Skip to main content

அத்துமீறிய கேரள இளைஞர்கள்; பதறிய ஊழியர்கள் - நள்ளிரவில் பயங்கரம் 

Published on 16/12/2023 | Edited on 16/12/2023
Kerala youth threatened the bar staff and bought alcohol in Coimbatore

கோவை மாவட்டம், கேரளா செல்லும் வழியில் அமைந்துள்ளது எட்டிமடை கிராமம். இந்தப் பகுதியில் உள்ள சாலையில், சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு காடுகள் சூழ்ந்திருக்கும். இந்தக் காட்டுப்பகுதியில் ஒரு டாஸ்மாக் கடை உள்ளது. இந்த டாஸ்மாக் கடைக்கு அருகிலேயே பார் ஒன்றும் உள்ளது. காட்டுப்பகுதியில் இருக்கும் டாஸ்மாக் பார் என்றாலும், பகல் நேரத்தில் இந்தச் சாலை வழியாக செல்லும் பயணிகளும், மது பிரியர்களும் ஏராளமாக வந்து செல்வார்கள். இதன் காரணமாக இந்த பாரில் எப்போதும் கூட்டம் இருந்துகொண்டே இருக்கும். இரவு பத்து மணிக்கு சாத்தப்படும் இந்தப் பாரில், வேலை செய்யும் பணியாளர்களுக்கு அதன் அருகிலேயே தங்கிக்கொள்ள அறை அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்தப் பாரில் வேலை செய்த சில ஊழியர்கள் வேலை முடிந்த பிறகு தங்களின் அறைக்குச் சென்று தூங்கியுள்ளனர். அப்போது அதிகாலை சுமார் 3 மணியளவில் அங்கு வந்த மர்ம நபர்கள் சிலர், பாரின் கதவினை தட்டியுள்ளனர். அப்போது பாருக்குள் யாரும் இல்லாத காரணத்தால் அதன் கதவுகள் திறக்கப்படவில்லை. அதன் பின்னர் பாருக்கு பின் புறம் சென்று, அங்கிருந்த அறையின் கதவினை தட்டியுள்ளனர். ஆனால், ஊழியர்கள் அனைவரும் நல்ல அசதியில் உறங்கியதால் அந்தக் கதவினை யாரும் திறக்கவில்லை. இதனால், ஆத்திரமடைந்த மர்ம கும்பல், தொடர்ந்து அந்த அறையின் கதவினை வேகமாக தட்டியுள்ளனர்.

பின்னர், ஒரு வழியாக அந்த அறையின் ஜன்னல் ஒன்று திறந்துள்ளது. அப்போது அறையின் உள்ளே இருந்தபடி ஊழியர் ஒருவர், என்ன வேணும் உங்களுக்கு?.. எனக் கேள்வி எழுப்பியுள்ளார். உடனே வெளியே நின்ற 3 பேர் அடங்கிய மர்ம கும்பல், தங்களுக்கு மதுபானம் வேண்டும் என்று கேட்டுள்ளனர். இதனைக் கேட்ட பார் ஊழியர், ரூம்ல எதுவும் இல்லைங்க... எனவும், காலையில் டாஸ்மாக் கடை திறந்தபிறகு மட்டும்தான் மதுபானம் கிடைக்கும் என்றும் கூறியிருக்கிறார். ஆனால், அந்த ஊழியரின் பேச்சை கண்டுகொள்ளாத மர்ம நபர்கள் அங்கேயே நின்றுகொண்டு ஏய்.. மதுபாட்டில் இல்லாமல் இருக்காது.. உடனே எடுத்து வா... என மிரட்டும் தொணியில் கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பார் ஊழியர், கதவை வேகமாக திறந்து, பாரில் மதுவகைகள் எதுவும் இல்லை எனச் சத்தமாக கூறியுள்ளார்.

இந்த வார்த்தையைக் கேட்டதும், கோபத்தின் உச்சத்திற்கே சென்ற மர்ம நபர் ஒருவர், யாரும் எதிர்பாராத நேரத்தில் சட்டென்று தன் இடுப்பில் இருந்து துப்பாக்கியை எடுத்து, டேய்... ஒழுங்கா சரக்கு பாட்டில் எடுத்து வா.. இல்ல போட்டுத்தள்ளிடுவோம்.. என மிரட்டியுள்ளார். நடு ராத்திரியில் துப்பாக்கியைக் காட்டியதும் நடுங்கிப் போன ஊழியர், உடனே ஒடிச்சென்று, பாரைத் திறந்து அங்கிருந்த மதுபாட்டில்கள் சிலவற்றை எடுத்துக்கொடுத்துள்ளார். அதுவரை ஆத்திரத்தோடு வெளியே நின்ற மூன்று பேரும், மதுபாட்டில்கள் கிடைத்ததும் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். அதுவரை செய்வதறியாது தவித்து நின்ற பார் ஊழியர்கள், அவர்கள் சென்றதும், உடனே இது குறித்து அவர்களின் முதலாளிக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன் பின்னர், சம்பவ இடத்திற்கு சென்ற பார் உரிமையாளர், ஊழியர்களையும் அழைத்துச் சென்று க.க.சாவடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். 

புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், இது குறித்து அங்கிருந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது, நள்ளிரவு நேரத்தில் துப்பாக்கியை காட்டி, மது வாங்கிச்சென்ற மூன்று பேரின் அங்க அடையாளங்களை வைத்து யார் என்ற கோணத்தில் தீவிரமாக விசாரித்துள்ளனர். இந்த விசாரணையில், துப்பாக்கியைக் காட்டிய மர்ம நபர்கள் மூவரும், கேரள மாநிலம் கொழிஞ்சாம் பாறையைச் சேர்ந்த  விபின், சதீஷ் மற்றும் அர்ஜுன் என்பதை உறுதிசெய்துள்ளனர். 

இதனையடுத்து மூவரையும் கைது செய்த போலீசார், அவர்களுக்கு துப்பாக்கி எப்படி கிடைத்தது என்று விசாரித்த போது, அவர்கள் பயன்படுத்திய துப்பாக்கி, பறவைகளை விரட்ட பயன்படுத்தும் ஏர் கன் வகையைச் சேர்ந்தது என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். நள்ளிரவில் டாஸ்மாக் பார் ஊழியர்களிடம் துப்பாக்கியைக் காட்டி, மது வாங்கிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சார்ந்த செய்திகள்

Next Story

ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்; ஆவணங்கள் சிபிசிஐடியிடம் ஒப்படைப்பு! 

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ.4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்கு பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று முன்தினம் (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தமமும் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரையும் அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு காவல் துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது. 

Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

சென்னை தியாகராயர் நகரில் நயினார் நாகேந்திரன் இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “இந்த விவகாரத்தில் முழுக்க முழுக்க என்னை டார்கெட் செய்கின்றனர். இது ஒரு அரசியல் சூழ்ச்சி ஆகும். ரூ.4 கோடியை எங்கேயோ பிடித்துவிட்டு என் பெயரையும் சேர்த்து பயன்படுத்துகின்றனர். தமிழகத்தில் சுமார் 200 கோடிக்கும் மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது குறித்து விசாரிக்கின்றனர். கைப்பற்றப்பட்ட இந்தப் பணத்திற்கும் எனக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை. தாம்பரம் காவல் நிலையத்தில் மே 2 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக உள்ளேன்” எனத் தெரிவித்திருந்தார். இத்தகைய சூழலில் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக போலீஸ் டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தார். 

Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

இந்நிலையில் தாம்பரம் போலீசார் இந்த வழக்கு தொடர்பான கோப்புகளை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு கொண்டு சென்று ஒப்படைத்தனர். அதாவது பணம் எடுத்துச் சென்ற சூட்கேஸ்கள், 7 பைகள், 3 செல்போன்கள், 15 பேரிடம் பெற வாக்குமூலம் தகவல் அடங்கிய ஆவணங்கள், நயினார் ஹோட்டல் அருகே இருந்த சிசிடிவி காட்சிகள், ரயில் டிக்கெட் பெற நயினார் கையொப்பமிட்ட அவசர கோட்டாவிற்கான படிவம் ஆகியவற்றை தாம்பரம் காவல் நிலைய ஆய்வாளர் பாலமுரளி தலைமையிலான போலீசார் இந்த ஆவணங்களை சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைத்தனர். விரைவில்  சிபிசிஐடி போலீசார் விசாரணையை தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

முன்னாள் பிரதமரின் பேரன் மீது பாலியல் புகார்!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
complaint against the grandson of the former prime minister

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இந்தத் தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், தேவகவுடாவின் ஜனதா தளம் (எஸ்) கட்சி போட்டியிடுகிறது. கர்நாடகாவில் ஆளும் கட்சியான காங்கிரஸ் இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. இந்நிலையில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. தன்னிடம் உதவி கேட்டு வந்த ஏராளமான பெண்களை பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்டதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் இருப்பது போன்ற ஆபாச காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பிரஜ்வல் ரேவண்ணா மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் மாநில மகளிர் ஆணையம் கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது.

இதனையடுத்து இந்தப் புகார் குறித்து சிறப்பு புலானாய்வுக் குழு அமைத்து விசாரணை தொடங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதே சமயம் புகார் குறித்த நெருக்கடி அதிகரிப்பால் பிரஜ்வல் ரேவண்ணா கர்நாடகாவில் இருந்து ஜெர்மனிக்கு தப்பியோடியதாவும் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து கர்நாடக முதல்வர் சித்தராமைய தனது எக்ஸ் சமூக வலைத்தளப்பக்கத்தில், “பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோ வழக்கு தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. ஹாசன் மாவட்டத்தில் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியிருப்பது போன்ற ஆபாச வீடியோ காட்சிகள் பரவி வருகின்றன. இந்நிலையில், எஸ்ஐடி விசாரணை நடத்துமாறு அரசுக்கு மகளிர் ஆணையத் தலைவர் கடிதம் எழுதியிருந்தார். எனவே இந்தக் கோரிக்கையை ஏற்று இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த மக்களவைத் தேர்தலில் ஹாசன் தொகுதியில் பாஜக கூட்டணி வேட்பாளராக பிரஸ்வால் ரேவண்ணா மீண்டும் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.