Skip to main content

அமைச்சரின் ஆதரவாளர் போட்ட ஸ்கெட்ச்..! அதிரடி காட்டிய காவல்துறை! 

Published on 24/11/2021 | Edited on 24/11/2021

 

Minister Anitha Radhakrishan's supporter arrested by police

 

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் ஆதரவாளரான பில்லா ஜெகன், அவர் மூலமாகவே திமுகவில் உயர்ந்த பொறுப்பான தலைமைச் செயற்குழு உறுப்பினர் பதவியைப் பெற்றவர்.

 

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன், தன் தம்பியைச் சுட்ட வழக்கு, மற்றொருவரைக் கொலைசெய்த வழக்கு ஆகியவை அவர்மீது நிலுவையில் இருக்கின்றன. இந்தச் சம்பவத்தில் இறந்துபோனவரின் தம்பி, தன் அண்ணனின் கொலைக்குப் பழியாக பில்லாவை கொல்ல அவரை வேவு பார்த்திருக்கிறார்.

 

இத்தகவல் பில்லா ஜெகனுக்கும் போக, அவரும் அந்த நபரைப் பின்தொடர்ந்திருக்கிறார். அந்த நபரின் வீடு, தூத்துக்குடி பீச் ரோட்டிலிருக்கும் பழைய சர்க்யூட் ஹவுசின் பின்புறமிருப்பதையும், சுற்றுலா மாளிகையின் மாடியிலிருந்து அவரது வீட்டையும் அவரையும் கண்காணிக்கலாம் என்றும் திட்டமிட்டு, கடந்த சில நாட்களுக்கு முன்பு தன் சகாக்கள் சிலருடன் பீச் ரோடு பழைய சுற்றுலா மாளிகைக்குப் போன பில்லா, சுற்றுலா மாளிகையின் பொறுப்பாளர் சதாம் சேட்டிடம் தங்குவதற்காக ரூம் கேட்டிருக்கிறார். தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை விசாரிக்கும் ஒருநபர் விசாரணை கமிஷனான நீதிபதி அருணா ஜெகதீசன் கமிஷன் இந்த மாளிகையில் செயல்படுவதால், இங்கே தனிநபருக்கு அனுமதியோ, தங்குவதற்கு அறை ஒதுக்கப்படும் வழக்கமோ கிடையாது என்று சொல்லியிருக்கிறார் சுற்றுலா மாளிகையின் பொறுப்பாளரான சதாம் சேட்.

 

இதனால் ஆத்திரமான பில்லா, அவரிடம் ரூம் கேட்டு வாக்குவாதம் செய்ததுடன், தாக்கவும் செய்திருக்கிறார். இதுகுறித்து பொறுப்பாளர் சதாம் சேட், தென்பாகம் காவல் நிலையத்தில் புகார் செய்திருக்கிறார்.

 

பில்லா ஜெகன் மீதான புகாரைப் பெற்ற போலீஸ் அதிகாரி, பிரச்சனையை சமாதானமாகப் பேசி முடித்துவிடலாம் என்ற திட்டத்தில் இருப்பதை அறிந்த விசாரணை கமிஷன் பணியாளர் சதாம் சேட், தன் புகாருக்கு நடவடிக்கை இருக்காது என்பதையறிந்ததும் நடந்ததை அப்படியே விசாரணை கமிஷன் நீதிபதியான அருணா ஜெகதீசனிடம் தெரிவித்திருக்கிறார். அதையடுத்து அருணா ஜெகதீசன், இந்த விஷயத்தை டி.ஜி.பி.யிடம் தெரிவிக்க, முதல்வரின் கவனத்திற்குப் போயிருக்கிறது.

 

பிறகென்ன, தூத்துக்குடி தென்பாகம் போலீசார் பில்லா ஜெகன் மீது வழக்குப் பதிவுசெய்து கைது செய்திருக்கிறார்கள். கட்சிக் கட்டுப்பாட்டை மீறியதற்காக அவரை அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கி நடவடிக்கை எடுத்திருக்கிறார் திமுகவின் பொதுச்செயலாளரான துரைமுருகன்.

 

இதுகுறித்து மாவட்ட எஸ்.பி.யான ஜெயக்குமாரிடம் கேட்டபோது, “பில்லா ஜெகனை ஃபாலோ செய்த நபரை வரவழைத்து எச்சரிக்கை செய்திருக்கிறோம். தாக்குதல் தொடர்பாக பில்லா ஜெகன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டிருக்கிறார்” என்றார்.

 

பில்லா ஜெகனின் இந்த விவகாரம் உப்பு நகரைப் பரபரப்பாக்கியிருக்கிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.