
புதுச்சேரி உருளையன்பேட்டை அய்யனார் நகரை சேர்ந்த ஆறுமுகம் என்பவரது மகன் அருள்சாமி(33). இவர் எலெக்ட்ரிஷியனாக பணியாற்றி வருகின்றார். இந்நிலையில் செல்போனில் யாரோ அழைத்ததாகக்கூறி அருள்சாமி இன்று மாலை தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிலிருந்து இந்திராகாந்தி சிலை அருகே வந்துள்ளார். அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த சிலர் அருள்சாமியிடம் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது அருள்சாமியை தாக்கிய மர்ம நபர்கள், கத்தியால் அவரை வெட்ட முயற்சித்துள்ளனர். அதிலிருந்து தப்பிக்க அருள்சாமி நடேசன் நகர் நோக்கி ஓடியுள்ளார். அப்போதும் அந்த மர்ம கும்பல் விடாமல் துரத்தி சென்று நடேசன் நகர் மூன்றாவது குறுக்குத் தெருவில் வைத்து சரமாரியாக வெட்டினர். இதில் தலையில் பலத்த காயமடைந்த அருள்சாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த உருளையன்பேட்டை போலீசார் அருள்சாமியின் சடலத்தைக் கைப்பற்றி, உடல் கூராய்வுக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில், பூமியான்பேட்டையை சேர்ந்த சிலருக்கும், அருள்சாமிக்கும் இடையே கொடுக்கல் வாங்கல் தகராறு இருந்து வந்ததாகவும், இதனால் ஆத்திரமடைந்த பூமியான்பேட்டையை சேர்ந்த சிலர், அருள்சாமியை வெட்டிக் கொன்றிருக்கலாம் என்றும் கூறப்படுகின்றது. அதையடுத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.