Skip to main content

ஆளுநர் எங்கு ஆய்வுக்கு சென்றாலும் அங்கு சென்று நானே கறுப்புக்கொடி காட்டுவேன்: மு.க.ஸ்டாலின்

Published on 01/07/2018 | Edited on 01/07/2018
stu


அடுத்து என்றைக்கு ஆளுநர் ஆய்வுக்குப் போகப்போகிறார் என்று நான் காத்துக் கொண்டு இருக்கிறேன். ஆளுநர் எங்கு ஆய்வுக்கு சென்றாலும் அங்கு சென்று நானே கறுப்புக்கொடி காட்டுவேன் என திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

 

 


திமுக மாணவரணி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கரூர் திருமுருகன் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாநில மாணவர் அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் அடங்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில அமைப்பு செயலாளர் எம்.எல்.ஏ. எழிலரசன் தலைமை வகித்தார். இணை செயலாளர் எம்.எல்.ஏ. கோவி.செழியன், கரூர் மாவட்ட செயலாளர் நன்னீயூர் ராஜேந்திரன், அன்பில் மகேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 

ndf



இந்த கூட்டத்தில் பேசிய திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின்,

கடந்த சட்டமன்ற தேர்தலில் கொங்குமண்டலத்தில் தி.மு.க.விற்கு சரியான ஓட்டு கிடைக்கவில்லை. 10 இடங்கள் முதல் 15 இடங்களில் தோல்வியை தழுவியுள்ளோம். எனவே தான் ஆய்வு முடிந்தவுடன் அங்கிருந்தே களையெடுப்பை துவங்கினேன். திமுக தலைவர் கலைஞர் பணியாற்ற முடியாமல் ஓய்வில் இருக்கக்கூடிய சூழ்நிலையில் அவருக்குச் சிறிதும் கெட்டப்பெயர் வந்துவிடக்கூடாது. அவருடைய பெயருக்கு பெருமை சேர்க்கக் கூடிய வகையில் நாம் நம்முடைய பணியை ஆற்ற வேண்டும் என்பதற்காகத்தான் இந்த ஆய்வுக் கூட்டம் நடக்கிறது.

ஆட்சிக்கு யார் வேண்டுமானாலும் வரலாம், ஆட்சி என்பது சாதாரணம். அனைவரும் எம்.எல்.ஏ.வாக, எம்.பி.யாக, மேயர்களாக நகராட்சித் தலைவர்களாக வரலாம். ஈபிஎஸ், ஓபிஎஸ் உள்ளிட்டோரே முதல்வர், அமைச்சர்களாக இருக்கும்போது யார் வேண்டுமானாலும் அமைச்சர்களாக வரலாம். அது வேறு. ஆனால், இந்த இயக்கத்தை மறந்துவிடக் கூடாது. திராவிட இயக்கமாக இந்த இயக்கத்தைத் தலைவர்கள் தோற்றுவித்திருந்தாலும் அது திராவிடர் கழகமாக, அதன்பிறகு திராவிட முன்னேற்றக் கழகமாகக் கம்பீரமாக வளர்ந்துள்ளது. ஒட்டுமொத்த தமிழினத்திற்காகப் பாடுபட்டுக் கொண்டிருக்கும் கட்சி திமுக. அந்த வகையில்தான் ஆய்வுக் கூட்டங்களை நடத்தி வருகிறோம். ஆய்வுக் கூட்டம் என்பது ஒப்புக்காகவோ, விளம்பரத்திற்காகவோ நடத்தக்கூடியது அல்ல என்று குறிப்பிட்டுள்ளார்.
 

ja


நாட்டில் எவ்வளவோ கட்சிகள் இருக்கலாம். புதிது புதிதாக கட்சிகள் வரலாம். கட்சி தொடங்குவதற்கு முன்பே முதலமைச்சர் என்று சொல்லிக்கொண்டு அரசியலுக்கு வரக்கூடிய தலைவர்களை எல்லாம் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அது அவர்களுடைய ஆசை. அதில் நான் குறுக்கீடு செய்யவோ, விமர்சிக்கவோ விரும்பவில்லை. ஏனெனில் அவர்களை விமர்சித்து நமக்கிருக்கக் கூடிய தகுதியை நாம் குறைத்துக் கொள்ளக் கூடாது என்று கூறிய ஸ்டாலின், யாரையும் விமர்சித்தோ, கேலி செய்தோ, கிண்டல் செய்தோ, நான் பேசியதில்லை. ஏனெனில் நான் கலைஞரின் மகன். அவரால் உருவாக்கப்பட்டவன். எந்த ஆட்சியையும் கலைஞர் கலைத்தவர் அல்ல, கலைஞர் ஆட்சியைக் கவிழ்த்தார் என்று யாராவது ஆதாரத்தோடு நிரூபித்து விட்டால் நாளைக்கே இந்த ஆட்சியை நான் கவிழ்க்கிறேன். அவருடைய ஆட்சியைத் தான் இரண்டு முறை கவிழ்த்தார்கள்.

