Skip to main content

எம்.எல்.ஏ மகனை திருமணம் செய்து வைப்பதாகக் கூறி 20 லட்சம் ரூபாய் சுருட்டல்; கல்யாண தரகரைக் கடத்திய பெண் வீட்டார்!

Published on 27/04/2023 | Edited on 27/04/2023

 

Marriage broker kidnapping in Salem

 

தலைவாசல் அருகே, எம்.எல்.ஏவின் மகனை வரன் பேசி முடித்துக் கொடுப்பதாகக் கூறி, விவசாயியிடம் 20 லட்சம் ரூபாய் சுருட்டிய கல்யாண  தரகரை, பெண் வீட்டார் காரில் கடத்திச்சென்று சரமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.    

 

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள தியாகனூரைச் சேர்ந்தவர் ஆறுமுகம். விவசாயி. இவர், தனது மகளுக்கு திருமணம் செய்து  வைப்பதற்காக வரன் பார்த்துக் கொண்டிருந்தார். இதற்காக பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே உள்ள கைகளத்தூரைச் சேர்ந்த முருகன் மகன் செல்லமுத்து (42) என்பவரை  அணுகியுள்ளார். அவரும் பல இடங்களில் வரன் பார்த்துள்ளார். இந்நிலையில், எம்.எல்.ஏ ஒருவரின் மகனுக்கு திருமணம் செய்து வைப்பதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதை நம்பிய ஆறுமுகம், தரகர்  செல்லமுத்து கேட்டபோதெல்லாம் சிறுகச் சிறுக என 20 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார்.    

 

இந்நிலையில், ஏப். 24ம் தேதியன்று செல்லமுத்து தலைவாசலுக்குச் சென்றுவிட்டு வருவதாக தனது மனைவி தெய்வானையிடம் கூறிவிட்டுச்  சென்றுள்ளார். இரவு 7 மணியளவில், ஆத்தூர் புளியங்குறிச்சி பகுதியில் டாஸ்மாக் கடை அருகே நண்பர் ராமருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு காரில் வந்த 6 பேர் கும்பல், திடீரென்று செல்லமுத்துவை சரமாரியாக தாக்கியதோடு, அவரை காரில் கடத்திச் சென்றனர்.  

 

இதுகுறித்து ராமர், செல்லமுத்துவின் மனைவிக்கு தகவல் அளித்தார். இதையடுத்து செல்லமுத்து மனைவி வீரகனூர் காவல்நிலையத்தை தொடர்பு கொண்டு, தனது கணவரை சிலர் கடத்திச்சென்று விட்டதாக  கூறினார். அதன்பேரில், காவல்துறையினர் செல்லமுத்துவை தேடினர். இதற்கிடையே, கைகளத்தூர் பகுதியில் மர்ம கும்பல் அவரை இறக்கிவிட்டுவிட்டு தப்பிச் சென்றுவிட்டது. செல்லமுத்துவை கை, கால்களை  கட்டிப்போட்டு,  காருக்குள் அடைத்து வைத்து விடிய விடிய சரமாரியாக தாக்கியுள்ளனர்.  இதில் பலத்த காயம் அடைந்த செல்லமுத்துவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

 

அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இதில், ஆறுமுகம் மகன் மருதமுத்து (27), அவருடைய கூட்டாளிகளான கெங்கவல்லியைச் சேர்ந்த கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி துணை செயலாளர் கருப்பையா, ஆணையம்பட்டி ராமர், வலசக்கல்பட்டி வசந்தபுரத்தை சேர்ந்த முருகேசன், புனல்வாசலைச் சேர்ந்த தாமரைச்செல்வன், பாண்டியன் ஆகியோர் கடத்திச்சென்று தாக்கியது தெரிய வந்தது. அவர்கள் மீது கடத்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில், ஏப். 25ம் தேதி மாலை மருதமுத்துவை காவல்துறையினர் பிடித்தனர். அவரிடம் விசாரணை நடத்தியதில், கல்யாண தரகர்  செல்லமுத்து கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக பரபரப்பு தகவல்கள் வெளியாகின.  

