Skip to main content

மக்கள் மத்தியில் உள்ள அச்ச உணர்வை போக்கிட அமைச்சர்களும், முதல்வரும் உடனடியாக தூத்துக்குடி செல்ல வேண்டும் - ஸ்டாலின்

Published on 22/05/2018 | Edited on 22/05/2018
mk

 

 

 

பேரணி சென்ற பொதுமக்களை குருவிகளை சுடுவது போல மனிதாபிமானமின்றி சுட்டுக்கொன்றுள்ள அரசை வன்மையாக கண்டிக்கிறேன். உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து துப்பாக்கி சூடு குறித்து விசாரிப்பதோடு – உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு தலா ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்று திமுக    செயல் தலைவர்  மு.க.ஸ்டாலின்  அறிக்கை விடுத்துள்ளார்.

 

அவர் மேலும் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து நீண்டகாலமாக போராடிவரும் மக்கள் மீது காவல்துறையினர் நடத்திய கண்மூடித்தனமான, மனிதாபிமானமற்ற துப்பாக்கிச்சூட்டிற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். 


துப்பாக்கிச் சூட்டில் இதுவரை பத்து பேர் உயிரிழந்திருக்கிறார்கள் என்றும், இன்னும் பல பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்றும் வரும் செய்திகள் பேரதிர்ச்சியளிக்கின்றன.

 

இந்தப் போராட்டம் ஏதோ திடீரென்று நடைபெற்ற போராட்டம் அல்ல. இன்றைய தினம் துாத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி பேரணி நடத்தப்படும் என்பது முன்கூட்டியே காவல்துறையினருக்கு தெரிந்த ஒன்று. ஏறக்குறைய 20 ஆயிரம் பேருக்கு மேல் அதில் பங்கேற்பார்கள் என்பது மாநில உளவுத்துறைக்கும், மாவட்ட காவல்துறைக்கும், ஏன் தமிழ்நாடு சட்டம் - ஒழுங்கு டி.ஜி.பி.க்கும் தெரியாத ஒரு ரகசியமான பேரணி அல்ல.

 

 

ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரும் போராட்டத்தை தொடர்ந்து நடத்திவரும் அந்த மக்களை முதலமைச்சர் திரு, எடப்பாடி பழனிசாமி உடனடியாக அழைத்துப் பேசியிருக்க வேண்டும். போராடும் யாரையும் சந்திக்கவே கூடாது என்று முடிவெடுத்து, அதிகாரம் என்ற கனவுலகில் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் முதலமைச்சருக்கு மக்கள் போராட்டம் கண்ணுக்குத் தெரியவில்லை. அவரது நிர்வாகத் திறமையற்ற தலைமையில் கீழ் இருக்கும் “குட்கா” வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு தமிழக காவல்துறையை வழிநடத்தும் திறமைமிக்க தலைமையை இழந்து நிற்கும் டி.ஜி.பி.  டி.கே. ராஜேந்திரனுக்கும் புரியவில்லை என்பதுதான், இப்படி 10 பேருக்கும் மேற்பட்டோரின் உயிர்களை பறிக்கும் கண்மூடித்தனமான துப்பாக்கிச்சூடு நடைபெற்றதற்கு காரணம் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

 

மிகப்பெரிய மக்கள் பேரணியை தவிர்க்கும் பொருட்டு, அம்மக்களுடன் அங்குள்ள மாவட்ட ஆட்சித் தலைவர், மாவட்ட போலீஸ் அதிகாரி, ஏன் தென் மாவட்டங்களில் உள்ள அமைச்சர்களில் ஒருவர் கூட நேரில் சென்று சந்தித்து, போராடுவோரை அமைதிப்படுத்தியிருக்கலாம். அதில் அலட்சியமாக இருந்துவிட்டு தடியும், கண்ணீர் புகை குண்டுகளும், துப்பாக்கியும் போதும் என்று ஒரு ஈவு இரக்கமற்ற எண்ணத்தில் இந்தப் போராட்டத்தை கையாளவிட்டது அதிமுக அரசின் இமாலய நிர்வாகத் தவறு.

 

அதிகாரிகளை அழைத்து ஆலோசனை நடத்திய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தன் தோல்வியை மறைப்பதற்கு ஒட்டுமொத்த மக்களையும் வன்முறையாளர்களாக சித்தரித்து ஒரு அறிக்கையை வெளியிட்டிருப்பதும், துப்பாக்கிச்சூடு தொடர்பான செய்திகளை தொலைக்காட்சிகள் பத்திரிக்கைகள் வெளியிடக்கூடாது என்று டி.ஜி.பி.  டி.கே.ராஜேந்திரன் எச்சரித்திருப்பதும், அப்பாவி மக்கள்மீது அராஜாகத்தை கட்டவிழ்த்து விட்டு, துப்பாக்கிச்சூடு நடத்திட எங்கிருந்து உத்தரவு போயிருக்கிறது என்பதை வெளிப்படுத்தியுள்ளது.

 

அப்பகுதியில் சகஜ நிலைமை திரும்பிவிட்டது என்று பேட்டியளித்துக் கொண்டே, இன்னொருபுறம் சற்றுமுன்பு கூட அங்கே துப்பாக்கிச்சூடு நடத்தி, அதில் ஒருவர் இறந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. 

 

போராட்டம் துவங்கிய போதே ஸ்டெர்லைட் ஆலை மூடப்படும் என்ற அறிப்பை வெளியிட்டிருந்தாலோ அல்லது போராடும் மக்களை முதலமைச்சர் அழைத்துப் பேசி உறுதியளித்திருந்தாலோ இந்த விபரீத நிலைமை ஏற்பட்டிருக்காது. பத்துக்கும் மேற்பட்ட அப்பாவி உயிர்கள் பலியாகியிருக்காது.

 

 

குருவிகளை சுட்டுக் கொல்வது போல் மக்களை சுட்டு வீழ்த்தி விட்டு, மக்களின் உணர்வுகளுக்கு இந்த அரசு மதிப்பளிக்கும் என்று முதலமைச்சர் அறிக்கை விடுத்திருப்பது வெட்கக் கேடானது. ஆகவே, ஸ்டெர்லைட் ஆலையை மூடிவிட்டு, காவல்துறையின் துப்பாக்கிச்சூடு பற்றி விசாரிக்க, உடனடியாக உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையத்தை அமைக்க வேண்டும் எனவும், துப்பாக்கிச் சூட்டில் பலியான ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ஒரு கோடி ரூபாய் நிவாரண நிதி வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

 

மக்கள் பேரணி பற்றி முன்கூட்டியே அறிந்தும் கோட்டை விட்ட, தமிழக காவல்துறையை வழிநடத்தும் தலைமைப் பண்பு இல்லாமல் இருக்கும், தமிழ்நாடு சட்டம் - ஒழுங்கு டி.ஜி.பி.  டி.கே.ராஜேந்திரனை உடனடியாக பதவிநீக்கம் செய்து, புதிய காவல்துறை தலைவரின்கீழ் அங்கு சகஜ நிலைமையை ஏற்படுத்தி, மக்கள் மத்தியில் உள்ள அச்ச உணர்வை போக்கிட அமைச்சர்கள் அடங்கிய குழுவும், முதல்வரும் உடனடியாக தூத்துக்குடி செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.’’

சார்ந்த செய்திகள்