
சென்னை துரைப்பாக்கத்தில் ஐபிஎல் போட்டி குறித்த வாக்குவாதத்தில் ஏற்பட்ட கைகலப்பில் தாக்குதலுக்கு உள்ளான இளைஞர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் இந்த சம்பவத்தில் பெண் விவகாரம் இருப்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சென்னை பெருங்குடி வேளச்சேரி பகுதியைச் நண்பர்கள் ஏழு பேர் கல்லுக்குட்டை பகுதியில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை பார்த்துக் கொண்டே ஒன்றாக மது அருந்தியதாகக் கூறப்படுகிறது. அப்பொழுது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியடைந்ததால் பெங்களூர் சேலஞ்சர்ஸ் அணியின் வெற்றி குறித்து ஜீவரத்தினம் என்ற இளைஞர் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் மது அருந்திக் கொண்டிருந்த அவர்களுக்குள்ளாகவே மோதல் ஏற்பட்டது.
இதில் ஜீவரத்தினத்தை ஐந்து நண்பர்கள் சேர்ந்து தாக்கியதில் படுகாயமடைந்தார். மீட்கப்பட்ட ஜீவரத்தினம் உடனடியாக சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். துரைப்பாக்கம் போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்ததில் ஐபிஎல் போட்டியில் குறித்து அவரவர் ஆதரிக்கும் அணிகளை குறித்து பேசுகையில் ஏற்பட்ட விவாதத்தில் கைகலப்பு ஏற்பட்டதாக தெரிந்திருந்தது. அப்பு, கோகுல், ரமேஷ், அஜய், ஜெகதீஷ் உள்ளிட்ட ஐந்து பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் இதில் பெண் விவகாரம் ஒன்றும் இருந்ததும் தெரியவந்தது. அப்புவின் மனைவியிடம் ஜீவரத்தினம் பழகி வந்ததால் இந்த கொலை நிகழ்ந்து தெரியவந்துள்ளது. அதேபோல் உயிரிழந்த ஜீவரத்தினத்தின் மீது ஒன்பது திருட்டு வழக்குகள் இருப்பதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.