
'பாசிச எதிர்ப்பு கூட்டமைப்பு' என்ற பெயரில் ஈரோட்டைச் சேர்ந்த கன.குறிஞ்சி என்பவர் தலைமையில் உள்ள அமைப்பின் சார்பாக தமிழர், தமிழக விரோத பா.ஜ.க.வை தமிழகத்தை விட்டு விரட்டுவோம் என தொடர் கோஷமிட்டு ஈரோட்டில் இன்று ஆர்பாட்டம் நடத்தினார்கள்.
இந்தப் போராட்டத்தின் போது, நீட் தேர்வு விவகாரத்தில் தமிழ்நாட்டுக்கு துரோகம், இந்தி- சமஸ்கிருத திணிப்பு, தமிழகத்தில் மதவெறியைப் பரப்பி கலவரக்காடாக்க சதி, புதிய கல்விக் கொள்கை மூலம் சமூகநீதி ஒழிப்பு, குலக்கல்வி முறைக்கு வாய்ப்பு, தமிழகத்தின் காவிரி நதிநீர் உரிமையில் தொடர் துரோகங்கள், தமிழக ஊடகங்களையும் ஊடகவியலாளர்களையும் மிரட்டும் அராஜகம், ஸ்டெர்லைட்- சேலம் எட்டு வழிச் சாலை போன்ற நாசகர திட்டங்களுக்கு ஆதரவு, தமிழக வளங்களை கார்ப்பரேட்டுகளுக்கு தாரைவார்க்க துணை, தமிழகத்திற்கு உரிய நிதி மறுப்பு என பாசிச எதிர்ப்பு கூட்டமைப்பினர் கோஷமிட்டனர்.
இன்று அவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கன.குறிஞ்சி தலைமை வகித்தார், தி.மு.க, ம.தி.மு.க, திராவிடர் கழகம் மற்றும் தமிழ் அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் கலந்துகொண்டனர்.