![incident in broad daylight; There is excitement in Paramakudi](http://image.nakkheeran.in/cdn/farfuture/je1cj6t_hqvg41Zjp6LYQzy7vIOfj_-2XqgZ4AgEbRg/1719226811/sites/default/files/inline-images/a72306.jpg)
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே பட்டப்பகலில் டீக்கடையில் பணியாற்றி வந்த பெண்ணை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அண்மையில் காஞ்சிபுரத்தில் பட்டப்பகலில் பெண் காவலர் ஒருவர் கணவரால் தாக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் ராமநாதபுரம் பகுதியில் நடந்த இந்த கொலை சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த டீக்கடையில் மேகலா என்ற பெண் பணியாரம் சுட்டுக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் எதிர்பாராத விதமாக மறைத்து வைத்திருந்த கத்தியால் மேகலாவை சரமாரியாக குத்தினார். ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த மேகலா அங்கேயே துடிதுடித்து உயிரிழந்தார். உடனடியாக மணிகண்டனை பிடித்த அக்கம்பக்கத்தினர் அவனை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
![incident in broad daylight; There is excitement in Paramakudi](http://image.nakkheeran.in/cdn/farfuture/ixTqauc1q2DGV-C2SLBxXUFGcocrjRL50ThqUBX6J-Y/1719226854/sites/default/files/inline-images/a72308.jpg)
இது தொடர்பான விசாரணையில் கருத்து வேறுபாட்டால் கணவனை பிரிந்து இரண்டு குழந்தைகளுடன் தாய் வீட்டில் வசித்து வந்த மேகலா அந்தப் பகுதியில் உள்ள டீக்கடையில் பணியாற்றி வந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கும் மேகலாவிற்கும் இடையே தொடர்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல் இருவருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் தகராறும் இருந்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து மேகலா ஏற்கனவே காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இருதரப்பையும் அழைத்த போலீசார் இருவரையும் கண்டித்து அனுப்பி வைத்திருந்தனர். இந்நிலையில் ஆத்திரத்தில் இருந்த மணிகண்டன் டீக்கடையில் பணியாரம் சுட்டுக் கொண்டிருந்த மேகலாவை கத்தியால் குத்தியது தெரிய வந்தது. பட்டப்பகலில் டீக்கடையில் பணியாற்றிக்கொண்டிருந்த பெண் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அங்குப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.