Skip to main content

"சிறப்பாகப் பணியாற்றுவேன்!" - விழுப்புரம் புதிய டி.ஐ,ஜி. பேட்டி!

Published on 22/02/2021 | Edited on 22/02/2021

 

M. Pandian takes charge as the 29th DIG in Villupuram

 

கடந்த சில மாதங்களுக்கு முன்பு விழுப்புரம் சரக போலீஸ் டிஐஜியாக எழிலரசன் பணியமர்த்தப்பட்டார். சில மாதங்களுக்குள் திடீரென்று அவரை சென்னை பெருநகர வடக்குப் போக்குவரத்துக் கழக இணை ஆணையராக மாற்றம் செய்து அறிவிப்பு வெளியானது. அவருக்குப் பதில், அங்கு அதே பணியில் இருந்த எம்.பாண்டியன் விழுப்புரம் சரக 29வது டிஐஜி ஆக அறிவிக்கப்பட்டு, அவர் நேற்று பொறுப்பு ஏற்றுக் கொண்டார்.

 

அதன் பின்னர், அவர் பத்திரிகையாளர்களிடம் பேசும்போது, “விழுப்புரம் காவல் சரகத்திற்கு உட்பட்ட விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படாத வண்ணம் தடுப்பதற்கு முழுக் கவனம் செலுத்தப்படும். மேலும் சட்டத்தை மீறுபவர்கள் யாராக இருந்தாலும் பாரபட்சம் இல்லாமல் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல் குற்றச் சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வழியிலும் குற்றங்களைக் குறைக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். ரவுடியிச செயல்களில் ஈடுபடுவோரை கண்டறிந்து அவர்களை ஒடுக்குவதற்கு கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

 

மேலும் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், விபத்துக்களைத் தடுப்பது குறித்தும் தனிக் கவனம் செலுத்தப்படும். விழுப்புரம் சரகத்தில் உள்ள மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்துகள் அடிக்கடி நடைபெறுகின்றன. அப்படிப்பட்ட இடங்களைக் கண்டறிந்து விபத்துகள் நடைபெறாமல் இருக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படும். பொதுமக்கள் எப்போது வேண்டுமானாலும் என்னிடம் குறைகளைத் தெரிவித்து அதற்குத் தீர்வு கண்டுகொள்ளலாம். மேலும், மக்களின் எண்ணங்களுக்கு ஏற்றவாறு சிறப்பாகப் பணியாற்றுவேன்” என்று கூறினார். புதிதாகப் பொறுப்பேற்றுள்ள டிஐ,ஜி பாண்டியன் அரக்கோணத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்.

 

அவர், காவல் பணியில் சேர்ந்து கடலூர் மாவட்டம் பண்ருட்டி டி.எஸ்.பி. ஆக பணி செய்துள்ளார். அதன்பின்னர் பதவி உயர்வு பெற்று திருவள்ளூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகப் பணிபுரிந்துள்ளார். சென்னை அண்ணா நகர், கீழ்ப்பாக்கம் ஆகிய இடங்களில் துணை ஆணையராகவும் அதன்பிறகு சென்னை பெருநகர படகுப் போக்குவரத்து இணை ஆணையராகவும் பணி செய்துள்ளார். தற்போது விழுப்புரம் சரக டிஐஜி ஆக பொறுப்பேற்றுள்ள பாண்டியனுக்கு விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்ட போலீஸ் அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

 

 

 

சார்ந்த செய்திகள்