Skip to main content

ரசிகர் மன்ற போட்டியில் தற்போதைய தலைவர் வெட்டிப் படுகொலை! -முன்னாள் செயலாளர் உட்பட 3 பேரிடம் தீவிர விசாரணை!

Published on 05/10/2020 | Edited on 05/10/2020

 

incident i n cuddalore

 

நடிகர் விஜய்சேதுபதி ரசிகர் மன்றத்தின் புதுச்சேரி மாநிலத் தலைவர் மணிகண்டன்(36). இவர் நேற்று (04.10.2020) இரவு 11 மணியவில் தனது இருசக்கர வாகனம் மூலம் மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள தனது வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது நெல்லித்தோப்பு மார்க்கெட் எதிரே பின் தொடர்ந்து வந்த 3 பேர் மணிகண்டனை வழிமறித்து சரமாரியாக வெட்டி விட்டுத் தப்பி ஓடினர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற உருளையன்பேட்டை போலீசார் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த மணிகண்டனை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள் ஏற்கனவே மணிகண்டன் உயிரழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். அதையடுத்து கொலை வழக்குப் பதிவு செய்த உருளையன்பேட்டை போலீசார் கொலை செய்துவிட்டுத் தப்பியோடிய மர்ம கும்பலைத் தேடி வந்தனர்.

 

incident i n cuddalore


இதுகுறித்த விசாரணையில், மணிகண்டன் தற்போது நடிகர் விஜய் சேதுபதி ரசிகர் மன்றத் தலைவராக இருந்து வருகின்றார். இவரது உறவினரான ஆட்டுப்பட்டியைச் சார்ந்த ராஜசேகர் என்பவர் செயலாளராக இருந்து தற்போது தனியாகச் செயல்பட்டு வருகின்றார். மணிகண்டன் தலைமையிலான மன்றத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் தனித்துச் செயல்படும் ராஜசேகர் மன்றத்திற்கு அனுமதி இல்லை என்று கூறப்படுகின்றது. மேலும் இதுகுறித்து இருவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளதாகவும் கூறப்படும் நிலையில், நண்பர்கள் மூலம் நேற்று இருவரும் சமாதானம் பேச புதுச்சேரி அண்ணா சாலையில் உள்ள அண்ணா திடலில் சந்தித்துள்ளனர்.

இதில் ராஜசேகர் தலைவர் பதவியைக் கேட்டதாகக் கூறப்படுகின்றது. அதற்கு மணிகண்டன் ஒத்துக்கொள்ளாமல் அவர்களை மிரட்டிவிட்டுச் சென்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இதனாலேயே அவரை ராஜசேகர், கூட்டாளிகளுடன் சேர்ந்து வெட்டி கொலை செய்திருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அதையடுத்து ராஜசேகர் உட்பட 3 பேரை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்