
108 வைணவ தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என பக்தர்களால் போற்றப்படுவதுமான ஸ்ரீரங்கம் அரங்கநாதர் ஆலயம் மிகவும் பிரசித்திபெற்றதாகும். ரெங்கநாதர் ஆலயத்தில் ஆண்டுதோறும் ஆனிமாதம் ஆனி திருமஞ்சனம் எனப்படும் ஜேஷ்டாபிஷேகம் ஸ்ரீரெங்கநாதருக்கும், அதனைத் தொடர்ந்து தாயாருக்கும் நடத்தப்படும்.
கடந்த 23ஆம் தேதியன்று ரெங்கநாதருக்கு ஆனித் திருமஞ்சனம் மேற்கொள்ளப்பட்டதையடுத்து, மிகவும் விஷேசமான இன்று (02.07.2021) ரெங்கநாயகி தாயாருக்கான ஜேஷ்டாபிஷேகத்தின்போது அம்மா மண்டபம் புனித திருக்காவிரியிலிருந்து தங்கக் குடத்தில் நிரப்பப்பட்ட புனித நீர் கோவில் யானை ஆண்டாள் மீது வைத்து கொண்டுவரப்பட்டது. மேலும் வெள்ளிக்குடங்களில் நிரப்பப்பட்ட திருமஞ்சனம் (புனிதநீர்) கோவில் அர்ச்சகர்களால் சுமந்துவரப்பட்டு பின்னர் கோவிலுக்குள் கொண்டுவரப்பட்டது.
நாதஸ்வரம் மற்றும் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக தாயார் சன்னதிக்கு கொண்டுவரப்பட்டு, அதனைத் தொடர்ந்து தாயாருக்கு சாற்றப்பட்டிருக்கும் அங்கில்களைக் களைந்து திருமஞ்சனம் செய்விக்கப்பட்டு மறுபடியும் அங்கில்கள் சாற்றப்பட்டன. அதனைத் தொடர்ந்து நாளை தாயாருக்குத் திருப்பாவாடை சாற்றும் வைபவம் நடைபெறுகிறது.