Skip to main content

பத்து மாதங்களில் இத்தனை விருதுகளா...?! - உலக திரைப்படவிழாக்களை கலக்கும் தமிழ்ப்படம்

Published on 21/11/2019 | Edited on 25/11/2019

ஞானச்செருக்கு... உலகத்திரைப்பட விழாக்களில் தமிழ்த் திரையுலகின் பெருமையை பேசிக்கொண்டிருக்கும் அடுத்த திரைப்படம். மறைந்த ஓவியர் வீரசந்தானம், முக்கிய பாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்தை தமிழக திரையரங்குகளில் வெளியிடும் பணிகளில் இருக்கிறார் இயக்குனர் தரணி ராசேந்திரன். படம் குறித்தும் படம் சார்ந்த பிற விசயங்கள் குறித்தும் நம்மிடம் அவர் பகிர்ந்தது... 

 

gnana seruku

”12 ஜுலை 2017 இரவு சுமார் 8 மணி அளவில் ’ஞானச்செருக்கு’ பட வேலையாக ஓவியர் வீரசந்தானத்தை சந்தித்தேன். படத்திற்கான பாடல் மெட்டுகளை இசையமைப்பாளர் அனுப்பியிருந்தார். அதை காட்டினேன். படுக்கையில் சாய்ந்தவாறு சிறிது நேரம் கேட்டுக்கொண்டிருந்தார். நிசப்தமான அறையில் மெட்டு மட்டும் இசைத்துக் கொண்டிருந்தது. நான் கிளம்பும் சமயத்தில் வீர சந்தானம், ’படத்தை தனியாக இவ்வளவு தூரம் நகர்த்தி கொண்டு வந்ததே சாதனைதான், படத்தை விரைவாக முழுமையாகப் பார்க்க வேண்டும்’ என்றார். நான் ’ஒரு மூன்று மாதத்தில் முடித்து விடுவேன்’ என்றேன். ’படம் பேசப்பட வேண்டும், பேசப்படுமா?’ என்றார். ’முதலில் படத்தை முடித்து விடுகிறேன்’ என்றேன். சிறு புன்னகையுடன் ’படம் நிச்சயம் பெரிய அளவில் பேசப்படும், அதா நா இருக்கேனே, பார்த்துக் கொள்வோம்’ என்றார்.  

13 ஜுலை இரவு சுமார் 7 மணி அளவில் ஓவியர் வீரசந்தானம் மறைந்துவிட்டார் என்ற செய்தி வந்தது. அந்த அறையில் ஒலித்த மெட்டும் அவர் இறுதியாக சொன்ன வார்த்தைகளும் என் காதில் ஒலித்துக்கொண்டேயிருந்தன. தமிழகத்தில் வீர சந்தானத்தை அறிந்தவர்கள் மிகவும் சொற்பம். அவரின் கலை தேடலும், தமிழ் உணர்வும், களப்போராட்டங்களும், ஈழ விடுதலை முன்னெடுப்புகளும் வெளியில் மறைக்கப்பட்ட ஒன்று. சந்தானத்தின் புறம் இன்று இல்லை. அவரின் நம்பிக்கைகளும், உணர்வுகளும் இன்னும் உயிர்ப்புடன் உலவிக் கொண்டுதானிருக்கின்றன. அவர் மறைவுக்குப் பின்னர் படக்குழு முற்றாகத் தளர்ந்து விட்டது. இயல்பு நிலைக்கு கொண்டு வந்து படத்தை நிறைவு செய்ய ஒன்றரை ஆண்டு தேவைப்பட்டது. அவரின் இறுதி சிந்தனைகளுள் ஒன்றாக ’ஞானச்செருக்கு’ படம் பற்றிய எதிர்பார்ப்பும் இருந்திருக்கும். அவர் ஒரு நல்ல தகுதியான படத்தில்தான் நடித்தார் என வலுவாக நம்பினார்.

 

oviyar veerasandhanam



மக்கள் மத்தியில் படத்தை கொண்டு வர வேண்டும் என திட்டமிட்டிருந்தார். அவர் மறைவுக்குப் பின் எனக்கான சுமை அதிகரித்தது. அவர் அடையாளத்தை சிதைக்காதபடி படத்தை வெற்றிகரமாக வெளிக்கொண்டு வர வேண்டும்.  2019 ஜனவரி படம் நிறைவடைந்தது. முழுக்க வணிகத்தை நோக்கி தமிழ் சினிமா மாறிவிட்ட நிலையில் கலை சினிமாக்கள் மழைக்குப் பின் வரும் வானவில் போல்  தோன்றுகிறது. இங்கு மழையே அரிதாகிவிட்ட நிலையில் வானவில்லை கவனிப்பார் யார்?

