Skip to main content

"மாவீரனுடைய அந்த புன்சிரிப்பு... அந்தக் கண்கள் நம்முடன் பேசும்" - காடுவெட்டி குரு சிலை குறித்து நெகிழ்ந்த ராமதாஸ்

Published on 17/09/2018 | Edited on 17/09/2018
guru sivakumar

 

pmk guru



'மாவீரன் குரு நான் பெற்றெடுக்காத பிள்ளை' என்றார் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ். 'குரு இன்னும் நம்முடனேயே இருக்கிறார்' என்று சொன்னதோடு அல்லாமல், பாண்டிச்சேரியில் நடந்த குருவின் திருவுருப்பட திறப்பு விழாவில் திண்டிவனம் சரஸ்வதி பொறியியல் கல்லூரியில் குருவுக்கு வெண்கல சிலை வைக்கவேண்டும், கல்லூரியில் குரு சட்டக் கல்லூரி வளாகம் அமைக்க வேண்டும். அதோடு காடுவெட்டியில் மணிமண்டபம் கட்டப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார் அன்புமணி ராமதாஸ்.
 

16.09.2018 ஞாயிற்றுக்கிழமை காலை திண்டிவனம் கோணேரிகுப்பத்தில் உள்ள சரஸ்வதி பொறியியல் கல்லூரில் ஐந்தரை அடி உயர குருவின் வெண்கல சிலை திறக்கப்பட்டது. மாவீரன் மறையவில்லை, நடந்து வருகிறார் என்று அக்கட்சியினர் பிரமிப்புடன் பார்த்தனர். விழாவில் சிலையை வடிவமைத்த சிற்பி சிவா என்கிற சிவக்குமார் சுப்பிரமணியை பாராட்டினார் ராமதாஸ்.
 

''என்னை சிற்பக்கலை மேற்படிப்பு நீங்கள்தானே படிக்க வைத்தீர்கள் என்பார் சிற்பி சிவா. இன்று அவருடைய திறமையை உலகம் பறைசாற்றிக்கொண்டிருக்கிறது. பல விருதுகளை உலகளவிலே வாங்கியிருக்கிறார். இன்னும் அவர் பல விருதுகளை சிலை வடித்து வாங்க இருக்கிறார்.

இந்த சிலையை ஒரு மாதத்தில் செய்து முடித்திருக்கிறார். மிக அற்புதமான சிலை. மாவீரனுடைய அந்த புன்சிரிப்பு... அந்த சிலையை எப்போது வேண்டுமானாலும் பாருங்கள் அந்தக் கண்கள் நம்முடன் பேசும். நடக்கிற மாதிரியான சிலை. அதனை மிகவும் சிரமப்பட்டு இரவும் பகலுமாக உழைத்து சிற்பி சிவா செதுக்கியிருக்கிறார்.

அவரை நாம் இந்த நேரத்தில் பாராட்ட வேண்டும். (பலத்த கைத்தட்டல்) உலகத்தில் உள்ள பல நட்சத்திர விடுதிகளில் அவரது கைவண்ணம் மின்னிக்கொண்டிருக்கிறது. இன்னும் பல விருதுகளை அவர் வாங்குவார் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு" என உளமாற வாழ்த்தினார் ராமதாஸ்.


அந்த சிலையை பார்த்தால் மாவீரன் நம்முடன் இல்லை என்று என்னால் நம்ம முடியவில்லை. அவ்வளவு கம்பீரமாக நிற்கிறார் அண்ணன் குரு. அவ்வளவு அருமையாக சிலையை வடிவமைத்த சிற்பி சிவாவுக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார் அன்புமணி. 

 

guru sivakumar


சிற்பி சிவா என்கிற சிவக்குமார் சுப்பிரமணி நக்கீரனிடம்,
 

"குருவின் சிலையை நான் வடிவமைப்பேன் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை. அதே நேரத்தில் அய்யா என்னிடம் தவிர வேறு யாரிடமும் இந்த பொறுப்பை ஒப்படைக்க மாட்டார் என்ற நம்பிக்கையுடனும் இருந்தேன்.

அதேபோல் பாண்டிச்சேரியில் இரங்கல் கூட்டம் நடந்த இரண்டு நாட்கள் கழித்து எனக்கு அய்யாவிடம் இருந்து அழைப்பு வந்தது. அய்யாவை சந்தித்தபோது, இன்னும் குரு நம்மக்கிட்டயே இருக்கிறார். நம்முடனேயே பயணிக்கிறார் என்பது போல சிலை இருக்க வேண்டும்.

