கோபிசெட்டிபாளையத்தை அடுத்த மொடச்சூர் பகுதியைச் சேர்ந்தவர் கங்காதரன். கடந்த மாதம் இவரிடம் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த கணவன் மனைவியான ராஜதுரை, ஸ்வேதா, வேலுச்சாமி, திருச்சி குட்டிமணி, மதுரை ராஜ்குமார் இவர்கள் அறிமுகமாகியுள்ளனர்.

அவர்கள் உத்திரபிரதேசத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஆன்லைன் மூலம் வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை செய்து வருவதாகவும், அந்த நிறுவனத்தில் நீங்களும் முதலீடு செய்யுங்கள் என்று கங்காதரனிடம் வலியுறுத்தியுள்ளனர். அவ்வாறு முதலீடு செய்தால் மாதம் 20 ஆயிரம் கமிஷன் கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.
இதை நம்பி கங்காதரன் ரூ.2.80 லட்சம் பணத்தை அவர்களிடம் கொடுத்துள்ளார். அந்த பலே ஆசாமிகள் நான்கு மாதங்கள் கமிஷனை சரியாக கொடுத்துள்ளனர். பின்னர் கமிஷன் பணம் வரவில்லை. அவர்களிடம் கங்காதரன் பணத்தைக் கேட்ட போது, கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

பின்னர் அந்த நிறுவனத்தைப் பற்றி கங்காதரன் வெளியில் விசாரித்த போது, அந்த பலே ஆசாமிகள் பிட் 2 பிடிசி .காம் என்ற நிறுவனத்தை நடத்தி வந்ததும், அந்த நிறுவனமானது இந்திய அரசால் தடை செய்யப்பட்ட பிட்காயின் என்ற மோசடியில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்துள்ளது. மேலும் டெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த அந்த நிறுவனம், இந்தியா முழுவதும் முகவர்களை நியமித்து சுமார் 2,000 கோடி வரை வசூலித்து மோசடி செய்துள்ளது என்ற அதிர்ச்சி தகவலும் அவருக்கு தெரியவந்துள்ளது.
இதையடுத்து அவர்களால் பதிக்கப்பட்ட அனைவரும் ஈரோடு குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் கொடுத்தனர். மேலும் தங்கள் பணத்தை மீட்டுத்தரக்கோரி கோரிக்கை வைத்தனர்.