
அரசுநிலங்களில் சட்டவிரோத கட்டுமானங்கள் உருவாகமல் இருக்க தமிழக அரசும், மாநகராட்சியும் விழிப்புடன் செயல்பட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
பழைய மகாபலிபுரம் சாலையில் அமைந்துள்ள சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலக வளாகத்தில் சட்டவிரோத கட்டுமானங்கள் உருவாக்கப்பட்டு வருவதாகவும், மாநகராட்சி அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள கட்டடத்தை அகற்ற சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட கோரியும் சென்னை பாலவாக்கத்தைச் சேர்ந்த டி.விஜயபாரதி என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், சட்டத்தை உருவாக்குபவர்களே அதை கையில் எடுத்து செயல்பட முடியாது என கண்டனம் தெரிவித்து, சட்டமன்ற அலுவலகத்தில் கட்டப்பட்டு வரும் சட்டவிரோத கட்டுமானத்தை உடனடியாக இடிக்க சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிமன்ற உத்தரவுப்படி கட்டடம் இடிக்கப்பட்டுவிட்டதாக மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதை பதிவு செய்த நீதிபதிகள், எதிர்காலத்தில் இது போன்ற சட்டவிரோத கட்டுமானங்கள் உருவாகமல் தடுக்க தமிழக அரசும், மாநாரட்சியும் விழிப்புடன் இருக்க அறிவுறுத்தி வழக்கை முடித்துவைத்தனர்.