’ஞானச்செருக்’கை கவனம் பெற செய்ய வேண்டும். அதன் தகுதியை நிரூபிக்க வேண்டும். வணிகரீதியாக அதை வெளி கொண்டு வரும் முன் உலக சினிமாவாக அதை அடையாளப்படுத்த வேண்டும். ஞானச்செருக்கு தகுதியான படைப்பாக இருக்கும் பச்சத்தில் அதுவே தன்னை நிரூபித்துக் கொள்ளட்டும் என எண்ணினேன். உலகத் திரைப்பட விழாவிற்கு போட்டிக்காக அனுப்பினேன். ஏறக்குறை 8 மாதங்கள் உலகம் முழுக்க பயணித்தது. இதுவரை 7 சர்வதேச விருதுகளையும், 30 மேற்பட்ட சிறந்த படத்திற்கான சர்வதேச அங்கீகாரத்தையும் பெற்றுள்ளது. இன்று ஞானச்செருக்கு மக்கள் மத்தியில் பேச படுகின்ற படம் என்ற அளவில் உயர்ந்துள்ளது. ஞானச்செருக்கு ஒரு கலைஞனின் எழுச்சியை பேசும். வாழ்வதற்கான நம்பிக்கையை அள்ளிக்கொடுக்கும். இந்த வருட இறுதியில் அல்லது அடுத்த வருட துவக்கத்தில் படத்தை தமிழகத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளேன். ஓவியர் வீரசந்தானம் மீண்டும் வருவார். நன்றி”.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிணமாக வெந்த பின்னும் கோரிக்கை உங்களை தீண்டலயே... - மேற்குத் தொடர்ச்சி மலை குறித்து பாடலாசிரியர் வேல்முருகன் கவிதை

Published on 17/09/2018 | Edited on 17/09/2018

சமீபத்தில் விடிவெள்ளி சினிமா வட்டம் ஒருங்கிணைத்த மேற்குத் தொடர்ச்சி மலை படம் குறித்த கலந்துரையாடல் சென்னையில் நிகழ்ந்தது. இந்த நிகழ்வில் சி.பி.எம் மாநில செயற்குழு உறுப்பினர் பெ.சண்முகம், மூத்த தலைவர் மீனாட்சி சுந்தரம், இயக்குனர்கள் கோபி நயினார், லெனின் பாரதி, நடிகர் குரு சோமசுந்தரம், பாடலாசிரியர் வேல்முருகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் உரையாற்றிய பாடலாசிரியர் வேல்முருகன் வாசித்த கவிதை நியாயமற்ற முதலாளிகளின் மனசாட்சியைப் பிடித்து உலுக்குகிறது...    

 

ulubavanukke nilam sondham




எல்லா
ஆலைகளும் சாலைகளும்
ஸ்தம்பிக்கும்
தொழிலாளர்கள் இல்லையென்றால்
எல்லா
நாளைகளும் வேலைகளும்
வஞ்சிக்கும்!

உங்கள்
சேலைகளும் பேண்ட்டுகளும்
கவுலடிக்கும்
வீட்டு வேலைக்கார அம்மாக்கள் இல்லையென்றால்
உங்கள்
கிச்சன்களும் எச்சில் தட்டுகளும்
நசநசக்கும் !

மலக்கிணறு தொட்டிகளில்
நிணம் மிதக்கும் திக்குகளில்
உயிரைப் பிடித்துக் கொண்டு
அடைப்பை எடுத்து விடும்
துப்புறவுத் தொழிலாளர்களுக்கு
சொகுசு வாழ்க்கை இருப்பதுண்டா?
அவர்களின்
அல்லல்களைத் தீர்த்து வைக்க
அரசாங்கங்கள் இறங்கியதுண்டா?

முதுகை வளைத்துக் கொண்டு
மூச்சைப் பிடித்துக் கொண்டு
மூட்டைத் தூக்கும் தொழிலாளிகளின்
குழந்தைகள் தங்கள்
படிப்பை முடிப்பதுண்டா ?
மெத்தப் படித்தவர்கள்தான்
இங்கே
அவர்களை வாழ விட்டதுண்டா?

கண்ணீர்த் துளிகளை
கற்பு நெறிகளை
மனதில் புதைத்து வைத்துவிட்டு
மடியை அவிழ்த்து நிற்கும்
பாலியல் தொழிலாளிகளின் பஞ்சம் தீர்ந்ததுண்டா?
அவர்கள்
சொந்த பந்த உறவுகளுடன்
சேர்ந்து வாழ்வதுண்டா?

