Skip to main content

வீட்டுக்குள் எரிந்த நிலையில் தாய், மகன் சடலம்! காவல்துறை தீவிர விசாரணை!

Published on 15/07/2022 | Edited on 15/07/2022

 

Mother and son passed away near krishnagiri

 

ஊத்தங்கரை அருகே, வீட்டுக்குள் தீயில் எரிந்து உடல் கருகிய நிலையில் தாய் மற்றும் மகனின் சடலங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன. அவர்களை, எரித்துக் கொன்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். 

 

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே உள்ள கல்லாவி செங்கல்பட்டியைச் சேர்ந்தவர் செந்தாமரைக்கண்ணன் (55). தெருக்கூத்து கலைஞர். இவருடைய மனைவி செல்வி. இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். தொழில் தொடர்பாக தாமரைக்கண்ணன் அடிக்கடி ஊத்தங்கரை அருகே உள்ள கீழ்குப்பத்திற்குச் சென்று வந்ததில் அந்த ஊரைச் சேர்ந்த கமலா (47) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அவரை இரண்டாவது திருமணமும் செய்து கொண்டார். இதன்மூலம் அவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். 

 

கமலாவின் மகளுக்கு மட்டும் திருமணமாகி விட்டது. மகன் குரு (17) பிளஸ்2 முடித்துவிட்டு, வீட்டில் இருந்து வந்தார். இந்நிலையில் தாமரைக்கண்ணன், மூன்றாவதாக சத்யா (30) என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு முத்து என்ற ஆண் குழந்தை உள்ளது. சிறுவன் முத்து, 6ம் வகுப்பு படித்து வருகிறான். 

 

இதற்கிடையே, கமலாவுக்கும் சத்யாவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. ஜூலை 13ம் தேதி, கமலாவும் அவருடைய மகன் குருவும் வீட்டில் தூங்கச் சென்றனர். மறுநாள் காலையில் வெகுநேரமாகியும் அவர்கள் எழுந்திருக்கவில்லை. அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்தபோது, வீடு வெளிப்பக்கமாக தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்தது. வீட்டின் மேற்கூரை ஓடுகள் சிதறிக்கிடந்தது.

 

இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள் கல்லாவி காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தனர். காவல் ஆய்வாளர் பத்மாவதி மற்றும் காவலர்கள் அங்கு விரைந்தனர். கதவைத் திறந்து உள்ளே சென்று பார்த்தபோது அங்கு கமலாவும், குருவும் தீயில் எரிந்து உடல் கருதிய நிலையில் கிடந்தனர். அவர்களை எரித்துக் கொலை செய்திருப்பது தெரியவந்தது. 


இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இரண்டு சடலங்களும், உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. 


கமலாவும் அவருடைய மகனையும் எரித்துக் கொலை செய்த மர்ம நபர்கள் யார்? கணவன், மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் இந்த சம்பவம் நடந்ததா? தவறான தொடர்பு காரணமாக நடந்ததா? உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது. ஊத்தங்கரை டி.எஸ்.பி அலெக்சாண்டர் தலைமையில் காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் பெண் படுகொலை; போலீசார் விசாரணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
nn

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Next Story

நீரோடையில் மிதந்த சடலம்; போலீசார் விசாரணையில் அதிர்ச்சி

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
A body lying in a stream; Police investigation shocked

தந்தையைக் கொலை செய்தவரைப் பழிக்குப் பழி கொலை செய்து நீரோடையில் வீசிய சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நெல்லை மாவட்டம் தெற்கு ஏறாந்தை கிராமத்தில் வசித்து வருபவர் தேவபாலன். லாரி ஓட்டி வந்த தேவபாலன் திடீரென காணாமல் போன நிலையில், உறவினர்கள் அவரைத் தேடி வந்தனர். இறுதியில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள நீரோடை ஒன்றில் சடலம் ஒன்று மிதப்பதாகத் தகவல் பரவியது. இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த திசையன்விளை போலீசார் ஆய்வு செய்ததில், வெட்டுக் காயங்களுடன் ஒருவர் கொலை செய்யப்பட்டு நீரோடையில் வீசப்பட்டது தெரிய வந்தது.

உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தியதில், அது காணாமல் போன தேவபாலன் என்பது தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், தேவபாலன் கொலை வழக்கு தொடர்பாக சாத்தூர் நீதிமன்றத்தில் உத்திரகுமார், சுரேஷ்குமார், சேர்மதுரை உள்ளிட்ட மூன்று பேர் சரணடைந்தனர். மூவரும் சகோதரர்கள். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பழிக்குப் பழியாக லாரி டிரைவரை கொலை செய்தது தெரியவந்தது.

2017 ஆம் ஆண்டு துரைபாண்டியன் என்பவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தேவபாலனுக்கு தொடர்பு இருந்ததாகத் தெரிகிறது. ஆனால் நீதிமன்றத்தில் குற்றம் நிரூபணம் ஆகாததால் அவர் விடுவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், துரைபாண்டியனின் மகன்களான சுரேஷ்குமார், உத்திர குமார், சேர்மதுரை ஆகிய மூன்று பேரும் பல வருடங்கள் கழித்து தேவபாலனை வெட்டிக் கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது.