தமிழ்நாட்டில் 1996 முதல் 2001ம் ஆண்டு வரை திமுக ஆட்சி நடைபெற்றது. இந்தக் காலகட்டத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சராக பொன்முடி இருந்தார். அந்த நேரத்தில் அவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக 2002ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி உட்பட மேலும் ஐந்து பேர் சேர்க்கப்பட்டிருந்தனர்.
விழுப்புரத்தில் நடந்து வந்த இந்த வழக்கு விசாரணை வேலூர் முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்றது. இறுதியில் கடந்த ஜூன் 28ம் தேதி போதிய ஆதாரம் இல்லை எனக் கூறி நீதிமன்றம் அவர்கள் அனைவரையும் இந்த வழக்கில் இருந்து விடுவித்திருந்தது.
இதனைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்தார். மேலும், இந்த வழக்கை தாமே விசாரிப்பதாக நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இதனை எதிர்த்து அமைச்சர் பொன்முடி உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார். இந்த மனு விரைவில் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என சொல்லப்படுகிறது.