Skip to main content

கழிவுநீர் கால்வாயில் இளம்பெண் சடலம்... வன்கொடுமை செய்து கொலையா?

Published on 03/01/2020 | Edited on 03/01/2020

வேலூர் கிரீன் சர்க்கிள் அருகே உள்ள கழிவுநீர் கால்வாய் வழியாக பொதுமக்கள் சிலர் ஜனவரி 2ந்தேதி நடந்து சென்றனர். அப்போது கால்வாயில் கவிழ்ந்த நிலையில் இளம்பெண் சடலம் கிடந்தது. இதனைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த மக்கள், காவல்நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். வடக்கு காவல்நிலைய அதிகாரிகள் சம்பவயிடத்துக்கு வந்து சடலத்தை கைப்பற்றி விசாரித்தனர். அந்த உடலை பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

incident


இதுகுறித்து போலீசார் கூறுகையில், இறந்த பெண் வடமாநிலத்தை சேர்ந்தவராக இருக்கலாம். வேலூருக்கு வந்து காணாமல் போன வடமாநில பெண்களின் பட்டியலை வைத்து அடையாளம் காணும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளோம். இறந்த பெண்ணுக்கு சுமார் 30 வயது இருக்கும். அவர் இறந்து 2 நாட்களுக்கு மேலாகியிருக்கலாம் என தெரிவித்தனர். மேலும் அந்த பெண்ணின் சடலம் அரை நிர்வாணத்துடன் மீட்கப்பட்டுள்ளதால் அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் போலீசார் மத்தியில் எழுந்துள்ளது.

இறந்த பெண் சிவப்பு கலர் சுடிதார் அணிந்திருந்தார், பாப் கட்டிங் வெட்டியிருந்தார் என்பதை குறித்துக்கொண்டனர். இறந்தவரின் புகைப்படத்தை நோட்டீஸ்சாக போட்டு வேலூரில் மருத்துவ சிகிச்சைக்காக வந்து தங்கியுள்ள வடமாநிலத்தவரிடம் விசாரிக்கவும் போலீஸ் முடிவு செய்துள்ளது.

தினமும் நூற்றுக்கணக்கானவர்கள் வடகிழக்கு மாநிலங்களில் இருந்து சிகிச்சைக்காக தென்னிந்தியாவின் பிரபல மருத்துவமனைகளில் ஒன்றான சி.எம்.சி மருத்துவமனைக்கு வருகின்றனர். ஆயிரக்கணக்கான வடமாநிலம் மற்றும் வடகிழக்கு மாநிலத்தவர்கள், மேற்கு வங்கத்தினர் இங்கே தங்கி சிகிச்சை பெற்றுவருகின்றனர். அவர்களில் சிலரை பண ஆசைக்காட்டி ஏமாற்றி தவறான வழிகளில் ஈடுப்படுத்தவே ஒரு கும்பல் உள்ளது. அந்த கும்பல் செய்த செயலா? அல்லது வேறு ஏதெனும் காரணமா என தெரியவில்லை.

அந்த பெண்ணை பற்றி தகவல்கள் தெரியவந்த பின்பே இறப்பிற்கான முழு விபரம் தெரியவரும் என்பதால் போலீஸார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்