
தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களை திறக்கக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கரோனா தொற்று காரணமாக, கடந்த மார்ச் மாதத்திலிருந்து நீதிமன்றங்களில் நேரடியாக வழக்கு விசாரணைகள் ஏதும் நடத்தப்படவில்லை. வழக்குகள் அனைத்தும் வீடியோ கான்பரன்சிங் மூலம் மட்டுமே விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதனால், பெரும்பாலான வழக்கறிஞர்கள் தங்களுடைய வாழ்வாதரத்தை இழந்திருப்பதாகக்கூறி, சென்னை உயர் நீதிமன்றத்தின் முன்பாக ஜனநாயக வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில், அதன் மாநில செயலாளர் பாரதியின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
வரும் ஆகஸ்ட் மாதம் முதல், தமிழகம் முழுவதும் உள்ள நீதிமன்றங்களைத் திறக்க வேண்டும், வழக்கறிஞர்களுக்கு நிவாரணமாக மாதம் 15,000 ரூபாய் வழங்க வேண்டும். வங்கிகளில் 3 லட்ச ரூபாய் வட்டியில்லா கடன் வழங்க வேண்டும், வழக்கறிஞர் பரமகுரு படுகொலையில் தொடர்புடையவர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தின்போது வலியுறுத்தப்பட்டது.