உலக அளவில் சாதித்த குள்ளமான தடகள வீரருக்கு தமிழக அரசு பாராட்டும் பரிசும் கிடைக்குமா? ஆட்சியரிடம் மனு

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு உயரம் குறைவான இளைஞர் ஒருவர் கழுத்தில் தான் வாங்கிய பதக்கத்துடனும் கையில் ஒரு மனுவுடனும் வந்தார். மாவட்ட ஆட்சியரிடம் தான் கொண்டு வந்த மனுவை கொடுத்த இளைஞர் பின்னர் நம்மிடம் பேசும் போது..
புதுக்கோட்டை மாவட்டத்தின் கடைக்கோடி கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் அழகப்பன், நல்லம்மான் தம்பதிகளின் மகன் செல்வராஜ் ஆகிய நான். பிறப்பிலேயே உயரம் குறைவாக பிறந்தேன். தொடக்கத்தில் எனக்கு அது ஒரு குறையாக இருந்தாலும் நாளடைவில் அந்த குறையை வைத்தே சாதிக்க நினைத்தேன். அதனால் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் தடகளப் பயிற்சியாளர் சுந்தரிடம் பயிற்சி பெற்றேன். பல முறை தேசிய அளவிலான உயரம் குறைந்தவர்களுக்காண தடகளப் போட்டிகளில் தங்கம் வாங்கிய நான் கடந்த 3 ந் தேதி முதல் 13 ந் தேதி வரை கனடாவில் நடந்த உலக அளவிலான உயரம் குறைந்தவர்களுக்காண தடகளப் போட்டியில் தங்கம் வென்று இந்தியாவுக்கும் தமிழகத்திற்கும் என் பயிற்றுநருக்கும் பெருமை வாங்கி கொடுத்தேன்.
இந்த நிலையில் ஏழ்மையில் வாடும் என் குடும்பத்திற்கு தமிழக அரசு எனக்கு பாராட்டும் ஊக்கத் தொகையும் வழங்கினால் நானும் மேலும் சாதிக்க ஊக்கமாக இருக்கும். அதற்காககத் தான் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளேன் என்றார் சாதனையாளர் செல்வராஜ்.
-இரா. பகத்சிங்