Skip to main content

சொத்துத் தகராறில் பிரிந்த குடும்பம்; கலவர பூமியாக்கிய 2 கோஷ்டிகள் - சிவகங்கையில் பதற்றம்

Published on 30/11/2022 | Edited on 30/11/2022

 

Members same family attacked each other property dispute sivaganga

 

சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அருகே உள்ள வைகை மீனாட்சிபுரத்தைச் சேர்ந்தவர் கோடீஸ்வரன். இவர் மீது திருப்பாச்சேத்தி காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் இருக்கின்றன. கோடீஸ்வரனுக்கும் அவரது குடும்ப உறுப்பினரான ராமன் என்பவருக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. அதே வேளையில் வைகை மீனாட்சிபுரத்திற்கு மின் விநியோகம் செய்யும் டிரான்ஸ்பார்மர் அமைந்துள்ள இடத்தை கோடீஸ்வரன் தனக்குச் சொந்தமானது எனத் தொடர்ந்து பிரச்சனை செய்து வந்துள்ளார்.

 

இதனால் இரு தரப்பினருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று கோடீஸ்வரன் தரப்பைச் சேர்ந்த தங்கப்பா என்பவர், அவர் ஓட்டி வந்த சரக்கு வேனை ராமன் மீது மோதுவது போல் வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராமன் தரப்பு, தங்கப்பாவிடம் தகராறு செய்துள்ளனர்.

 

இதையறிந்த கோடீஸ்வரன் 10க்கும் மேற்பட்ட நபர்களை அழைத்துக்கொண்டு, ராமன் தரப்பினர் மீது கொலைவெறியுடன் தாக்குதல் நடத்தியுள்ளார். இந்த இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் மீது ஒருவர் கற்களால் தாக்கிக் கொண்டனர். இந்த சம்பவத்தில் 10வயது சிறுமி உள்பட 7 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும்  சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த திருப்பாச்சேத்தி போலீசார் தாக்குதல் நடத்தியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

 

ஊர்மக்கள் முன்னிலையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கொடூரமாக தாக்கிக் கொள்ளும் வீடியோ காட்சிகள் திருப்பாச்சேத்தி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்