ஏதோ சிலை அமைத்தோம். திறந்தோம் என்று இருக்கக்கூடாது. அந்த சிலைக்கு உயிர் இருக்க வேண்டும் சிவா என்றார். அய்யாவின் பேச்சை கேட்டு இரண்டே நாளில் மூன்று விதமான புகைப்படங்களை கொடுத்தேன். 
 

மூன்று புகைப்படங்களையும் கையில் வைத்துக்கொண்டு அய்யாவும், சின்ன அய்யாவும் இரண்டு மணி நேரம் ஆலோசனை செய்தார்கள். அதில் தேர்வு செய்யப்பட்டதுதான் இந்த சிலை. அந்த புகைப்படத்தை வைத்துக்கொண்டு காடுவெட்டியில் குருவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு பேசிய அய்யா, வன்னியர் அறக்கட்டளையில் குரு நடந்து வருவதுபோல் ஒரு சிலை வைப்பதற்கு நானும், சின்ன அய்யாவும், சிற்பி சிவா ஆகிய மூன்று பேரும் இரண்டு மணி நேரம் ஆலோசனை செய்தோம் என்றார்.
 

12 வருடங்களுக்கு மேல் எனக்கு அய்யாவுடன் தொடர்பு இருக்கிறது. இதுவரை என்னிடம் அவர் ஒரு சின்ன முகசுளிப்புக் கூட காட்டியதில்லை. என்னை சென்னை ஓவியக்கல்லூரியில் சிற்பக்கலை மேற்படிப்பு படிக்க வைத்தவர் அய்யாதான். என் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கிறார். 'சிவா நீ ஜெயிப்ப... சிவா நீ ஜெயிப்ப...' என்று என்னிடம் அடிக்கடி சொல்லுவார்.
 

இதற்கெல்லாம் ஒரு பிரதிபலனாக, அய்யாவிடம் நான் நம்பிக்கையாய் இருப்பதை காட்டுவதற்காக எனது முழு உழைப்பையும் இந்த சிலை மீது காட்டினேன் என்றார் நெகிழ்ச்சியாக.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“டிஎன்பிஎஸ்சி குரூப் 2 நேர்முகத் தேர்வு ரத்து வரவேற்கத்தக்கது” - ராமதாஸ்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
“Cancellation of TNPSC Group 2 Interview is welcome says Ramadoss

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 நேர்முகத் தேர்வு ரத்து வரவேற்கத்தக்கது என்றும் நிலையான தேர்வு அட்டவணை, கூடுதல் சீர்திருத்தம் தேவை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் குரூப் 2 பணிகளுக்கு இனி நேர்முகத்தேர்வுகள் நடத்தப்படாது என்பது உள்ளிட்ட பல்வேறு சீர்திருத்தங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருக்கிறது. தேர்வர்கள் நலன் கருதியும், தேர்வுகளை விரைவுபடுத்தவும் அறிவிக்கப்பட்டுள்ள இச்சீர்திருத்தங்கள் வரவேற்கத்தக்கவை.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தை காலத்திற்கும், தேவைக்கும் ஏற்ற வகையில் மாற்ற வேண்டும்; அதற்காக பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது. பா.ம.க. வலியுறுத்திய சில சீர்திருத்தங்களை தேர்வாணையம்   செயல்படுத்தியுள்ள போதிலும், தேர்வாணையத்தை நவீனப்படுத்துவதற்கு இவை மட்டும் போதுமானதல்ல.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் அனைத்து பணிகளுக்கும் நேர்முகத் தேர்வு கூடாது என்பது தான் பா.ம.க.வின் நிலைப்பாடு. இதை கடந்த ஐந்தாண்டுகளாக பா.ம.க.வின் நிழல் நிதிநிலை அறிக்கை மூலம் வலியுறுத்தி வருகிறோம். ஆள்தேர்வில் நடைபெறும் முறைகேடுகளுக்கு முதன்மைக் காரணம் நேர்முகத் தேர்வுகள் தான். அவை அகற்றப்பட்டால் தான் நேர்மையான முறையில் பணியாளர்களைத் தேர்ந்தெடுக்க முடியும். அப்போது தான் ஏழை, நடுத்தர மக்களுக்கும் வேலை கிடைக்கும்.

