Skip to main content

ம.தி.மு.க. பெரியார் - அண்ணா பேச்சுப் போட்டியில் வென்ற மாணவிக்கு ரூ.1 லட்சம் - தங்கப் பதக்கம்!

Published on 03/09/2018 | Edited on 04/09/2018
mdmk


மதிமுக மாணவர் அணி சார்பில், பெரியார் - அண்ணா என்ற தலைப்பில் மாவட்ட, மண்டல, மாநில அளவில் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி நடைபெற்றது.

முதல் கட்டமாக மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டி ஜூலை 22ஆம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் நடைப்பெற்றது. இதில் 1500 கல்லூரிகளைச் சேர்ந்த 2200 மாணவர்கள் இப்போட்டியில் பங்கேற்றனர்.

இதில் மூன்று மாணவ - மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு முதல் பரிசாக 6 ஆயிரம், இரண்டாம் பரிசு 4 ஆயிரம், மூன்றாம் பரிசு 2 ஆயிரம் வழங்கப்பட்டது.

இரண்டாவது கட்டமாக மண்டல அளவிலான பேச்சுப் போட்டிகள் சென்னை, கடலூர், சேலம், திருச்சி, கோவை, மதுரை, நெல்லை ஆகிய ஏழு மண்டலங்களில் நடைபெற்றது. ஒவ்வொரு மண்டலத்திற்கும் மூன்று பேர் தேர்வுசெய்யப்பட்டு முறையே 10ஆயிரம், 7 ஆயிரம், 5 ஆயிரம் வழங்கப்பட்டது.

மண்டல அளவிலான போட்டிகளில் 120 மாணவ - மாணவிகள் பங்கேற்று, மாநிலப் போட்டிக்கு 21 பேர் தகுதி பெற்றனர்.

மாநில அளவிலான பேச்சுப் போட்டி சென்னை - புரசைவாக்கத்தில் உள்ள கம்மவார் திருமண மண்டபத்தில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெற்றது.

இப்போட்டியில் தஞ்சை மாவட்டம் திருவையாறு பான்செக்கர் மகளிர் கல்லூரியைச் சேர்ந்த தி.அட்சயா முதல் பரிசு ஒரு இலட்சமும், 30 ஆயிரம் மதிப்பிலான பெரியார் - அண்ணா முகம் பதித்த தங்கப் பதக்கமும் பெற்றார்.

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அன்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரியைச் சேர்ந்த மாணவன் ஆ.நாகமுத்துப்பாண்டியன் இரண்டாம் இடம் பிடித்து ரூபாய் 50 ஆயிரமும், பெரியார் - அண்ணா முகம் பதித்த வெள்ளிப்பதக்கமும் பெற்றார்.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவன் இ.பிரதீப் மூன்றாம் இடம் பிடித்து ரூபாய் 25 ஆயிரமும், பெரியார் - அண்ணா முகம் பதித்த வெள்ளிப் பதக்கமும் பெற்றார்.

வெற்றி பெற்ற மாணவ - மாணவிகளுக்கு மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் பரிசுத் தொகை, சான்றிதழ் வழங்கி, பதக்கம் அணிவித்துப் பாராட்டுத் தெரிவித்து, மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக சிறப்புரையாற்றினார்.
 

mdmk


பேச்சுப் போட்டி நடத்துவதன் நோக்கங்கள் குறித்து நெல்லை மாவட்டச் செயலாளர் தி.மு.இராசேந்திரன் உரையாற்றினார்.

இப்போட்டிக்கு மாணவர் அணி மாநிலச் செயலாளர் மணவை தமிழ்மாணிக்கம் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியின் தொடக்கத்தில் மாநிலத் துணைச் செயலாளர் வி.சேஷன் வரவேற்றார்.

நிகழ்வில் துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா, அரசியல் ஆலோசனைக்குழுச் செயலாளர் புலவர் செ.செவந்தியப்பன், உயர்நிலைக்குழு உறுப்பினரும், சட்டத்துறைச் செயலாளருமான வழக்கறிஞர் ஜி.தேவதாஸ், மாவட்டக் கழகச் செயலாளர்கள் டி.சி.இராஜேந்திரன், சைதை ப.சுப்பிரமணி, ஊனை ஆர்.இ.பார்த்திபன், மா.வை.மகேந்திரன், வேலூர் வ.கண்ணதாசன், ஆற்க்காடு பி.என்.உதயகுமார், சேலம் மாநகர் ஆனந்தராஜ், மாநில இளைஞர் அணிச் செயலாளர் வே.ஈஸ்வரன், தீர்மானக்குழுச் செயலாளர் கவிஞர் மணிவேந்தன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

மாணவர் அணி மாநிலத் துணைச் செயலாளர்கள் ப.த.ஆசைத்தம்பி, துரை.மணிவண்ணன் ஆகியோர் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்கள். மாணவர் அணி மாநிலத் துணைச் செயலாளர் முகவை இரா.சங்கர் நன்றியுரை ஆற்றினார்.

