Skip to main content

கள்ளக்குறிச்சி காட்டில் பெண் எலும்புக்கூடு! தீவிர விசாரணையில் காவல்துறை!

Published on 20/07/2020 | Edited on 20/07/2020

 

skeleton of a unknown woman found in kallakurichi forest range

 
கள்ளக்குறிச்சி அடுத்த மலைக்கோட்டாலம் வனத்துறை காட்டில் உள்ள கற்பாறைகளுக்கிடையே ஒரு பெண்ணின் எலும்புக்கூடு புடவையால் மூடப்பட்டிருந்ததை அப்பகுதியில் ஆடு, மாடு மேய்க்க சென்றவர்கள் தற்செயலாக பார்த்து, வனக்காப்பாளர் நெல்சன் மண்டேலாவுக்கு தகவல் கொடுத்துள்ளனர். அவர் உடனடியாக வரஞ்சரம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார். 

 

இதையடுத்து கள்ளக்குறிச்சி டி.எஸ்.பி. (பொறுப்பு) விஜயகுமார், வரஞ்சரம் உதவி ஆய்வாளர் ஜம்புலிங்கம் மற்றும் காவலர்கள் எலும்புக்கூடு கிடந்த அந்த இடத்தை பார்வையிட்டதோடு விழுப்புரம் தடய அறிவியல் துறை இயக்குநர் சண்முகத்தை சம்பவ இடத்திற்கு வரவழைத்து தடயங்களைச் சேகரித்தனர். 

 

வனத்துறை காட்டில் ஒரு பெண் எலும்புக்கூடு கிடந்துள்ளது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவர் அங்கு எப்படிச் சென்றார், அவர் அங்கு தனியாக சென்று தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு அசம்பாவிதங்கள் நிகழ்ந்ததா என்று பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன.

 

இறந்துபோன அந்த பெண்ணின் உடலைக் காட்டில் உள்ள விலங்குகள் கடித்து சேதப்படுத்தியுள்ளன என்று தடய அறிவியல் துறையினர் கண்டுபிடித்துள்ளனர். அந்த பெண்ணின் எலும்பு கூட்டை, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு காவல்துறையினர் அனுப்பி வைத்துள்ளனர். 

 

இதுகுறித்து மலைக்கோட்டாலம் கிராம நிர்வாக அலுவலர் வசந்தன், வரஞ்சரம் காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இறந்துபோன அந்தப் பெண் யார், அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை செய்து நடைபெறுகிறது. 

 

இப்பகுதி வனக்காடு லட்சக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து கிடக்கிறது. இந்த வனப்பகுதி கள்ளக்குறிச்சி - சேலம் – பெரம்பலூர் - கடலூர் ஆகிய மாவட்ட எல்லைகளைத் தொட்டுச் செல்கிறது. இந்த காட்டில் குற்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. மேலும் வெளி மாவட்டங்களில் இருந்து முன்விரோதம் காரணமாக பெண்களைக் கடத்தி வந்து பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துவிட்டுச் செல்லும் சம்பவங்களும் நடந்துள்ளன. அதுமட்டுமல்லாமல் பல மாவட்டங்களிலிருந்து இரவு நேரங்களில் இந்த வனத்தில் உள்ள மான், மயில், காட்டுப்பன்றி ஆகிய விலங்குகளைத் துப்பாக்கியுடன் இங்கு வந்து வேட்டையாடுகின்றனர். அப்படி வந்தவர்கள் வனத்துறையிடம் பிடிபட்டுள்ள சம்பவங்களும் நடந்துள்ளன. மொத்தத்தில் இந்த காடு குற்ற சம்பவங்கள் அரங்கேற்றப்படும் இடமாக உள்ளது. வனத்துறையினர் இந்த காட்டுப் பகுதியில் தீவிர கண்காணிப்பு செய்ய வேண்டும் என்று அப்பகுதியைச் சுற்றியுள்ள கிராம மக்கள் கூறுகின்றனர்
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மதுபோதையில் பேருந்தின் கண்ணாடி உடைப்பு; போலீசார் விசாரணை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Bus window breaking in drunkenness; Police investigation