மத்திய அரசுப் பணிகளை பொறுத்தவரை குரூப் ஏ, குரூப் பி அரசிதழ் பதிவு பணிகள் தவிர மற்ற அனைத்து பணிகளுக்கும் நேர்காணல் முறை ரத்து செய்யப்பட்டு விட்டது. ஆந்திர மாநிலம் அதை விட அடுத்தக்கட்டத்திற்கு சென்று மாவட்ட துணை ஆட்சியர், காவல்துறை துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட முதல் தொகுதி பணிகளுக்குக் கூட நேர்காணலை ரத்து செய்து விட்டது. ஆந்திராவைப் பொறுத்தவரை அரசு பணிகளுக்கு நேர்காணல் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு விட்டது. ஆந்திரத்தைப் போலவே தமிழ்நாட்டிலும் முதல் தொகுதி பணிகளுக்கும் நேர்முகத் தேர்வை நிரந்தரமாக நீக்க வேண்டும்.

2 ஏ தொகுதியில் இதுவரை இருந்து வந்த நகராட்சி ஆணையர், தலைமைச் செயலக உதவி பிரிவு அதிகாரி ஆகியவை தொகுதி 2 க்கு மாற்றப்பட்டு விட்டன. இவை தவிர 2 ஏ தொகுதியில் உள்ள அனைத்து பணிகளும் சாதாரணமானவை தான். அப்பணிகளுக்காக முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு என இரு தேர்வுகளை நடத்த வேண்டிய தேவையில்லை. எனவே, 2 ஏ தொகுதி பணிகளுக்கு  இனி ஒரே தேர்வை நடத்துவதற்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் முன்வர வேண்டும்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் எதிர்கொள்ளும் மிகக் கடுமையான விமர்சனம் தேர்வு முடிவுகளை குறித்த காலத்தில் வெளியிடுவதில்லை என்பது தான். தொகுதி 1, தொகுதி 2 பணிகளுக்கான தேர்வு நடைமுறைகளை பல நேரங்களில் 30 மாதங்கள் வரை ஆகின்றன. இதனால் தேர்வர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இந்த நிலையை மாற்றி குறித்த நேரத்தில் முடிவுகளை வெளியிட வேண்டும்.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடிமைப்பணி அதிகாரிகளை தேர்தெடுப்பதற்கான போட்டித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. லட்சக்கணக்கான மாணவர்கள் பங்கேற்கும் அத்தேர்வுகளின் முடிவுகள் அறிவிக்கை வெளியான நாளில் இருந்து ஓராண்டுக்குள் வெளியிடப்படுகின்றன. அடுத்தத் தேர்வுக்கு தேர்வர்கள் தயாராவதற்காக இத்தகைய ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குடிமைப்பணி தேர்வுக்கான முடிவுகள் ஒரு முறை கூட தாமதமாக வெளியிடப்பட்டதில்லை. மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தைப் பின்பற்றி ஒவ்வொரு தொகுதி பணிக்கும் எந்த மாதத்தில் அறிவிக்கை வெளியிடப்படும்? எந்த மாதத்தில் தேர்வு நடைபெறும்? எந்த மாதத்தில் முடிவுகள் வெளியாகும்? என்ற விவரங்கள் அடங்கிய நிலையான தேர்வு அட்டவணையை  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமும்  வெளியிட வேண்டும்.

முதல் தொகுதி பணிகளுக்கான அறிவிக்கை பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டு, ஏப்ரல் மாதத்தில் முதல்நிலைத் தேர்வு, ஜூலை மாதத்தில் முதன்மைத் தேர்வு நடத்தப்பட்டு, திசம்பர் மாதத்தில் இறுதி முடிவுகள் வெளியிடப்பட வேண்டும். இரண்டாம் தொகுதி பணிகளுக்கான அறிவிக்கை மார்ச் மாதம் வெளியிடப்பட்டு, மே மாதத்தில் முதல்நிலைத் தேர்வு, ஆகஸ்ட் மாதத்தில் முதன்மைத் தேர்வு நடத்தப்பட வேண்டும். ஒவ்வொரு ஆண்டும்  இரண்டு முறை தொகுதி 4 பணிகளுக்கான அறிவிக்கைகள் வெளியிடப்பட்டு, மார்ச், செப்டம்பர் மாதங்களில் தேர்வுகளை நடத்தி முறையே மே, நவம்பர் மாதங்களில் முடிவுகளை வெளியிட வேண்டும்.

