Skip to main content

சேலத்தில் சதி கல், வாமனக்கல் கண்டுபிடிப்பு!

Published on 29/08/2018 | Edited on 29/08/2018


சேலம் அருகே 16ம் நூற்றாண்டைச் சேர்ந்த சதி கல் மற்றும் வாமனக்கல் ஆகியவற்றை வரலாற்று ஆய்வு மையத்தினர் கண்டறிந்துள்ளனர்.


இதுகுறித்து சேலம் வரலாற்று ஆய்வு மையத்தலைவர் ஆறகழூர் வெங்கடேசன் கூறியது, சதி எனப்படும் உடன்கட்டை ஏறும் பழக்கம் இதிகாச காலத்திலேயே இருந்து வந்துள்ளது. சோழர்கள் காலத்திற்குப் பின் சதி கற்கள் அதிகளவில் கண்டெடுக்கப்பட்டாலும், விஜயநகர பேரரசுக்குப் பின்னர் மிக அதிகளவில் கிடைத்துள்ளன.

 

history

 

 

 

சதி கற்களை இரண்டு வகைப்படுத்தலாம். கணவன் இறந்த பின் உயிர்விடும் மனைவிக்கு எடுக்கப்படும் நடுகல் முதல் வகை. கணவனுடன் வா-ழும் பெண்ணோ, கைம்பெண்ணோ கற்புக்கு பங்கம் நேரும்போது தீயில் விழுந்து தன் கற்பை நிலை நாட்டுதல் இரண்டாவது வகை ஆகும். இவர்களுக்கு சில இடங்களில் கோயில்களும் எழுப்பப்பட்டு உள்ளன. அத்தகைய கோயில்களைத்தான் தீப்பாஞ்சாயி கோயில்கள் என்கிறோம்.சதி கற்களில் கைகளில் வளையல் அணிந்த பெண் சிற்பம் காணப்படும். கணவனுடன் சேர்ந்து இறந்ததை இந்த வளை அணிந்த கை உணர்த்தும். பிற்காலத்தில் ராஜா ராம் மோகன்ராய் முயற்சிகளால் சதி எனும் நடைமுறை ஒழிக்கப்பட்டது.

 


சேலம் மாவட்டம் வட்டமுத்தான்பட்டியில் உள்ள சதிகல் ஒரு சதுர வடிவமான கல்லில் புடைப்புச்சிற்பமாக வடிக்கப்பட்டு இருந்தது. இதன் உயரம் 68 செ.மீ., இதில், வெட்டப்பட்டுள்ள வீரனின் 56 செ.மீ., பெண்ணின் உயரம் 50 செ.மீ. ஆகும். வீரனுக்கு அள்ளிமுடிந்த வட்டவடிமான கொண்டை காட்டப்பட்டு உள்ளது. இதுபோன்ற கொண்டை அமைப்பு கெட்டி முதலிகள் காலத்தில் இருந்தது. கொண்டையை கட்டியிருக்கும் கயிறு, இடதுபுறம் பறக்கும் நிலையில் உள்ளது. நீண்ட காதுகளில் அணிகலன்கள் உள்ளன. 

 

history

 

 

 

கழுத்தில் சவடி, சரபளி போன்ற அணிகலன்கள் உள்ளன. இரு புஜங்களிலும் தோள்வளையம் உள்ளது. வலது கையில் வாளினை பற்றியவாறும், வாள் முனை பூமியை நோக்கியும் உள்ளது. இடது கையானது தொடையின் மேல்பகுதியில் வைத்த நிலையில் கடியஸ்த முத்திரையில் உள்ளது. இது போருக்குச் செல்லும் நிலையைக் குறிப்பதாகும். அரையாடை காட்டப்பட்டுள்ளது. வலது கால் நேராகவும், இடது கால் முட்டி சற்று புடைத்து முன்னோக்கிய நிலையிலும் உள்ளது. வீரனின் இடதுபுறம் வீரனின் மனைவி இரு கரங்களையும் கூப்பி வணங்கிய நிலையில் உள்ளனர். இடது பக்கம் கூந்தல் அள்ளி முடியப்பட்டுள்ளது. காதுகளில் அணிகலன், கழுத்தணி, தோள் வளையம் உள்ளன. வளையல் அணிந்துள்ளாள். மார்புக்கச்சை காட்டப்படவில்லை. காலில் கழல் காட்டப்பட்டிருக்கிறது.

