பழுதுபட்டுள்ள கலைவாணர் வீடு!
தமிழக அரசுக்கு கி.வீரமணி வேண்டுகோள்!
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை:
’’இன்று (29.11.2017) நகைச்சுவையரசர் கலைவாணர் அவர்களின் 109 ஆம் ஆண்டு பிறந்த நாள். கலைவாணர் வாழ்க்கை தொண்டறத்தின் ஊற்றாகும். தனது வாழ்நாள் முழுவதும் வள்ளலாகவே வாழ்ந்தவர்; இன்றும் மக்கள் நெஞ்சங்களில் வாழ்பவர். தந்தை பெரியாரை தனது பகுத்தறிவு ஆசானாக்கிய தன்னிகரற்ற மாமனிதர்.
அவரது பிறந்த நாளில், ஒழுகினசேரியில் உள்ள அவரது இல்லத்தை தமிழக அரசு பழுது பார்த்து சிறப்புடன் வைக்க உதவிடுவது அவசரம், அவசியம்!
இல்லாமை என்பதை நீக்க பலருக்குக் கொடை தந்தவர் நிலை இப்படியா ஆகவேண்டும்? எம்.ஜி.ஆர். அவரது கடன் மற்ற தொல்லைகளையெல்லாம் தீர்த்தார் என்று சொல்வார்கள்; எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா படாடோபமாகக் கொண்டாடும் தமிழக அரசு, குமரி மாவட்ட ஆட்சியர் மூலம் கலைவாணரின் இல்லத்தைப் பழுது நீக்கி பொலிவுடன் அமைத்துத் தர முன்வருதல் முக்கியமல்லவா? உடனே செய்க, தாமதமின்றி என்பதே நம் வேண்டுகோள்! தமிழக அரசு செவி சாய்க்கட்டும்!’’