Skip to main content

திருமணத்தை மீறிய உறவு; கணவனை சரமாரியாக வெட்டிய மனைவி! 

Published on 30/03/2023 | Edited on 30/03/2023

 

Husband in critical stage police arrested his wife and her boy friend

 

தர்மபுரி அருகே, ரகசிய காதலனுடன் தனிமையில் நெருக்கமாக இருந்ததை பார்த்துவிட்ட கணவனை கொடுவாளால் சரமாரியாக வெட்டிய மனைவியை காவல்துறையினர் கைது செய்தனர்.

 

தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே உள்ள காமராஜர் நகரைச் சேர்ந்தவர் ராஜாமணி (50) கூலித் தொழிலாளி. இவருடைய மனைவி காவியா (45 பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். ஒரு மகளுக்கு திருமணம் ஆகி குடும்பத்துடன் வசிக்கிறார். மற்றொரு மகள் 9ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில், உள்ளூரைச் சேர்ந்த ராமன் (26) என்பவருக்கும் காவியாவுக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு இருந்து வந்துள்ளது. இதையறிந்த ராஜாமணி, மனைவியை கண்டித்துள்ளார். இதனால் அவர்களிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. பலமுறை கணவர் எச்சரித்த பிறகும் கூட காவியாவோ, ராமனுடனான உறவைத் தொடர்ந்து வந்துள்ளார். இப்படியான நிலையில், மார்ச் 27ம் தேதி இரவு ராஜாமணி, காவியா, மகள் ஆகியோர் வழக்கம்போல் தூங்கிக் கொண்டிருந்தனர்.

 

இந்நிலையில் திடீரென்று யாரோ சிலர் முணுமுணுக்கும் சத்தம் கேட்டு, ராஜாமணி எழுந்து பார்த்தபோது அந்த இரவு நேரத்தில் ராமனும், காவியாவும் வீட்டின் ஒரு பகுதியில் தனிமையில் நெருக்கமாக இருந்ததைப் பார்த்து அதிர்ந்து போனார். கணவர் பார்த்துவிட்டதை அறிந்த காவியா, இனி விபரீதமாக ஏதாவது நடக்கும்  என்பதை உணர்ந்து வீட்டில் இருந்த கொடுவாளை எடுத்து கணவன் என்றும் பாராமல் தலை, கை, கழுத்து ஆகிய இடங்களில் சரமாரியாக வெட்டியுள்ளார். இதனால் ராஜாமணி நிலைகுலைந்து ரத்த வெள்ளத்தில் நிகழ்விடத்திலேயே சரிந்து விழுந்தார். இதைப் பார்த்த ராமன் அங்கிருந்து தலைதெறிக்க ஓடிவிட்டார். இதையடுத்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த கணவனை வீட்டுக்குள் வைத்து கதவை வெளிப் பக்கமாக பூட்டிய காவியா, கொடுவாளை வீட்டு வாசலில் வைத்துவிட்டு தொப்பூர் காவல்நிலையத்திற்குச் சென்று சரணடைந்தார்.

 

இதற்கிடையே, ராஜாமணியின் அலறல் சத்தம் கேட்டு அங்கு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர், குற்றுயிரும் குலையுயிருமாகப் போராடிக் கொண்டிருந்த  ராஜாமணியை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காவல்துறை விசாரணையில், திருமணத்தை மீறிய உறவுக்கு இடையூறாக இருந்ததால் கணவனை வெட்டியதாக காவியா ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தார். இந்த சம்பவத்திற்கு தனது ரகசிய காதலனும் உடந்தையாக இருந்ததாகவும் தெரிவித்தார். இதையடுத்து காவியா மற்றும் அவருடைய ரகசிய காதலன் ராமன் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

 

இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல்துறையினர், காவியாவை சேலம் பெண்கள் கிளைச் சிறையிலும் ராமனை சேலம் மத்திய சிறையிலும் அடைத்தனர். இந்த சம்பவம் நல்லம்பள்ளி சுற்றுவட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்