 


வட்டாமுத்தான்பட்டி பகுதியை கி.பி. 16ம் நூற்றாண்டில் கெட்டிமுதலி வம்சத்தினர் அமரகுந்தியை தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்து வந்தனர். கி.பி. 1667ஆம் ஆண்டுகளில் மதுரை நாயக்க மன்னருக்கும், மைசூர் மன்னருக்கும் போர் நடந்தது. அந்தப் போரில் கெட்டிமுதலி மன்னர், மதுரை நாயக்கர் சார்பில் கலந்து கொண்டார். அந்தப் போரில் இறந்த வீரருக்கு எடுக்கப்பட்ட நடுகல்லாக இது இருக்கலாம். மனைவியின் உருவமும் இருப்பதால் இது ஒரு சதி கல்லும் ஆகும். மன்னர்கள் காலத்தில் சிவன், பெருமாள் கோயில்களில் பூஜை செய்யவும், விளக்கு ஏற்றவும் நிலங்களை கோயில்களுக்கு தானமாக கொடுப்பது நடைமுறையில் இருந்தது. 

 

history


சிவன் கோயிலுக்கு நிலம் தானமாக கொடுக்கப்பட்டால் அதன் எல்லையைக் குறிக்க சூலக்கல் நடப்படும். பெருமாள் கோயிலுக்கு தானம் கொடுத்திருந்தால் எல்லைகளில் திருவாழிக்கல் நடப்படும்.சேலத்தை அடுத்துள்ள கோட்டைகவுண்டன்பட்டியில் வாமனக்கல் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அந்தக் கல்லின் உயரம் 90 செ.மீ., அகலம் 50 செ.மீ., வாமனன் உருவம், புடைப்புச்சிற்பமாக செதுக்கப்பட்டு உள்ளது. வாமனன உயரம் 35 செ.மீ., அகலம் 20 செ.மீ., ஆக உள்ளது. 

 


வாமனின் இடது கையில் குடையும், வலது கையில் கமண்டலமும், மேற்பகுதியில் சூரியனும், பிறை நிலாவும் காட்டப்பட்டுள்ளது. சூரியன், சந்திரன் உள்ளவரை இந்த தானத்தை யாரும் அழிக்கக்கூடாது என்பது இதன் பொருளாகும்.பெருமாளின் ஐந்தாவது அவதாரம்தான் வாமன அவதாரம். மகாபலி சக்கரவர்த்தியின் கர்வத்தை அடக்கும் வகையில் வாமனன் குள்ள வடிவம் கொண்டு, மூன்று அடி நிலம் கேட்பார். ஒரு அடியில் வானத்தையும், இரண்டாவது அடியில் பூமியையும் அளந்துவிட்டு மூன்றாவது அடியை வைக்க இடமின்றி அந்த அடியை மகாபலியின் தலையில் வைத்ததாக புராணங்கள் கூறுகின்றன. 

 


அதன் அடிப்படையில் பெருமாள் கோயிலுக்கு நிலம் தானமாக கொடுத்ததற்காக எல்லைகளில் வாமன உருவம் செதுக்கப்பட்ட கற்களை நட்டு வைத்துள்ளனர். நிலத்தை அபகரிப்பவர்கள் வாமனனால் தண்டிக்கப்படுவர் என்பதைக் குறிக்கவும் இவ்வாறு வாமனக்கல் நடப்பட்டுள்ளது. இவ்வாறு சேலம் வரலாற்று ஆய்வுமையத் தலைவர் ஆறகழூர் வெங்கடேசன் கூறினார். வரலாற்று ஆர்வலர்கள் ஆத்தூர் செந்தில்குமார், சேலம் ராமச்சந்திரன் ஆகியோர்தான் சதிகல் மற்றும் வாமனக்கல் குறித்த தகவல்களை வழங்கினர் என்றும் அவர் கூறினார். 
 

