
திருச்சி மாவட்டம் ஜம்புநாதபுரம் பகுதியில் இரண்டரை மாத பச்சிளம் குழந்தைக்கு, தாய் தானாகவே வயிற்று வலிக்கு மருந்து கொடுத்ததில் உடல்நிலை மேலும் மோசமானதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. பொதுமக்கள் இது போன்று தவறான சிகிச்சை முறைகளை தாங்களே கையாள்வதும், உடல் நலம் குன்றி மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக வரும் முதியோர்கள், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட அனைத்து தரப்பு பொது மக்களுக்கும் உரிய கல்வித்தகுதி இல்லாமல், முறையான பயிற்சி பெறாமல் தவறான சிகிச்சை அளிப்பதும் சட்டப்படி குற்றமாகும்.
உரிய அங்கீகாரம் இல்லாமல் தவறான மருத்துவ சிகிச்சை அளித்து அதன் காரணமாக நோயாளிகள் உயிர் இழக்க நேரிட்டால், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது இந்திய தண்டனை சட்ட பிரிவு 304(ii)ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதோடு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் தண்டனைக்கு உள்ளாக்கப்படுவார்கள் என மத்திய மண்டல காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். அதே போல் பொதுமக்கள் தங்களுக்கு ஏற்படும் உடல்நலக்குறைவிற்கு முறையாக மருத்துவம் படித்து பயிற்சி பெற்ற மருத்துவர்களை அணுகி அவர்களது அறிவுரைப்படி மட்டுமே சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.