ஏ.டி.எம்மில் நூதனமுறையில்
மர்ம ஆசாமி திருட்டு- சீர்காழி பரபரப்பு
சீர்காழி ஏடி.எம்.மில் விவசாயியிடம் ரூ.25 ஆயிரத்தை மர்ம ஆசாமி நூதனமாக திருடிச்சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கிவருகிறது. இது முதன்முறை அல்ல தொடர்ந்து அந்த மர்ம ஆசாமி திருடிவருவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நாகை மாவட்டம் சீர்காழி அருகே காப்பியக்குடி மாரியம்மன்கோயில் தெருவை சேர்ந்தவர் பழனியப்பன், விவசாயியான இவர் சீர்காழி பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள ஸ்டேட் பேங் ஏடிஎம்-க்கு பணம் எடுக்க சென்றார். அவருக்கு பணம் எடுக்க தெரியவில்லை. அருகில் இருந்த ஒரு நபரிடம் ரூ.25 ஆயிரம் பணத்தை எடுத்து தரும்படி ஏடிஎம் கார்டை கொடுத்திருக்கிறார்.
அந்த நபர் ரகசிய எண்ணை வாங்கி பயன்படுத்தி ஏடிஎம்மில் பணம் இல்லையென கூறி பயனியப்பனிடம் கார்டை கொடுத்து விட்டார். பழனியப்பன் எடி,எம்,இல் இருந்து வெளியே சென்றவுடன். அந்த நபர் பணம் வெளிவருவதற்கான நேரத்தை பயன்படுத்தி ரூ.25 ஆயிரத்தையும் எடுத்து விட்டு மின்னல் வேகத்தில் மறைந்து விட்டார். பழனியப்பனின் செல்போனிற்கு பணம் எடுத்ததாக மெசேஜ் வந்தது. பதரித்துடித்த பழனியப்பன், வங்கி மேலாளரிடம் வந்து கண்கசக்கினார். அப்போது உங்கள் கணக்கில் ரூ.25 ஆயிரம் எடுத்து இருப்பது உண்மை என்று கூறியிருக்கிறார் மேலாளர். அதிர்ச்சி அடைந்த பழனியப்பன் சீர்காழி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு மற்றும் போலீசார் சிசிடிவி கேமிராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அந்த சம்பவத்தை போல் கடந்த சில நாட்களுக்கு முன் அதே நபர் தன் கைவரிசையை திருமுல்லைவாசல் அருகே உள்ள எடி,எம், ஒருவரிடம் காட்டியிருக்கிறார். அதே கடவாசலை சேர்ந்த பன்னீர் செல்வத்திடம் ஏடிஎம் கார்டை வாங்கி பணம் எடுத்து தருவதாக கூறி ரூ.5 ஆயிரத்தை எடுத்து சென்றிருக்கிறார் என கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
- க.செல்வகுமார்