Skip to main content

கல்லூரி மாணவனை கடத்திச்சென்று கரம் பிடித்த காதல் மனைவி  போக்சோவில் கைது 

Published on 11/10/2022 | Edited on 11/10/2022

 


 

LOVE MARRIAGE COLLEGE STUDENTS IN SALEM POLICE POCSO ACT


 
சேலம் அருகே, ஏழு மாதங்களுக்கு முன்பு காணாமல் போன கல்லூரி மாணவன், காதலியை திருமணம் செய்து கொண்டு வசித்து வருவது தெரிய வந்தது. மேலும், அவரை கடத்திச்சென்று பாலியல் உறவு கொண்டதாக காதல் மனைவியை போக்சோ சட்டத்தில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

 

சேலம் மாவட்டம், ஓமலூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம்., முதலாம் ஆண்டு படித்து வந்தவர் ரமேஷ்குமார் (வயது 18, பெயர் மாற்றப்பட்டுள்ளது). கடந்த ஏப்ரல் 6- ஆம் தேதி, இருசக்கர வாகனத்தில் கல்லூரிக்குச் சென்றார். அதன்பின் அவர் வீடு திரும்பவில்லை.  

 

அதிர்ச்சி அடைந்த பெற்றோர், மகனைத் தேடி கல்லூரி மற்றும் அவனுக்கு நெருக்கமான நண்பர்கள் வீடுகளில் விசாரித்தனர். ஆனாலும் ரமேஷ்குமார் சென்ற இடம் குறித்த தகவல் ஏதும் கிடைக்கவில்லை.  

 

இதையடுத்து பெற்றோர், நீதிமன்றத்தில் ஆள்கொணர்வு மனுத்தாக்கல் செய்தனர். ரமேஷ்குமாருடன் நெங்கிய நட்பில் இருந்தவர்கள் யார் யார்? அவருக்கு விரோதிகள் யார்?, அவர் யாரையாவது காதலித்து வந்தாரா?  என்பது குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வந்தனர்.  

 

இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகையில் உள்ள பாரதி நகரில் ரமேஷ்குமார், ஒரு 
பெண்ணுடன் தனியாக வீடு எடுத்து வசித்து வருவதை காவல்துறையினர் கண்டுபிடித்தனர். அவருடன் இருந்த இளம்பெண் குறித்து விசாரித்தனர். அந்தப் பெண்ணின் பெயர் வேதிகா (வயது 21, பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பதும், ரமேஷ்குமாருடன் ஒரே கல்லூரியில் படித்து வந்தபோது, அவரை காதலித்ததாகவும், இருவரும் பெற்றோருக்குத் தெரியாமல் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருவதும் தெரிய வந்தது.  

 

இதையடுத்து அவர்கள் இருவரையும் காவல்நிலையத்திற்கு பிடித்து வந்து தொடர்ந்து விசாரித்தனர். ரமேஷ்குமாரை, வேதிகாதான் முதலில் துரத்தி துரத்தி காதலித்து வந்துள்ளார். ஒருகட்டத்தில் வேதிகாவின் வலையில் ரமேஷ்குமாரும் வீழ்ந்தார். இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என முடிவெடுத்தபோது, ரமேஷ்குமாருக்கு 18 வயது பூர்த்தி அடைவதற்கு மூன்று மாதங்கள் இருப்பது தெரிய வந்தது. ஆனாலும் அதுவரை காத்திருக்க முடியாத அவர்கள், இரு தரப்பு பெற்றோருக்கும் தெரியாமல் கல்லூரியில் இருந்து ஓட்டம் பிடித்தனர்.  

 

பின்னர் நண்பர்கள் உதவியுடன் பேரிகையில் தனியாக வீடு எடுத்து, தம்பதி சகிதமாக வாழ்ந்து வந்துள்ளனர். ரமேஷ்குமார் காணாமல் போனபோது அவர் பதினெட்டு வயது பூர்த்தி அடையாத சிறுவனாக இருந்துள்ளார். மேலும், தற்போது வேதிகா மூன்று மாத கர்ப்பிணியாக உள்ளார்.

 

இதையடுத்து சிறுவனை கடத்திச்சென்றதோடு, அவருடன் பாலியல் உறவு வைத்துக் கொண்டதால் வேதிகா மீது போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, கைது செய்தனர். 

 

சார்ந்த செய்திகள்