 

ஆறுமுகத்தின் மகளுக்கு செல்லமுத்து வரன் பார்த்து வந்துள்ளார். அவரிடம் உங்கள் மகள் எம்எஸ்சி பிஎட் படித்துள்ளார். அவருக்கு ஆசிரியர்  வேலை ஏற்பாடு செய்து விட்டால், தனக்குத் தெரிந்த எம்எல்ஏ ஒருவரின் மகனுக்கு திருமணம் செய்து கொடுத்து விடலாம் என கூறியுள்ளார். எம்எல்ஏ மகனை திருமணம் செய்து கொடுப்பதாகக் கூறி, முதலில் 10 லட்சம் ரூபாய் பெற்றுள்ளார். பின்னர் சில தவணைகளில் மேலும் பணம்  பெற்றுள்ளார். இது ஒருபுறம் இருக்க, ஆறுமுகத்தின் மகளுக்கு சில தோஷங்கள் இருக்கிறது என்றும், அதற்கு பரிகாரம் செய்ய வேண்டும்  எனக்கூறியும் மேலும் சில லட்சங்களை கறந்துள்ளார். இப்படி ஆறுமுகத்திடம் இருந்து பல தவணைகளில் மொத்தம் 20 லட்சம் ரூபாய் வரை  செல்லமுத்து வசூலித்துள்ளார்.

 

ஆனாலும், எம்.எல்.ஏ மகன் மட்டுமின்றி உருப்படியாக ஒரு வரன் கூட பார்த்துக் கொடுக்கவில்லை எனத் தெரிகிறது. இதனால் ஏமாற்றம்  அடைந்த ஆறுமுகம் குடும்பத்தினர் தங்களிடம் இருந்து ஏமாற்றிப் பறித்துக்கொண்ட பணத்தை திரும்பக் கேட்டு நெருக்கடி கொடுத்துள்ளனர்.     அத்துடன் நில்லாமல் ஆறுமுகம், தரகர் செல்லமுத்து மீது கைகளத்தூர் காவல்நிலையத்தில் மோசடி செய்ததாக புகார் அளித்துள்ளார். அவருடைய சொந்த ஊரான தலைவாசல் காவல்நிலையத்திலும் செல்லமுத்து மீது புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக விசாரணைக்கு  ஆஜராகுமாறு காவல்துறையினர் அழைத்தும் செல்லமுத்து விசாரணைக்கு வராமல் போக்குக் காட்டி வந்துள்ளார்.     

 

இந்த நிலையில்தான் சம்பவத்தன்று செல்லமுத்து, வீரகனூர் அருகே வேப்பம்பூண்டியில் தனது நண்பருடன் பேசிக்கொண்டு இருப்பதைப்  பார்த்த ஆறுமுகத்தின் மகனும், கூட்டாளிகளும் அவரை காரில் கடத்திச்சென்று, தங்களிடம் இருந்து வாங்கிய 20 லட்சம் ரூபாயைக் கேட்டு  விடிய விடிய தாக்கியுள்ள தகவல்கள் விசாரணையில் தெரிய வந்தது.     இதையடுத்து மருதமுத்துவை கைது செய்த காவல்துறையினர் அவரை ஆத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர், அவரை ஆத்தூர்  சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக விசிக கட்சி நிர்வாகி கருப்பையா உள்ளிட்ட 5 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் ஆத்தூர், தலைவாசல் சுற்றுவட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை; நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Father sentenced to life imprisonment for misbehaving with daughter

திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் 64 வயதான விவசாயி. இவருக்கு 35 வயதில் மாற்றுத்திறனாளி (மன நலம் பாதிக்கப்பட்ட ) ஒரு மகள் இருந்தார். கை, கால்களும் செயல் இழந்த அந்த பெண் தனது தாயாரின் பராமரிப்பில் இருந்து வந்த நிலையில் அவரது தாயார் இறந்து விட்டார்.