சார்ந்த செய்திகள்

Next Story

முதல் தலைமுறையினர் வாக்கு யாருக்கு? சுவாரஸ்யமான தகவல்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Interesting facts about who the first generation voted for

நாடாளுமன்றத் தேர்தலில் முதல்முறையாக வாக்களித்த இளைஞர்கள் மாநிலக் கட்சிகளுக்கே முக்கியத்துவம் அளித்து வாக்களித்திருப்பதும், சமூக  நலத்திட்டங்கள், ஊழல் ஆகிய அம்சங்களை கருத்தில் கொண்டு  வாக்களித்திருப்பதும் தெரிய வந்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் ஏப். 19ஆம் தேதி தேர்தல் நடந்தது. தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக, நாதக என நான்கு முனை போட்டி நிலவியது. தமிழகத்தில் மொத்தம் 6.23 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் முதல் தலைமுறை வாக்காளர்கள் 10.92 லட்சம் பேர். முதல் முறையாக வாக்களிக்கும் இளைஞர்களின் ஆதரவு யாருக்கு? என்பதில் அரசியல் கட்சிகளிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.

இந்நிலையில், சேலம் நாடாளுமன்றத் தொகுதியில் முதன் முதலாக வாக்களித்துவிட்டு வந்த இளைஞர்கள், இளம்பெண்களிடம் பேசினோம். அவர்கள் ஊழல் மற்றும் சமூக நலத்திட்டங்களின் அடிப்படையில் வாக்களித்து இருப்பதும், பெரும்பாலானோர் மாநிலக் கட்சிகளுக்கே முக்கியத்துவம் அளித்திருப்பதும் தெரிய வந்தது.

இதில் இன்னொரு சுவாரஸ்ய தகவலும் கிடைத்தது. முதல் முறை வாக்களித்தவர்களில் இளம்பெண்கள் மாநில அரசின் செயல்திட்டங்களின் அடிப்படையிலும், இளைஞர்கள் சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவு அளித்திருப்பதும் தெரிய வந்துள்ளது. அதாவது ஒரே வயதாக இருந்தாலும் இளம்பெண்கள், இளைஞர்களின் சிந்தனை வேறு வேறாக இருக்கிறது. என்றாலும், அவர்கள் எந்தக் கட்சிக்கு வாக்களித்தோம் என்பதை வெளிப்படையாக கூற மறுத்துவிட்டனர். எனினும், நம்முடைய கேள்விகளுக்கு அவர்கள் அளித்த பதில்கள் மூலம், யாருக்கு வாக்களித்தார்கள் என்பதை கிட்டத்தட்ட யூகிக்க முடிந்தது.

முதல்முறையாக வாக்களித்த அனுபவம் எப்படி இருந்தது?, யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதில் பெற்றோரின் தலையீடு இருந்ததா?, உங்கள் வாக்கு தேசிய கட்சிக்கா? அல்லது மாநில கட்சிக்கா?, எதன் அடிப்படையில் வாக்களித்தீர்கள்?, உங்களைக் கவர்ந்த தமிழக அரசின் திட்டங்கள் என்னென்ன? ஆகிய கேள்விகளை முன்வைத்தோம். சேலம் வடக்கு சட்டமன்றத் தொகுதியில் முதல் தலைமுறை வாக்காளர்கள் சிலரைச் சந்தித்தோம். அவர்கள் கூறியதாவது..

 Interesting facts about who the first generation voted for

அக்ஷய பிரியா(பி.எஸ்சி., மாணவி): முதல்முறையாக வாக்குச்சாவடிக்கு வந்து  வாக்களித்ததே ஜாலியான அனுபவமாக இருந்தது. யார் அதிகாரத்திற்கு வந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு கிடைக்குமோ அதை மனதில் வைத்தும், புதியவர்கள் அதிகாரத்திற்கு வர வேண்டும் என்பதை கருத்தில்கொண்டும் வாக்களித்தேன்.

