வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த கீழ்கிருஷ்ணாபுரம் கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் ஆடுதுறை ரவி(58). இவர் அரசு டாஸ்மாக் கடையில் விற்பனையாளராகப் பணியாற்றி வந்தார். இவருக்கு பூவரசன்(25) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். இதில், மூத்த மகன் பூவரசனும் கந்தநேரி அடுத்த கழனிபாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ஐஸ்வயா(20) என்பவரும் கடந்த 4 ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதலுக்கு பெற்றோர் சம்மதத்துடன் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்றது.
இந்த நிலையில், நேற்று மாலை ஐஸ்வர்யா தோழியின் நிச்சயதார்த்த விழா பள்ளிகொண்டா பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றுள்ளது. அதற்குத் தன்னை அழைத்துச் செல்லுமாறு தன் கணவரிடத்தில் ஐஸ்வர்யா வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது.
பூவரசனும் அவரின் தாயாரை பள்ளிகொண்டா பகுதியில் நடைபெறும் வாரச் சந்தைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் எனக் கூறியதாகவும் அதற்காக கணவன் மனைவி இடையே சிறிய அளவிலான வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து பூவரசன் தன் தாயை அழைத்துக் கொண்டு பள்ளிகொண்டாவில் உள்ள வாரச்சந்தைக்கு சென்றுள்ளார். பெண் தோழியின் நிச்சயதார்த்த விழாவிற்கு அழைத்துச் செல்லாததால் மனமுடைந்த ஐஸ்வர்யா வீட்டினுள்ளே படுக்கையறையில் தூக்கிட்டுக் கொண்டுள்ளார்.
சந்தைக்குச் சென்றுவிட்டு மீண்டும் வீடு திரும்பிய பூவரசன், ஐஸ்வர்யா தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்து உடனடியாக ஐஸ்வர்யாவை மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ஐஸ்வர்யாவை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் முன்பே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். இதனால் மனமுடைந்த கணவர், இன்று அதிகாலை மருத்துவமனை வளாகத்திலேயே விஷம் குடித்து மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவரிடம் காட்டிய போது அவரும் இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
வீட்டில் ஏற்பட்ட சிறு தகராற்றால், கணவன் மனைவி இருவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.