முனைவர் கு.திருமாறன், பேராசிரியை விமலா அண்ணாதுரை, இலக்கியச் சொற்பொழிவாளர் கங்கை மணிமாறன் ஆகியோர் பேச்சுப் போட்டியில் நடுவர்களாக இருந்தனர். இந்த நிகழ்ச்சி மறுமலர்ச்சி திமுக மாணவர் அணி சார்பாக நடத்தப்பட்டது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாஜகவுக்குத் தீயாய் வேலை பார்க்கும் வைகோ சகோதரி மகன்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Vaiko, who works as an opposite to mdmk, is his sister's son

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தீவிரப்படுத்தியுள்ளன.

இந்நிலையில், விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமாருக்காக கிராமப்புறங்களில் தேர்தல் வேலை பார்த்துக்கொண்டிருந்தார் ஒருவர். அவரை நம்மிடம் சுட்டிக்காட்டிப் பேசிய நண்பர் “இவரோட தாத்தா மடத்துப்பட்டி கோபால் நாயக்கர் அந்தக் காலத்து காங்கிரஸ்காரர். பெருந்தலைவர் காமராஜரிடம் நெருக்கமாக இருந்தவர். அவருடைய பேரன்தான் இந்தக் கார்த்திகேயன். மதிமுகவுல இருந்தவர் 2019-ல் அதிமுகவுல சேர்ந்தார். இப்ப தேசிய நீரோட்டத்துல கலந்துட்டேன்னு பாஜகவுல சேர்ந்திருக்கார். மனுஷன் தீயா வேலை பார்க்கிறாரு. எதுக்கு கட்சி மாறிக்கிட்டே இருக்கீங்கன்னு கேட்டதுக்கு, கொள்கை பிடிக்காமத்தான் மதிமுகவுல இருந்து வெளிய வந்தேன். அப்புறம் அதிமுகவுல கடம்பூர் ராஜு கிட்ட என்னைப் பத்தி தப்பா சொல்லிட்டாங்க. அதனால அதிமுகவுல நீடிக்க முடியலன்னு சொல்லுறாரு. என்ன கொள்கையோ?” என்று சலித்துக்கொண்டார்.

‘தேர்தல் பணி எப்படிப் போகிறது?’ என்று கார்த்திகேயனிடம் கேட்டோம். “என்னோட நெருங்கிய வட்டத்துல.. சொந்தபந்தங்கள் கிட்ட தாமரைக்கு ஆதரவு திரட்டுறேன். இங்கே கிராமங்கள்ல என்னைத் தெரிஞ்சவங்க நிறைய பேர் இருக்காங்க. அவங்கள எல்லாம் பார்க்கிறேன். பாஜக வேட்பாளர்கள் வெற்றிக்கு அணில் மாதிரி உதவிக்கிட்டிருக்கேன். விருதுநகர், தென்காசின்னு ரெண்டு பார்லிமென்ட் தொகுதிக்கும் நான் வேலை பார்க்கிறேன்.” என்றார்.

பாஜக தலைமை கார்த்திகேயனைக் கட்சிக்குள் இழுத்ததற்கு ஒரு காரணம் இருக்கிறது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ-வுடைய சகோதரி 
சரோஜாவின் மகன் என்ற அடையாளம் இவருக்கு உண்டு.  

Next Story

“மத்தியில் நல்லாட்சி அமைய துரை வைகோவுக்கு வாக்களியுங்கள்” - அமைச்சர் கே.என்.நேரு

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Vote for Durai Vaiko for good governance in Madhya Pradesh Minister KN Nehru

திருச்சி பாராளுமன்ற தொகுதி மதிமுக வேட்பாளர் துரைவைகோ, நேற்று காலை ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட சித்தாநத்தத்தில் தனது பிரச்சாரத்தைத் தொடங்கினார்.  தொடர்ந்து சமுத்திரம், மறவனுார், கண்ணுடையான்பட்டி, முத்தப்புடையான்பட்டி, மொண்டிப்பட்டி, பெரியப்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலும், மாலை ஸ்ரீரங்கம் மேலுார், மூலத்தோப்பு, வடக்குவாசல், கீழவாசல், அம்பேத்கர்நகர், நெல்சன் ரோடு மற்றும் அந்தநல்லுார் ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளிலும் நேற்று வீதி, வீதியாக ஓட்டு சேகரித்தார்.