 Interesting facts about who the first generation voted for

பூர்ணிமா(பி.இ., மாணவி): ஒரு குடிமகளாக வாக்களிப்பது நமது கடமை. யாருக்கு ஓட்டுப் போடணும் என்று அப்பா, அம்மா உட்பட யாருடைய தலையீடும் இல்லாமல் நானாக சிந்தித்து வாக்களித்தேன். யார் வந்தால் நல்லது செய்வாங்களோ அவர்களுக்கு வாக்களித்தேன். நான் தேசியக் கட்சிகளுக்கு வாக்களிக்கவில்லை. மாநிலக் கட்சிக்குதான் வாக்களித்தேன். இப்போதுள்ள அரசு செயல்படுத்தி வரும் நலத்திட்டங்களில் உள்ள நல்லது, கெட்டது பற்றி எனக்கு எதுவும் தெரியாது.

 Interesting facts about who the first generation voted for

அகல்யா(பி.காம்., சி.ஏ., மாணவி): முதல் முறையாக வாக்களிக்கப் போகிறோம் என்பதே சந்தோஷமாகத்தான் இருந்தது. எங்களுக்குனு ஒரு அடையாள அட்டை கிடைத்திருக்கிறது. தமிழகத்தில் இப்போதுள்ள அரசும் நல்லாதான் செயல்படுகிறது. இன்னும் சிறப்பாக இருந்தால் நன்றாக இருக்கும்.

சவுந்தர்யா(எம்.ஏ., மாணவி, அகல்யாவின் சகோதரி): இந்த நாட்டுக்கு ஒரு நல்ல தலைவரை தேர்ந்தெடுக்கப் போகிறோம் என்ற பொறுப்பை எங்களிடம் கொடுத்திருக்கிறார்களே என்று பெருமையாக இருக்கிறது. நானும், என் சகோதரி அகல்யாவும் ஒரு தேசியக் கட்சிக்குதான் ஓட்டுபோட்டோம். நாடு நல்ல நிலையில் செல்ல வேண்டும் என்பதாலும், வலிமையான பிரதமர் வேண்டும் என்பதாலும் வாக்களித்தோம். இப்போதுள்ள மத்திய அரசும், தமிழகத்தில், திமுக அரசும் நன்றாகத்தான் செயல்படுகிறது.

 Interesting facts about who the first generation voted for

நிவேதா(பி.ஏ., மாணவி): முதன் முதலாக வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தது புது அனுபவமாக இருந்தது. நல்லவங்களுக்கு ஓட்டு போட்டிருக்கேன். பாரம்பரியான தேசியக்கட்சி ஆட்சிக்கு வரவேண்டும் என்று சிந்தித்து வாக்களித்தேன். அரசு கலைக் கல்லூரியில் படிக்கிறேன். தமிழக அரசின் மகளிருக்கான இலவச பேருந்து திட்டமும், புதுமைப்பெண் திட்டமும் பிடித்திருக்கிறது.

 Interesting facts about who the first generation voted for

வெற்றிவேல் (பி.இ., மாணவர்): 140 கோடி மக்களுக்கான அரசை தேர்ந்தெடுக்கப் போகிறோம் என்ற பொறுப்பை உணர்ந்து எல்லோருமே வாக்களிப்பது அவசியம். வாக்குப்பதிவு குறைவதை தடுக்க, இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தலாம். வெளியூர்களில் வேலைக்குச் சென்றவர்களால் சொந்தஊருக்குச் சென்று வாக்களிக்க முடியாததும் வாக்குப்பதிவு குறைய முக்கிய காரணம். தமிழ்நாட்டில் படித்தவர்கள் அதிகமாக இருந்தும், போதிய வேலைவாய்ப்பு இல்லாததால் வெளிமாநிலங்களுக்கு வேலை தேடிச்செல்வது அதிகரித்துள்ளது. அதனால் நம் மாநிலத்திலேயே புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். அதற்கு புதிய சிந்தனையுடன் புதியவர்கள் ஆட்சிக்கு வரவேண்டும். நம்மை நாம்தான் ஆள வேண்டும் என்பதை மனதில் வைத்து வாக்களித்தேன். தமிழ்நாட்டில் இதற்கு முன்பும் கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் புழக்கத்தில் இருந்தாலும், இப்போது அதிகமாக புழக்கத்தில் இருக்கிறது. எங்கள்  கல்லூரியில் ஜூனியர் மாணவர்கள்கூட கஞ்சா பயன்படுத்துவதை நேரடியாக பார்த்திருக்கிறேன். இதுவரை ஆட்சியில் இருந்த கட்சிகளுக்கு வாக்களிக்காமல், புதியவர்கள் அதிகாரத்திற்கு வர வேண்டும் என்ற எண்ணத்தில் வாக்களித்திருக்கிறேன். இங்கு எல்லோருக்கும் எல்லாமும் போய்ச் சேருவதில்லை. சாமானியர்களால் எந்தத் தேவையையும் பூர்த்தி செய்து கொள்ள முடியாத நிலை உள்ளது.