கட்டாந் தரைகளை
தரிசு நிலங்களை
பச்சைப்பயிர் முளைக்க
பனிநீரில் வேர் பிடிக்க
வைத்த விவசாய கூலிகளுக்கு
விளைநிலங்கள் சொந்தமுண்டா?
அவர்களின்
அரை வயிறு பசியைக்கூட
நாம் அனுதினமும் ஆற்றியதுண்டா?

உங்கள்
கோட்டைகளும் கோபுரங்களும்
செங்கல் மணல்களாகவே கொட்டிக் கிடந்திருக்கும்
எங்கள் மேஸ்திரிகளும் சித்தாள்களும்
இல்லையென்றால்
எல்லா கட்டடங்களும் கலைகளும்
என்றோ சிதறியிருக்கும்

ரெண்டுபடி நெல்மணியை
அதிகப்படியா கேட்ட எங்கள்
கூலியாட்களை குடிசைக்குள்
தள்ளி கொள்ளி வைத்து எரித்தீர்கள்
பிணமாக வெந்த பின்னும்
உழுபவனுக்கே நிலம் சொந்தம்
என்ற கோரிக்கை உங்களை தீண்டலயே 
எங்கள் உரிமைக்குரலும் இன்னும் ஓயலீயே !

 

 

 

Next Story

புது இயக்குனர்களிடம் இளையராஜா நடந்து கொள்ளும் விதம்... - மேற்குத் தொடர்ச்சி மலை இயக்குனரின் அனுபவம்  

Published on 27/08/2018 | Edited on 27/08/2018

கடந்த வாரம் வெளிவந்திருக்கும் 'மேற்குத் தொடர்ச்சி மலை' திரைப்படம் விமர்சகர்கள் மத்தியிலும் நல்ல சினிமாவைத் தேடிப் பார்ப்பவர்கள் மத்தியிலும் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. படத்தின் முக்கிய பலமாக இளையராஜாவின் இசை அனைவராலும் குறிப்பிடப்படுகிறது. படத்தின் இயக்குனர் லெனின் பாரதிக்கு இது முதல் படம். தயாரிப்பாளராக விஜய் சேதுபதி அமைவதற்கு முன்பாகவே இளையராஜாவிடம் கதையை சொல்லி ஒப்புதல் வாங்கியுள்ளார். சினிமா உலகில் சிலர், 'புதுமுக இயக்குனர்கள் இளையராஜாவுடன் வேலை செய்வது கடினம். அவர் கொடுப்பதுதான் ட்யூன். அதற்கு மேல் ஒரு வார்த்தை கூட பேசமுடியாது, வாயே திறக்கவிடமாட்டார்' என்றெல்லாம் கூறுவார்கள். லெனின் பாரதியிடம் இது குறித்துக் கேட்டோம்...

 

ilayaraja with lenin barathy



"இந்தக் கதைக்கு இளையராஜாதான் பொருத்தமானவர். ஏன்னா கதை பேசற அரசியல், அந்தக் களம் எல்லாமே எங்களுக்கு முன்னாடி பாத்தவர் அவர்தான். அதுக்கும் மேல நாங்க படப்பிடிப்பு நடத்திய பகுதிகளில் நாப்பது, ஐம்பது வருஷங்களுக்கு முன்பே அவர் காலடி பட்டிருந்தது. அதனால் அவரைத் தாண்டி என்னால் யோசிக்க முடியல. 2011-ல் இந்தக் கதை எழுதி முடிச்சதும் அவர்கிட்டதான் முதலில் சொன்னேன். கதையை சொல்லிவிட்டு "இது சின்ன பட்ஜெட்படம்தான். ஆனா நீங்கதான் பண்ணனும். மறுத்துறாதீங்க"னு சொன்னேன். 'அதெல்லாம் ஒண்ணுமில்ல, நீங்க என்ன சொல்றீங்களோ அப்படியே பண்றேன்'னு சொல்லிட்டார்.

 

 


அவருக்கு பட்ஜெட்லாம் விஷயமே இல்லை. கதை பிடிக்கணும், 'இதுல வேலை செய்யலாம்'னு அவருக்குத் தோன்ற வேண்டும். அதுதான் முக்கியம். நீங்க கேட்ட மாதிரிலாம் இல்லை. அவரைப் பொறுத்தவரை புதுமுகம், 100 படம் பண்ண டைரக்டர் என்றெல்லாம் பார்க்க மாட்டார். அங்க அவர் ஒரு இசைக் கலைஞரா மட்டும்தான் இருப்பார். நம்ம என்ன இன்புட் கொடுக்கிறோமோ, நாம உருவாக்கியிருக்கும் படம் என்ன கொடுக்குதோ அதுக்கு இசை அமைப்பார். நம்ம சொல்றதை கேப்பார்" என்றார்.