Skip to main content

தமிழக மீனவர்களை அச்சுறுத்த இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச்சூடு!

Published on 26/09/2024 | Edited on 26/09/2024
Incident between Tamil Nadu fishermen and Sri Lankan Navy

தமிழகம் மற்றும் புதுவைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் சம்பவம் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. அதோடு மீனவர்களின் விசைப் படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவது போன்ற நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்படும் சூழலும் நிலவி வருகிறது. இந்த துயரச் சம்பவங்களுக்கு இடையே தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்களும் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இது போன்ற சூழலில், இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவித்திடவும் வலியுறுத்தி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், பிரதமர் மோடி மற்றும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தொடர்ந்து கடிதம் எழுதி வருகிறார். அதேசமயம் கைது செய்யப்படும் தமிழக மீனவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் நிகழ்வுகளும் தற்போது அரங்கேறி வருகின்றன. இந்த பரபரப்பான நிலையில் இலங்கையின் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்று இலங்கையின் 9வது அதிபராக அநுரா குமார திஸநாயக கடந்த 23ஆம் தேதி (23.09.2024) பதவியேற்றுக் கொண்டார். கொழும்புவில் உள்ள அதிபர் மாளிகையில் எளிமையான முறையில் பதவியேற்பு நிகழ்ச்சியில், இலங்கையின் தலைமை நீதிபதி ஜெயந்த ஜெயசூரியா, அநுரா குமார திஸ்நாயகவுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

Incident between Tamil Nadu fishermen and Sri Lankan Navy

இந்நிலையில் வழக்கம்போல் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் உரிய அனுமதிச் சீட்டு பெற்று 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் நேற்று (25.09.2024) காலை மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றனர். அதன்படி நேற்று இரவு கச்சத்தீவுக்குத் தென்புறம் மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்களின் மீது கயிறு, பிளாஸ்டிக் குழாய்களைக் கொண்டு கொடூரமாகத் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.

அதே சமயம் அங்கு இரண்டு ரோந்து படகுகளில் வந்த இலங்கை கடற்படையினர் வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும் கூறப்படுகிறது. இலங்கை கடற்படையின் அச்சுறுத்தலால் மீன்பிடி வலைகளைக் கடலில் வெட்டிவிட்டு வந்ததால்  படகு ஒன்றுக்கு  ரூ. 50 ஆயிரம் 1லட்சம் ரூபாய் வரை நஷ்டத்துடன் மீனவர்கள் கரை திரும்பியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இலங்கையின் அதிபராக அநுர குமார திஸ்நாய்க பதவியேற்றபின், தமிழக மீனவர்களை நோக்கி முதல் முறையாகத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழக மீனவர்களை எச்சரிக்கும் வகையில் வானத்தை நோக்கி இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சார்ந்த செய்திகள்