 Interesting facts about who the first generation voted for

பிரதீப்குமார் (பி.இ., மாணவர்): வாக்களிப்பது நமது கடமை என்பதால், முதல் தலைமுறை வாக்காளர்கள் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும். யாருக்கு ஓட்டுப்போட வேண்டும் என்பதில் யாரும் தலையிடக்கூடாது என்று என் பெற்றோரிடம் ஏற்கெனவே கூறிவிட்டேன். பிறரை குற்றம் சொல்வதை விட, நான் அதிகாரத்திற்கு வந்தால் என்ன செய்யப்போகிறேன் என்று சொல்வதை வைத்து வாக்களித்தேன். இதுவரை மாறி மாறி ஆட்சியில் இருந்தவர்கள் எந்த வகையிலாவது மக்களை ஏமாற்றிக் கொண்டுதான் இருந்துள்ளனர். எனக்கு தேசியக் கட்சிகள் மீது பெரிதாக ஆர்வம் இல்லாததால், மாநிலக் கட்சிக்குதான் வாக்களித்தேன். மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்பதை யார் தொடர்ந்து முன்வைத்து வருகிறார்களோ அவர்களுக்கு வாக்களித்தேன். ஏற்கனவே ஆட்சியில் இருந்தவர்கள் மீண்டும் அதிகாரத்திற்கு வருவதை விரும்பவில்லை. அதனால் புதியவருக்குதான் வாக்களித்தேன்.

 Interesting facts about who the first generation voted for

பவித்ரா (பிகாம்., மாணவி): முதல்முறையாக ஓட்டு போட்டபோது நான் கொஞ்சம் பெரிய பொண்ணாகிட்டேன் என்றும், பொறுப்புமிக்க குடிமகள் ஆகிட்டேன் என்ற உணர்வும் ஏற்பட்டது. எனக்கு மட்டுமின்றி, எல்லோருக்கும் நல்லது நடக்க வேண்டும் என்று யோசித்து வாக்களித்தேன். என்னைப்போன்ற இளம் தலைமுறையினருக்கு தரமான கல்வி கிடைக்க வேண்டும். ஒரே கல்வித் தகுதி இருந்தும் சிலருக்கு முன்னுரிமை கிடைக்கிறது. சிலர், சில காரணங்களால் ஒதுக்கப்படுகின்றனர். இப்படி எந்த விதமான மத, சாதி வேறுபாடுகளும் இருக்கக்கூடாது என்றுயோசித்து வாக்களித்தேன். சாதி, மத வேறுபாடுகளின்றி எல்லோரையும் சமமாக நடத்த வேண்டும். தமிழக அரசின் பெண்களுக்கு இலவச பேருந்து திட்டம், மாணவ, மாணவிகளுக்கு ஸ்காலர்ஷிப் திட்டங்கள் பிடித்திருக்கிறது. எல்லோருக்கும் இந்த அரசு உணவு கொடுப்பது பிடித்திருக்கிறது. நான் ஒருமாநிலக் கட்சிக்குதான் வாக்களித்தேன்.