உளுந்தூர்பேட்டை அருகே மது போதையில் சாலையில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்தின் கண்ணாடியை இரண்டு இளைஞர்கள் உடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஒலையனூர், குணமங்கலம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் உளுந்தூர்பேட்டை சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது வாகனத்தில் யார் முந்தி செல்வது என்பதில் போட்டி ஏற்பட்டுள்ளது. மது போதையில் இருந்த இரண்டு இளைஞர்களும் ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டு சென்றனர். அப்போது அவர்கள் இருவரும் ஒலையனூர் பேருந்து நிலையம் அருகே சென்ற போது, போதை ஆசாமி இருவருக்கும் வாக்கு வாதம் முற்றியுள்ளது. இதனால் இளைஞர்கள் இருவரும் மோதிக்கொண்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த எஸ்சிடிசி பேருந்தை தடுத்து நிறுத்திவிட்டு மோதலில் ஈடுபட்டனர்.

இதனால் ஆத்திரமடைந்த பேருந்து ஓட்டுனர் அந்தப் பேருந்தை அங்கிருந்து எடுத்துச் செல்ல முயன்றுள்ளார். உடனே அந்தப் போதை ஆசாமிகள் இருவரும் அங்கிருந்த கற்களை எடுத்து பேருந்தின் முன் கண்ணாடியை உடைத்தனர். மேலும் அவர்களுக்குள் சரமாரியாக தாக்கி கொண்டனர். இதில் மூன்று இளைஞர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. கோயம்புத்தூரில் இருந்து 40க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றி வந்த அந்தப் பேருந்து கண்ணாடி உடைக்கப்பட்டதால் பேருந்து அங்கேயே நிறுத்தப்பட்டது.

இது தொடர்பாக குணமங்கலம், ஒலையனூர் பகுதிகளில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மது போதையில் சாலையில் சென்ற பேருந்தை வழிமறித்து கண்ணாடியை உடைத்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

'முந்தியது எந்த மாவட்டம்?'- தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்ட தகவல்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Which district was the first?'- the information released by the Chief Electoral Officer

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் இறுதி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மாநில தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு பேசுகையில், ''தமிழகத்தில் ஏழு மணி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. வாக்குப் பெட்டிகளுக்கு சீல் வைத்து வாக்கு எண்ணும் மையத்திற்கு எடுத்துச் செல்லும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 75.67 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மத்திய சென்னையில் 67.37 சதவீதம், தென்சென்னையில் 67.82 சதவீதம், வட சென்னையில் 69.26 சதவீதம், தர்மபுரி மக்களவைத் தொகுதியில் 75.44 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. சில வாக்குச்சாவடிகளில் டோக்கன்கள் கொடுக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மாலை 3 மணிக்கு மேல் ஏராளமான மக்கள் அதிக அளவில் தங்கள் வாக்குகளை செலுத்தியுள்ளனர். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் சட்ட ஒழுங்கு பிரச்சினை இன்றி அமைதியான முறையில் நடந்துள்ளது'' என்றார்.

திருவள்ளூர்-71.87 சதவீதம், வடசென்னை-69.26 சதவீதம், தென் சென்னை-67.82 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-69.79 சதவீதம், காஞ்சிபுரம்-72.99 சதவீதம், அரக்கோணம்-73.92 சதவீதம், வேலூர்-73.04 சதவீதம், கிருஷ்ணகிரி-72.96 சதவீதம், தர்மபுரி-75.44 சதவீதம், திருவண்ணாமலை-73. 35 சதவீதம், ஆரணி-73.77 சதவீதம், விழுப்புரம்-73.49 சதவீதம், சேலம்-73.55 சதவீதம், நாமக்கல்74.29 சதவீதம், ஈரோடு-71.42 சதவீதம், திருப்பூர் -72.02 சதவீதம், நீலகிரி-71.07 சதவீதம், கோவை-71.17 சதவீதம் வாக்குகள் பதிவாகியள்ளது.