இதனையடுத்து தனது தந்தை மற்றும் பாட்டியின் பராமரிப்பில் இருந்து வந்தார். இந்நிலையில் கடந்த 2021 ஆவது ஆண்டில் பெண்ணின் உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டதையடுத்து, மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர். இதில் மாற்றுத்திறனாளியான அந்த பெண் கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. இது குறித்து அவரது உறவினர்கள் முசிறி மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.

இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், தந்தையான விவசாயியே அவரது மகளை 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 19 ஆம் தேதி பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கிய விவரம் தெரியவந்தது. இதனையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர். அடுத்த சில மாதங்களில், பெண்ணுக்கு குறை பிரசவத்தில் குழந்தை இறந்து பிறந்தது. மேலும் 5 மாதங்கள் கழித்து உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் அந்த பெண்ணும் உயிரிழந்தார்.

இதுதொடர்பான வழக்கு திருச்சி மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டு நடந்து வந்தது. வழக்கில் வியாழக்கிழமை தீர்ப்பளிக்கப்பட்டது. இதில், குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து விவசாயிக்கு வாழ்நாள் சிறை தண்டனையும், ரூ. 10,000 அபராதமும் விதித்து நீதிபதி ஸ்ரீவத்சன் தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசுத்தரப்பு சிறப்பு வழக்குரைஞராக ஜாகிர் உசேன் ஆஜரானார்.

Next Story

வீடியோ காலில் பேசிக் கொண்டிருந்த மனைவியின் கையை வெட்டிய கணவன்!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
husband cut the hand of his wife who was talking on video call

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பிச்சனூர்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சேகர் (41 ) நெசவுத் தொழிலாளி இவரது மனைவி ரேவதி (வயது 35) இவர்களுக்கு மூன்று மகள்கள் உள்ளனர். இரண்டு மகள்களுக்கு திருமணம் ஆகிவிட்ட நிலையில் மூன்றாவது மகள் பள்ளியில் படித்து வருகிறார் .

இந்த நிலையில் ரேவதி கடந்த சில மாதங்களாக சமூக வலைத்தளங்களில் ரீல்ஸ் பார்ப்பது, போட்டோ போடுவது, ஆன் லைன் நண்பர்களுடன் பேசுவது என அதிக அளவு நேரம் செலவிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு  குடும்பத்தில் சண்டை நடந்து வந்ததாக கூறப்படுகிறது.

நேற்று இரவு ரேவதி வீடியோ காலில் நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார். வீட்டுக்கு வந்த சேகரை கவனிக்காமல் மனைவி பேசிக்கொண்டே இருந்ததால் ஆத்திரம் அடைந்த சேகர் ரேவதியை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து இருவர்களுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. இதில்  ஆத்திரமடைந்த சேகர் வீட்டிலிருந்த அருவாமனையை எடுத்தவர், இந்த கை தானே போன் எடுத்து பேசிக்கிட்டே இருக்குது, ரீல்ஸ் பார்க்கச்சொல்லுது, பேசச்சொல்லுது என ரேவதியின் வலது கையை வெட்டியுள்ளார்.

கையில் வெட்டுப்பட்டதால் அலறிய ரேவதியை அக்கம்பக்கத்தினர் மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். வெட்டப்பட்ட கை பலத்த சேதம் அடைந்த நிலையில் அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து குடியாத்தம் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து, சேகரை அழைத்துவந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதில், குடும்பத்தை கவனிக்காமல் எப்போது பார்த்தாலும் போன் வைத்துக் கொண்டு யாருடனாவது பேசிக்கொண்டே இருக்கிறார். அல்லது ஏதாவது பார்த்துக் கொண்டே இருக்கிறாள். இதைக்கேட்டதற்கு என்னை எடுத்தெறிந்து பேசினாள். இதனால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு வர ஆரம்பித்தது அந்த கோபத்தில் தான் வெட்டினேன் எனக் கூறியுள்ளார்.