 Interesting facts about who the first generation voted for

அக்ஷயா (பி.ஏ., தமிழ்): எனக்கு வாக்காளர் அடையாள அட்டை கிடைத்ததில் இருந்தே முதன் முறையாக வாக்களிக்கப் போவதை எண்ணி ஆர்வமாக இருந்தேன். இந்த நாட்டுக்கு பிரதமரை தேர்ந்தெடுக்க வாக்களிக்கப் போகிறோம் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது. இதுவரை ஆட்சியில் இருக்கும் கட்சிக்குதான் வாக்களித்தேன். அவர்களை ஆதரிப்பதன் மூலம் மேலும் நல்ல திட்டங்கள் கிடைக்கும் என நம்புகிறேன். பெண்களுக்கு இலவச பஸ், மூவலூர் ராமாமிர்தம் திட்டத்தின் கீழ் மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் தருவது மேற்படிப்புக்கு உதவியாக இருக்கிறது. தமிழக அரசு, பெண்களுக்கு முன்னுரிமை கொடுத்து செயல்படுகிறது. பெண்களை ஊக்குவிக்கும் விதமாக மகளிர் உரிமைத் தொகை கொடுப்பதைவரவேற்கிறேன். இதை பிச்சை என்று சிலர் விமர்சிப்பதை ஏற்க முடியாது. நாம் யாரை தேர்ந்தெடுத்தோமோ அவர்கள்தான் நமக்கு உரிமைத் தொகையாக தருகிறார்கள். அதை பிச்சை என்றுசொல்ல முடியாது.

 Interesting facts about who the first generation voted for

சுரேகா (பி.இ., மாணவி): முதல் முறையாக தேர்தலில் வாக்களித்தது மகிழ்ச்சியாக இருக்கு. மக்களுக்கு நல்லது செய்யும் கட்சிக்கு ஓட்டுப் போடும்படி அம்மா சொன்னாங்க. அவர் சொன்ன கட்சிக்கே வாக்களித்தேன். மாநிலக் கட்சிக்குதான் வாக்களித்தேன். இலவச பஸ் திட்டமும், மகளிருக்கு உரிமைத்தொகை திட்டமும் பிடிச்சிருக்கு. குறிப்பாக, பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த அரசு செயல்படுகிறது.

 Interesting facts about who the first generation voted for

பூஜா மற்றும் ராகுல்: ராஜஸ்தான் மாநிலம்தான் எங்களுடைய பூர்வீகம். தமிழ்நாட்டில் செட்டில் ஆகிவிட்டோம். நாங்கள் பிறந்தது, படித்தது எல்லாம் இங்குதான். எங்கள் மாநிலத்தை விட தமிழ்நாட்டு கலாச்சாரமும், உணவும் பிடித்திருக்கிறது. ஆனாலும் நாங்கள் தேசியக்கட்சிக்குதான் வாக்களித்தோம். இவ்வாறு இளம் தலைமுறை வாக்காளர்கள் தங்கள் அனுபவங்களையும், கருத்துகளையும் பகிர்ந்துகொண்டனர்.

Next Story

2 வருட காதல்... இளைஞர் எடுத்த விபரீத முடிவு - சேலத்தில் பரபரப்பு

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Boyfriend lost their life because girlfriend's marriage was arranged with someone else

சேலம் மாவட்டம் அயோத்தியா பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ்(27). இவர் அதே பகுதி சேர்ந்த இளம் பெண் ஒருவரை கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இதுகுறித்து  கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரகாஷ் தனது வீட்டு பெரியவர்களின் மூலம் அப்பெண்ணின் வீட்டிற்கு சென்று பெண் கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு பெண் வீட்டார் தரப்பில் இருந்து முதலில் வீட்டை கட்டி முடியுங்கள், பிறகு திருமணத்தை பார்த்துக் கொள்ளலாம் எனக் கூறப்படுகிறது.

இதையடுத்து வீடுகட்டும் பணியில் பிரகாஷ் தீவிரமாக ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில் அந்தப் பெண்ணிற்கு அவரது பெற்றோர்கள்  வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து பிரகாஷ் தனது பெற்றோரிடம் பெண்ணின் வீட்டில் சென்று மீண்டும் திருமணத்திற்கு பேசுமாறு கூறியிருக்கிறார். ஆனால் அவரது பெற்றோர் அதனை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று காலதாமதம் செய்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் விரக்தி அடைந்த பிரகாஷ் நேற்று முன்தினம் விஷம் அருந்தி மயங்கி கிடந்துள்ளார். இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் பிரகாஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.