சேலத்தில், ஒரு டன் ரேஷன் அரிசியை வீடு அருகே பதுக்கி வைத்திருந்த கூலித் தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம், ஆட்டையாம்பட்டி, எஸ்.பாப்பாரப்பட்டி, வீரபாண்டி ஆகிய பகுதிகளில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக சேலம் குடிமைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து எஸ்.ஐ மலர்விழி மற்றும் காவல்துறையினர் ஆட்டையாம்பட்டி அருகே எஸ்.பாப்பாரப்பட்டி பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டின் அருகே, 21 மூட்டைகளில் ஒரு டன் ரேஷன் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.
விசாரணையில், அப்பகுதியைச் சேர்ந்த கோபால் என்பவர், உள்ளூர் மக்களிடம் ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி, அதை மாவாக அரைத்து சாலையோர இட்லி கடைகள், உணவகங்களுக்கு கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
கூலித்தொழிலாளியான அவர், கூடுதல் வருமானத்திற்காக இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இதையடுத்து கோபாலை காவல்துறையினர் கைது செய்ததோடு, அவர் பதுக்கி வைத்திருந்த அரிசி மூட்டைகளையும் பறிமுதல் செய்தனர்.