Skip to main content

மேட்டூர் அணை நீர்மட்டம் சர்ர்ர்...!

Published on 15/09/2018 | Edited on 15/09/2018

 

meeting


மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு நீர்திறப்பு அதிகரித்துள்ள நிலையில், அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.

    
கர்நாடகா மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த பலத்த மழையால் ஜூலை மாதத்தில் கேஆர்எஸ் அணையில் இருந்து உபரி நீர் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டது. இதையடுத்து மேட்டூர் அணை, 120 அடி உயரத்தைக் கடந்ததுடன் மளமளவென முழு கொள்ளளவையும் எட்டியது. இந்த ஆண்டில் மட்டும் நான்கு முறை முழு கொள்ளளவை எட்டியது.


இதையடுத்து, டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையும் திறக்கப்பட்டது. இந்நிலையில், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழைப்பொழிவு குறைந்ததால், மேட்டூர் அணைக்கு நீர் வரத்து வெகுவாக குறைந்தது. கடந்த இரண்டு நாள்களாக அணைக்கு வினாடிக்கு 7 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இன்று காலை நிலவரப்படி அணைக்கு 7522 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது.


அதேநேரம், காவிரி டெல்டா விவசாயத்திற்காக அணையில் இருந்து வினாடிக்கு 22 ஆயிரம் கனஅடி நீரும், கால்வாய் பாசனத்திற்காக 800 கனஅடி தண்ணீரும் திறந்துவிடப்படுகிறது.


பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவைக் காட்டிலும், நீர் வரத்து குறைவாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. இதனால் நேற்று 114.98 அடியாக இருந்த நீர்மட்டம், இன்று காலை 114.08 அடியாக குறைந்து. கடந்த 9 நாள்களில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 6 அடி வரை குறைந்துள்ளது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

மேட்டூர் அணையில் நீர் திறக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!

Published on 03/02/2024 | Edited on 03/02/2024
CM MK Stalin order to open water in Mettur Dam

டெல்டா மாவட்டங்களில் பயிரிடப்பட்ட சம்பா பயிர்களைக் காத்திட மேட்டூர் அணையில் இருந்து இன்று (03.02.2024) முதல் இரண்டு டி.எம்.சி. (TMC) தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “நடப்பு ஆண்டில் வடகிழக்குப் பருவ மழைப்பொழிவு குறைவாகப் பெய்த காரணத்தாலும், காவிரி நதிநீர்ப் பற்றாக்குறையாலும், டெல்டா மாவட்டங்களில் பயிரிடப்பட்ட சம்பா பயிர்கள் பாதிக்கப்பட்டு வருகிறது. இதனால் மேட்டூர் அணையிலிருந்து நீர் திறந்து விடக் கோரி விவசாயிகளிடமிருந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு கோரிக்கை கிடைக்கப் பெற்றது. அதன் அடிப்படையில் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் சம்பா நெற்பயிரின் நிலையினை அறிந்திட தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில், கிராம அளவில் 30 குழுக்கள் அமைக்கப்பட்டு, 298 கிராமங்களில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த குழுக்களின் அறிக்கையின் அடிப்படையில், திருவாரூர் மாவட்டத்தில் 4 ஆயிரத்து 715 ஏக்கரும், நாகப்பட்டினம் மாவட்டத்தில் 18 ஆயிரத்து 59 ஏக்கரும், என மொத்தம் 22 ஆயிரத்து 774 ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் பாசன நீர்ப்பற்றாக்குறையால் பாதிக்கப்படும் என அறியப்பட்டுள்ளது. எனவே, விவசாயப் பெருமக்களின் நலன் கருதி நெற்பயிரினைக் காத்திட, மேட்டூர் அணையிலிருந்து இரண்டு டி.எம்.சி. (TMC) தண்ணீரை இன்று (03.02.2024) முதல் திறந்துவிட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். எனவே. விவசாயிகள் இப்பாசன நீரினை சிக்கனமாகப் பயன்படுத்தி சம்பா நெற்பயிரைப் பாதுகாத்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேட்டூர் அணையில் நீர் திறக்க உத்தரவு

Published on 02/02/2024 | Edited on 02/02/2024
Order to open water in Mettur Dam

மேட்டூர் அணையில் இருந்து நாளை முதல் நீர் திறந்து விட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

விவசாயிகளின் கோரிக்கையை அடுத்து சம்பா பயிர் சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து இரண்டு டிஎம்சி தண்ணீர் திறக்க உத்தரவு கொடுக்கப்பட்டுள்ளது. திருவாரூரில் 4,715 ஏக்கரும், நாகையில் 18,059 ஏக்கரும் தண்ணீர் பற்றாக்குறையால் சம்பா நெற்பயிர்கள் பாதிப்பு அடைந்துள்ளது.

இதனால் விவசாயிகள் முதல்வரிடம் நீர் திறக்க கோரிக்கை வைத்திருந்ததை தொடர்ந்து தமிழக முதல்வர் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார். மேட்டூரில் பாசனத்திற்கு நீர் திறப்பதற்காக தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் 30 குழுக்கள் அமைக்கப்பட்டு 298 கிராமங்களில் கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.