நாமக்கல் மாவட்டத்தில் ஆளுநருக்கு கறுப்புக்கொடி காட்டியவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து நாம் கருப்பு கொடி காட்டினால் 7 ஆண்டுகள் சிறை என்று பயமுறுத்துகிறார்கள். இதற்கெல்லாம் பயப்படுபவர்கள் தி.மு.க.காரர்கள் அல்ல. ஏழு வருடம் என்ன மாநில சுயாட்சி பறி போகிறது என்றால் அதற்காக நாங்கள் ஆயுள் முழுவதும் இந்தத் தண்டனையை ஏற்றுக் கொள்ள தயாராக இருக்கிறோம். அதைவிடப் பெருமை வேறு என்ன வந்துவிடப் போகிறது? குறிப்பாக, என்றைக்கு ஆளுநர் ஆய்வுக்குப் போகப்போகிறார் என்று நான் காத்துக் கொண்டு இருக்கிறேன். நானே போகப்போகிறேன். கறுப்புக் கொடி காட்டுவதற்கு! கைது செய்யுங்கள்; தயார்! இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சார்ந்த செய்திகள்

Next Story

“என்ன எல்லாரும் பளபளன்னு இருக்கீங்க... ஆயிரம் ரூபாய் வந்துடுச்சா” - கதிர் ஆனந்த் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Kathir Anand campaign in Vellore

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பரதராமி, கல்லப்பாடி, கொண்டசமுத்திரம்,  பி.கே.புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வேலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் பிரச்சாரம் மேற்கொண்டார்

அப்போது பேசிய கதிர் ஆனந்த், ட்ரைவர் வண்டி மேல இருக்க ஹெட் லைட் எல்லாம் ஆஃப் பண்ணுப்பா. என் மூஞ்சு தெரியமாட்டுதாம் என்று கூற, உடனடியாக ட்ரைவரும் லைட் ஆஃப் பண்ண, மக்களை பார்த்து இப்போது எனது முகம் தெளிவாக தெரிகிறதா? என்று கேட்டார். அதற்கு மக்களும் தொண்டர்களும் தெரியுது தெரியுது என்று சிரித்துக்கொண்டே கூற தனது பேச்சைத் தொடங்கினார்.

அந்த கலகலப்பு குறையாமல் இருக்க மக்களைப் பார்த்து, என்ன எல்லாரும் பல பளபளன்னு இருக்கீங்க... எல்லாம் ஃபுல்லா மேக்கப் போட்டு வந்து இருக்கீங்களா... ஃபேரன் லவ்லி, ஸ்டிக்கர் பொட்டு எல்லாம் போட்டு ஜம்முன்னு வந்திருக்கீங்களா... என்று கேட்க கூட்டத்தில் இருந்தவர்கள் சிரிக்க ஆரம்பிக்க, அதைவிட உங்க முகத்தை பார்க்கும் போது ஒரு புன்னகை, சந்தோஷம் தெரிகிறது.

நான் வந்தவுடனே சீதாராமன் கிட்ட கேட்டேன், “என்னாங்க எல்லார் மத்திலயும் ஒரு சந்தோஷம் இருக்குதே என்னா காரணம்னு கேட்டேன். அதுக்கு அவரு சொன்னாரு எல்லாருக்கும் மாசம் மாசம் ரூ. 1000 பணம் கொடுக்குறாங்களாம். அதான் எல்லாரும் ஹாப்பியா இருக்காங்களாமானு சொன்னாரு...’ என்ன உண்மையா அது? என்று பெண்களை பார்த்து கேட்க, அவர்களும் ஆம் என்று கூச்சலிட்டனர். அப்பொழுது சிலர் இன்னும் எங்களுக்கு வரவில்லை என கூறினர். அதற்கு இந்த தேர்தல் முடிந்தவுடன் அனைவருக்கும் கலைஞர் மகளிர் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று  மக்களிடையே தனது கலகலப்பான பேச்சை தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இருப்பினும், ஃபேரன் லவ்லி போட்டீங்களா? பொட்டு வச்சீங்களா? பளபளன்னு இருக்கீங்க என கதிர் ஆனந்த் கேட்டது பெண்களிடம் முகச்சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை எதிர்க்கட்சிகள், பெண்களை கொச்சைப்படுத்தி பேசுகிறார் வேட்பாளர். இது மேட்டிமைத்தனம், ஆயிரம் ரூபாய் இல்லை என்றால் பெண்கள் என்ன பொட்டு வைக்கக் கூடாதா? தங்களை அழகுபடுத்திக் கொள்ளக் கூடாதா? எனக் கேள்வி எழுப்பி விமர்சனம் செய்து வருகின்றனர்.

Next Story

கமல்ஹாசனை சந்தித்த டி.ஆர். பாலு

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
TR Balu met Kamal Haasan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், இந்த தேர்தலில் இந்தியா கூட்டணியை ஆதரித்து தமிழகத்தில் பிரச்சாரம் செய்யும் எனக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்திருந்தார் .

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன் நடிகர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து தங்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருந்தார். தற்போது ஸ்ரீபெரும்புதூர் திமுக நாடாளுமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள டி.ஆர்.பாலுவும், அமைச்சர் சேகர்பாபுவும் ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைமை அலுவலகத்திற்குச் சென்றனர். இந்த சந்திப்பில் நடிகர் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.