
ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் மலை உச்சியில் சுற்றுலாப் பயணிகள் குழு ஒன்று பைசரன் புல்வெளிகளில் நேற்று ((22.04.2025) குதிரை சவாரி செய்து கொண்டிருந்தனர். அப்போது ராணுவ சீருடை அணிந்து வந்த பயங்கரவாத கும்பல், சுற்றுலாப் பயணிகள் மீது கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் வெளிநாட்டைச் சேர்ந்த இருவர் உள்ளிட்ட 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர்.மேலும் பலர் பேர் படுகாயமடைந்தனர்.
இந்த தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். இதையடுத்து, பஹல்காம் பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு தீவிர கண்காணிப்பில் இந்திய ராணுவப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். 'காஷ்மீரில் தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்; பயங்கரவாத செயலில் ஈடுபட்டவர்கள் ஒருபோதும் தப்பிவிட முடியாது' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் காஷ்மீரில் நடந்த பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் காரணமாக, தனது 2 நாள் சவுதி அரேபியா பயணத்தை முன்னதாக முடித்துக்கொண்டு பிரதமர் நரேந்திர மோடி டெல்லி இன்று (23.04.2025) வந்தடைந்தார். முன்னதாக சவுதி பட்டத்து இளவரசரைப் பிரதமர் மோடி சந்தித்துப் பேச இருந்தார். அதன் பின்னர் அவர் அளிக்கும் விருந்தில் கலந்துகொள்வதுடன் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் பிரதமர் மோடி திட்டமிட்டிருந்தார். இருப்பினும் காஷ்மீர் தாக்குதல் சம்பவம் காரணமாகத் தனது பயணத்தைப் பாதியில் முடித்துக்கொண்டு நாடு திரும்பியுள்ளார். அதே சமயம் பாதுகாப்புப் படை அதிகாரிகளுடன் மத்திய அமைச்சர் அமித்ஷா ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.