பொறியியல் பணிகள், வேளாண் பணிகள், புள்ளியியல் பணிகள் உள்ளிட்ட முதல் 4 தொகுதிகளுக்குள் வராத பணிகளுக்கான அறிவிக்கைகள் ஆகஸ்ட் மாதத்தில் வெளியிடப்பட்டு, அடுத்த 5 மாதங்களில் தேர்வுகள் நடத்தி, முடிவுகளை வெளியிட வேண்டும். இதற்கேற்ற வகையில் தேர்வு நடைமுறையில் சீர்திருத்தங்களைச் செய்ய தமிழ்நாடு அரசுப் பணியாளர்  தேர்வாணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

குடியைக் கெடுக்கும் குடிக்கு முடிவு கட்டப்படுவது எப்போது? - ராமதாஸ்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Ramdoss has questioned when liquor will be abolished in Tamil Nadu

குடிப்பழக்கம் உள்ள பெற்றோரின் பிள்ளைகளுக்கு சுயமரியாதை குறைவு என ஆய்வில் வெளியாகியுள்ளது; குடியைக் கெடுக்கும் குடிக்கு முடிவு கட்டப்படுவது எப்போது? என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான  பெற்றோர்களின் பிள்ளைகள் சுயமரியாதைக் குறைவு, தாழ்வு மனப்பான்மை உள்ளிட்ட மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்படுகின்றனர் என்று சென்னை மருத்துவக் கல்லூரியின் சமூக மருத்துவ நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. குடிக்கும் பெற்றோரின் பிள்ளைகள் இளம் வயதிலேயே மதுப்பழக்கம் மற்றும் புகையிலைப் பழக்கத்திற்கு அடிமையாகுதல், தீய செயல்களில் அடிக்கடி ஈடுபடுதல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கும் ஆளாவதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.  இந்த ஆய்வு முடிவுகள் சிறிதும் அதிர்ச்சியோ, ஆச்சரியமோ அளிக்கவில்லை. மாறாக, மதுப்பழக்கத்தின் தீமைகள் குறித்து பல பத்தாண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி கூறி வரும் குற்றச்சாட்டுகளை உறுதி செய்திருக்கிறது.

அனைத்து சமூகக் கேடுகளுக்கும் ஆணிவேர் மதுப்பழக்கம் தான்.  தினமும் குடித்து விட்டு வந்து வீட்டில் உள்ளவர்களை கொடுமைப் படுத்தும் தந்தை உள்ள வீட்டில், அவர்களின் பிள்ளைகளால் நிம்மதியாக படிக்க முடியாது; சமூகத்தில் தலை நிமிர்ந்து நடக்க முடியாது என்பது நடைமுறையில் நாம் கண்டு வரும் உண்மை ஆகும். தந்தை குடிப்பதைப் பார்க்கும் பிள்ளைகளும் மது எளிதாக கிடைக்கும் போது அந்தப் பழக்கத்திற்கு அடிமையாவது வழக்கம் தான். 

இந்த உண்மைகளைத் தான்  சென்னை மருத்துவக் கல்லூரியின் ஆய்வு உறுதி செய்திருக்கிறது. அதனால் தான் குடி குடியைக் கெடுக்கும், குடிப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும் என்ற எச்சரிக்கை வாசகங்கள் மதுப்புட்டிகள் மீது எழுதப்பட்டன. மதுவே முற்றிலுமாக ஒழிக்கப்பட  வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், தமிழ்நாட்டை மாறி மாறி ஆட்சி செய்து வரும் திமுகவும், அதிமுகவும் மதுவின் தீமைகளை கருத்தில் கொள்ளாமல் சட்டப்படியாக அரசுக்கு கிடைக்கும் வருமானத்தையும், சட்டவிரோதமாக தங்களுக்கு கிடைக்கும் லாபத்தையும் மட்டுமே கருத்தில் கொண்டு  தமிழகத்தின் அனைத்து வீதிகளிலும் மதுவை வெள்ளம் போல ஓட விடுகின்றன.

அதுமட்டுமின்றி, மதுப்புட்டிகளில் மதுவின் தீமைகளை குறிக்கும் வகையிலான, 'குடி, குடியை கெடுக்கும்; குடிப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும்; மது நாட்டுக்கு, வீட்டுக்கு, உயிருக்குக் கேடு' என்ற, விழிப்புணர்வு வாசகங்களை நீக்கி விட்டு, 'மது அருந்துதல் உடல் நலத்திற்கு கேடு; பாதுகாப்பாக இருப்பீர். மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டாதீர்' என்ற மென்மையான வாசகங்களை அச்சிட்டது தான் திமுக, அதிமுக அரசின் சாதனைகள் ஆகும்.

எந்த வகையில் பார்த்தாலும் மது மிகப்பெரிய சமூகக் கேடு என்பதில் மாற்றமில்லை.  மது இல்லாத தமிழகத்தில் குடும்பங்கள் மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள்; குழந்தைகள் சுயமரியாதையுடன் நல்லவர்களாக வளர்வார்கள். எனவே, குடியைக் கெடுக்கும் குடிப்பழக்கத்திற்கு முடிவு கட்டும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள மதுக்கடைகளை மூடிவிட்டு முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.