Skip to main content

வருமான வரித்துறை வழக்கை ரத்து செய்யக்கோரிய கார்த்தி சிதம்பரம், ஸ்ரீநிதி மனுக்கள் தள்ளுபடி!

Published on 12/05/2020 | Edited on 12/05/2020
high court madras



வருமானத்தை மறைத்ததாக, தங்கள் மீது வருமான வரித்துறை தொடர்ந்த வழக்கை ரத்து செய்யக்கோரிய,  காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது மனைவி ஸ்ரீநிதி ஆகியோரின் மனுக்களை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 
 

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனும், காங்கிரஸ் எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது மனைவி ஸ்ரீநிதி ஆகிய இருவரும், பழைய மாமல்லபுரம் சாலையில்  முட்டுக்காட்டில் உள்ள தங்களுக்குச் சொந்தமான சொத்துகளை கடந்த 2015-ஆம் ஆண்டு அக்னி எஸ்டேட்ஸ் பவுன்டேசன் என்ற நிறுவனத்துக்கு விற்பனை செய்துள்ளனர். 
 

இந்த விற்பனை மூலம் பெற்ற 7 கோடியே 73 லட்சம் ரூபாயை வருமான வரி கணக்கில் காட்டாமல் மறைத்ததாக, கார்த்தி சிதம்பரம் மற்றும் ஸ்ரீநிதி ஆகியோர் மீது வருமான வரித்துறை 2018- ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தது.
 

இந்த வழக்கு முதலில் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், கார்த்தி சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனால், சென்னையில் உள்ள எம்.பி. எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு விசாரணை  நிலுவையில் இருந்தது. 

இந்த வழக்கிலிருந்து தங்களை விடுவிக்கக் கோரியும், சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றிய உத்தரவை ரத்து செய்யக் கோரியும் கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது மனைவி ஸ்ரீநிதி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.


இந்த வழக்கு விசாரணை, உயர்நீதிமன்ற நீதிபதி எம்.சுந்தர் முன் நடைபெற்றது. அப்போது, மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடைபெறும் ஒரு வழக்கை மாற்றும்போது, வேறு ஒரு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கு மட்டுமே மாற்ற வேண்டும் என்றும், ஆனால் செசன்ஸ் நீதிமன்றத்திற்கு மாற்றியது சட்ட விதிகளுக்கு எதிரானது எனவும் வாதம் முன்வைக்கப்பட்டது. மேலும், குற்றச்சாட்டு கூறப்படும் 2015- 2016 ஆம் ஆண்டிற்கான வருமான வரி தொடர்பான மதிப்பீடு மற்றும் மறு மதிப்பீடு பணிகள் அனைத்தையும் முடித்த பிறகு வருமானவரித்துறை இந்த வழக்கை பதிவு செய்தது தவறு எனவும், மறு மதிப்பீடு பணிகளை முடித்த பிறகு மீண்டும் வரி செலுத்தியதை  மறு ஆய்வு செய்வது தவறு என்றும் வாதிடப்பட்டது.

 

 


வருமான வரித்துறை தரப்பில், இருவரின் கணக்குகளின் மதிப்பீடு முடிந்தாலும், அதை மறுமதிப்பீடு செய்ய தங்களுக்கு அதிகாரம் உள்ளதாகவும், தொடர்ந்து சிறப்பு நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும், இருவரின் மனுக்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் வாதிடப்பட்டது.

இதையடுத்து ஏற்கனவே வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்திருந்த நீதிபதி எம்.சுந்தர், இன்று அளித்த தீர்ப்பில், இரு மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்