Skip to main content

“கடைசியில என் பிள்ளைக்கு என் கையாலயே விஷம் குடுக்க வச்சுட்ட” - தற்கொலை செய்துகொண்ட தாயின் உருக்கமான கடிதம்! 

Published on 13/10/2022 | Edited on 13/10/2022

 

Mother and child passed away near ramanathapuram

 

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த வீரானந்தம் (42) என்பவருக்கும், திருச்சி மாவட்டம் பெத்தக்கோன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஜெயபாரதிக்கும் (36) கடந்த 2014ம் ஆண்டு திருமண தகவல் மையம் மூலம் திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு திருமணம் முடிந்து சென்னை கூடுவாஞ்சேரியில் தங்கியிருந்தனர். இவர்களுக்கு ஹரி (8) என்ற மகன் உள்ள நிலையில், சில வருடங்களுக்கு முன்பு வீரானந்தம் பக்ரைன் நாட்டிற்கு வேலைக்கு சென்றுள்ளார். அப்போது ஜெயபாரதி தனது சித்தி வீடு உள்ள பொன்னமராவதி வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் வாடகைக்கு வந்து தங்கியுள்ளார்.

 

பக்ரைன் போன வீரானந்தம், குடும்ப செலவுகளுக்கு கூட பணம் அனுப்புவதில்லை என்று அடிக்கடி சண்டையும் நடந்துள்ளது. ஒரு கட்டத்திற்கு மேல் தாங்க முடியாத மன உளைச்சலில் இருந்த ஜெயபாரதி, விஷம் அருந்தி தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்த போது 8 வயது மகன் ஹரி தன் தாயைவிட்டு பிரிய மனமின்றி தாயிடம் இருந்த விஷத்தை எடுத்து குடித்துவிட்டான். அவர்கள் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். 

 

தனது அக்கா மகள் 2 நாட்களாக போனில் பேசவில்லையே என்று அதே குடியிருப்பில் வசிக்கும் சித்தி அமுதா, ஜெயபாரதி வீட்டிற்கு சென்று பார்த்த போது தாயும் மகனும் சடலமாக கிடந்துள்ளனர். அருகிலேயே ஜெயபாரதி எழுதிய 2 பக்க கடிதம் சிக்கியுள்ளது. அதை படித்த காவல்துறையினரே கண்கலங்கினர். 

 

அந்தக் கடிதத்தில், ‘ரெஸ்பெக்டர் போலிஸ், என்னோட இந்த முடிவுக்கு யாரும் காரணமில்லை. என் சூழ்நிலை, உடல்நிலை, மன அழுத்தமே காரணம். உங்க நேரத்தை வீணடித்ததற்கு மன்னிப்பு கேட்டுக்கிறேன். உங்ககிட்ட ஒரு வேண்டுகோள்.. எங்க பாடியை அனாதை பிணம்னு ஒன்னா புதைச்சிடுங்க. எங்க பேரன்ஸ்கிட்டயோ என் சோ கால்ட்  ஹஸ்பண்ட் கிட்டயோ கொடுக்க வேண்டாம். நாங்க செத்த பிறகும் யாருக்கும் செலவு வைக்க விரும்பல..


அடுத்தது, சோ கால்ட் ஹஸ்பண்ட் வீரா, ஃபைனலி நீ நினைச்சது நடந்திருச்சு வீரா. இந்த 8 இயர்ல எங்களுக்கு ஏதும் பண்ணினதில்லை. ஒரு ஹஸ்பண்டா, ஒரு பாதரா, ஏன் ஒரு மனுசனா கூட இருந்ததில்லை. அப்படியே இருந்துடு. சும்மா ஊரை ஏமாத்த அழுது சீன் போடாத.. எங்க பிணத்தைக் கூட நீ பார்க்க கூடாது. நாங்க சாகனும்னு தானே நினைத்தாய் அது நடந்திருச்சு. என் பிள்ளைகிட்ட, ‘நீ போய் உன் டாடி கூட இருன்னேன்..’ ‘இல்லம்மா நானும் உன் கூடவே வருகிறேன்’னு விஷத்தை எடுத்து குடிச்சுட்டான். கடைசியில என் பிள்ளைக்கு என் கையாலயே விஷம் குடுக்க வச்சுட்டில.. சூசைட் பண்றது தப்புன்னு சொல்ற என்னையை சூசைட் மைன்ட்செட்டுக்கு தள்ளி சூசைட் பண்ண வச்சிருக்க பாரு ரியலி கிரேட் வீரா.. என் பிள்ளையை உன்னை நம்பி விட்டுட்டு போக கூடாதுன்னு தான் என்னோடவே அழைச்சுட்டு போறேன்..’ என்று குறிப்பிட்டுள்ளார். 

 

இதே போல ஜெயபாரதி தாயாரிடம் என் சொத்துகள் யாரிடமும் கொடுக்க வேண்டாம் இல்லாதவர்களுக்கு கொடுத்து விடுங்கள் என்று எழுதப்பட்டுள்ளது. இந்த கடிதத்தை பார்த்த போலிசாரும் கலங்கிவிட்டனர். இரு சடலங்களையும் மீட்டு புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர் போலிசார்.

 

 

சார்ந்த செய்திகள்