சேலம் அருகே, கணவரை இழந்து மகள்களுடன் தனியாக வசித்து வந்த கைம்பெண் ஒருவர் மர்ம நபர்களால் கல்லால் தாக்கிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி அருகே உள்ள தப்பக்குட்டை காட்டுவலவைச் சேர்ந்தவர் ஞானசுந்தரம். ஆட்டோ ஓட்டுநர். இவருக்கும், கேரளாவைச் சேர்ந்த பீனா (35) என்பவருக்கும் கடந்த 11 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது.

இவர்களுக்கு கவிதா, காவியா ஆகிய இரு மகள்கள் உள்ளனர். கடந்த ஐந்து ஆண்டுக்கு முன்பு ஏற்பட்ட சாலை விபத்தில் ஞானசுந்தரம் இறந்துவிட்டார். இதையடுத்து பீனா, சீரகாபாடியில் உள்ள வினாயகா மிஷன் மருத்துவக்கல்லூரியில் துப்புரவு பணியாளராக வேலை செய்து வந்தார்.
செவ்வாய்க்கிழமை (பிப். 25) மாலையில் அவர் வேலை முடிந்து வீட்டிற்கு வந்துள்ளார். சிறிது நேரத்தில் அவர், மர்ம நபர் ஒருவருடன் மோட்டார் சைக்கிளில் வீட்டில் இருந்து கிளம்பிச்சென்றுள்ளார். ஆனால், அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை.
இந்நிலையில், தப்பக்குட்டை பிள்ளையார் கோயில் அருகே உள்ள ஒரு காட்டில் பீனா, சடலமாகக் கிடந்தார். அவருடைய முகத்தில் ரத்தக்காயங்கள் இருந்தன. மர்ம நபர்கள் அவரை கல்லால் தாக்கிக் கொலை செய்துவிட்டு, சடலத்தை வீசிவிட்டுச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த மகுடஞ்சாவடி காவல்துறையினர், சம்பவ இடத்தைப் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். சடலத்தை மீட்டு, உடற்கூறு ஆய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கொல்லப்பட்ட பீனாவுக்கும், உள்ளூரைச் சேர்ந்த 24 வயது இளைஞர் ஒருவருக்கும் தவறான தொடர்பு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. சம்பவத்தன்று இரவு அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில், அவரை அடித்துக் கொலை செய்திருக்கலாம் என்றும் காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
பீனாவின் செல்போனுக்கு யார் யாரிடமிருந்து அழைப்புகள் வந்துள்ளன. அவருடைய செல்போனில் இருந்து யார் யாருக்கு அழைப்புகள் சென்றிருக்கின்றன என்ற பட்டியலை சேகரித்து, அதன் அடிப்படையில் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.