ வைத்துவிட்டு, உயிரோடு யாரும் வெளியேறிவிடாதபடி சூழ்ந்து நின்றனர். அலறித்துடித்து அத்தனை உயிர்களும் அடங்கியபிறகே, அந்த இடத்தைவிட்டுச் சென்றனர். 

 

கூலி உயர்வுக்காகப் போராடிய தாழ்த்தப்பட்ட மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட இந்த கொலைவெறித் தாண்டவம்,  சாதி வெறி பின்னணியில், 44 உயிர்களைத் தீயில் கருகச் செய்தது. இதில் கொடுமை என்னவென்றால், விவசாயிகளை ஒடுக்குவதற்காகவே அமைக்கப்பட்ட கிஷான் போலீசார், இந்தப் படுகொலைக்குத் துணைபோனதுதான். 

 

இருதரப்பினர் மீதும் வழக்குள் பதிவாயின. இருக்கை பக்கிரிசாமி என்ற அடியாளைக் கொலை செய்ததற்காக, கோபால் உள்ளிட்ட 22 விவசாயிகள் மீதும், குடிசையைக் கொளுத்தி 44 பேர் உயிரைப் பறித்ததற்காக, கோபாலகிருஷ்ண நாயுடு உள்ளிட்ட 7 பேர் மீதும் வழக்கு விசாரணை நடந்து,   தீர்ப்புகள் வெளிவந்தன. 

 

history

 

தாழ்த்தப்பட்ட மக்களைத் தாக்கிய பண்ணை அடியாள் இருக்கை பக்கிரிசாமியை அடித்துக் கொன்ற வழக்கில் கோபாலுக்கு ஆயுள் தண்டனை கிடைத்தது. இன்னொருவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை கிடைத்தது. மேலும் 6 பேருக்கு தலா இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை கிடைத்தது. கோபாலகிருஷ்ண நாயுடுவுக்கும் அவருடைய கூட்டாளிகளுக்கும் 10 வருடங்கள் சிறைத்தண்டனை கிடைத்தது. உயர் நீதிமன்ற மேல்முறையீட்டில், தாழ்த்தப்பட்ட விவசாயத் தோழர்களுக்கு ஜாமின் மறுக்கப்பட்டது. 44 பேரை உயிரோடு எரித்துக்கொன்ற  கோபாலகிருஷ்ண நாயுடுவுக்கும் 7 மிராசுதார்களுக்கும் ஜாமின் கிடைத்தது. 

 

கீழவெண்மணி வழக்குகளில் தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் கருத்தைக் கவனிப்போம்! 

 

‘வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள அனைவருமே (23 பேர்) மிராசுதார்களாக இருப்பது வியப்பளிக்கிறது. இவர்களில் பலரும்,  பணக்காரர்களாகவும், பெரிய நிலச்சுவான்தார்களாகவும் உள்ளனர். சமூக அந்தஸ்தும், கவுரவுமும் உள்ள இவர்கள், இந்தக் குற்றத்தைச் செய்திருக்க மாட்டார்கள். விவசாயிகளைப் பழி தீர்ப்பதற்கு எவ்வளவு ஆர்வமாக இருந்திருந்தாலும், வேலையாட்கள் எவருடைய உதவியும் இல்லாமல், சம்பவம் நடந்த இடத்திற்கு தாங்களாகவே நேரில் நடந்து சென்று வீடுகளுக்குத் தீ வைத்திருப்பார்கள் என்பது நம்புவதற்கு கடினமாக இருக்கிறது.’

 

கட்டுரை ஒன்றில் நீதியரசர் தி.சுதந்திரம் இப்படிச் சொல்கிறார்

 

history

 

‘நீதிதேவதையின் கண்கள் கட்டப்பட்டிருப்பது நாம் அறிந்ததுதானே என்று அவசரப்பட்டுச் சொல்லிவிடலாகாது.   விசாரித்துத் தீர்ப்பு வழங்கும்போது, தெரிந்தவர், தெரியாதவர், வேண்டியவர், வேண்டாதவர், தேவையானவர், தேவையற்றவர் என்ற பாகுபாடு கண்ணில் பட்டுவிடக்கூடாது.  எவ்வித சலனத்திற்கும் உட்படாமல், தியானத்தில் ஆழ்ந்து சிந்திப்பதுபோல், கண்களால் பாராமல், காதுகளால் மட்டும் கேட்டு முடிவுக்கு வரவேண்டும். மொத்தத்தில், பாகுபாடின்றி, எல்லோர்க்கும் சமமான, ஆழ்ந்து சிந்தித்து, அளந்து எடைபோட்ட நியாயமான தீர்ப்பே பகரப்படவேண்டும் என்பதின் அடையாளம்தான், கண்கள் கட்டப்பட்ட  நீதிதேவதையின் உருவமாக இருக்கிறது.’

இதே நாளில் தமிழகத்தை உலுக்கிய கீழவெண்மணிப் படுகொலை விவகாரத்தில், பெரிதாக  நாம் என்ன சொல்லிவிட முடியும்?  

 

வர்க்கபேதம் ஒழியட்டும்!

சாதிதுவேஷம் விலகட்டும்!

நீதி வெல்லட்டும்!