அமைச்சர் கே.என்.நேரு, பொதுமக்களிடையே ஓட்டு சேகரித்து பிரச்சாரத்தை தொடங்கி வைத்து பேசுகையில்,‘‘துரை வைகோ எம்பியாக வெற்றி பெற்றால் மத்திய அரசில் இருந்து அனைத்து நன்மைகளும் திருச்சிக்கு கிடைக்கும். இளைஞர்கள், பெண்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் மணப்பாறை சிப்காட் உணவுப்பூங்கா, பாதுகாப்பு தளவாட தொழிற்சாலை அமைக்க முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் இப்போதுள்ள மத்திய அரசு உதவ மறுப்பதால் இத்திட்டங்கள் செயல்படுத்த முடியவில்லை. ஐஎன்டிஐஏ கூட்டணி வெற்றி பெற்றால், இந்த திட்டங்கள் நமக்கு வந்து சேரும். பாஜ அரசு 100 நாள் வேலை திட்டத்தை 30 நாளாக குறைத்துவிட்டது. எனவே, மத்தியில் நல்லாட்சி அமைய துரை வைகோ வெற்றி பெற, தீப்பெட்டி சின்னத்தில் ஓட்டளிக்க வேண்டும்’’, என்றார்.

பிரச்சாரத்தில் வேட்பாளர் துரை வைகோ பேசுகையில்,‘‘இந்த தேர்தல் டில்லியில் யார் ஆட்சிக்கு வர வேண்டும், வரக்கூடாது என்பதை நிர்ணயிக்கும் தேர்தல். ஸ்ரீரங்கத்துக்கு உலகத்தின் பல்வேறு நாடுகளில் இருந்தும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். நான் வெற்றி பெற்றால், ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு சிறப்பான அனுபவத்தை தரும் வகையிலான திட்டங்களை செயல்படுத்துவேன். கடந்த 3 ஆண்டுகளில் ஸ்ரீரங்கம் நகரத்துக்கு தேவையான புதிய பஸ் நிலையம், புதிய சாலைகள், ரூ.138 கோடி செலவில் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம், காவிரியின் குறுக்கே புதிய பாலம் திட்டங்களை செயல்படுத்தியுள்ளனர்.

மத்திய அரசு தமிழகத்திற்கு உரிய நிதியை முழுமையாக வழங்காததால் மேலும் பல திட்டங்களைச் செயல்படுத்தவில்லை. இந்நிலையில், மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, ராகுல் காந்தி பிரதமர் ஆனால்  தமிழகத்திற்கு உரிய நிதி கிடைக்கும். அதன்மூலம் ஸ்ரீரங்கம் உட்பட தமிழகத்திற்கான நிதியை பெற்று திட்டங்களை செயல்படுத்தலாம். கல்விக் கடன், பயிர்க்கடன் ரத்து என பல்வேறு வாக்குறுதிகளை இந்தியா கூட்டணி வாக்குறுதிகளாக அளித்துள்ளது. எளிய மக்கள் எளிதில் அணுகும் எளிமையான எம்பியாக, தொகுதி மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் எம்பியாக, ஸ்ரீரங்கம் பகுதி மக்களின் குரலாக லோக்சபாவில் ஒலித்து சிறந்த எம்பியாக செயல்படுவேன். அதற்கு எனக்கு ‘தீப்பெட்டி’ சின்னத்தில் ஓட்டளித்து வெற்றி பெறச்செய்ய வேண்டும்’’ என்றார்.

பிரச்சாரத்தில், திமுக மத்திய மாவட்டச் செயலாளர் வைரமணி, மாநகரச் செயலாளர் மேயர் அன்பழகன், எம்.எல்.ஏ பழனியாண்டி, மேயர் அன்பழகன், பகுதி செயலாளர் ராம்குமார், மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளர் வழக்கறிஞர் சரவணன் உள்ளிட்ட திமுக, மதிமுக கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.