
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த பரவளூர் கிராமத்தில் இருந்து முகுந்தநல்லூர் செல்லும் சாலை அருகேயுள்ள பாசன வாய்க்கால் ஓரமாக கருவேலமரம் தோப்பு உள்ளது.
இந்நிலையில் இன்று காலை அப்பகுதியின் வழியாக சென்ற கிராம மக்களுக்கு குழந்தை அழுகுரல் கேட்டுள்ளது. அழுகை சத்தம் வந்த திசையை நோக்கி சென்ற பொதுமக்கள், முட்புதரில் பிறந்த சில மணி நேரமான ஆண் குழந்தை இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
குழந்தையை எறும்பு கடித்து காயம் ஆன நிலையில், பையிலிருந்து பச்சிளம் குழந்தையை கிராமமக்கள் மீட்டு, குழந்தையின் உடலில் இருந்த எறும்பை சுத்தம் செய்து காவல்துறைக்கும், சமூகநலத்துறைக்கும் தகவல் அளித்தனர். அதன்பேரில் 108 ஆம்புலன்ஸ் மூலம் குழந்தையை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு முதலுதவி சிகிச்சைக்கு கொண்டு சென்றனர்.
இதுகுறித்து விருத்தாசலம் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். முதலுதவி சிகிச்சைக்குப் பின் கடலூர் சமூக நலத்துறை அலுவலரிடம் குழந்தை ஒப்படைக்கப்பட்டது.